Wednesday 28 November 2018

கானல் நீர்!!!

சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு!  மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது போன்ற பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு முன் இங்கு மழையிலும் சில்லென்று உறைய வைக்கும் குளிர் காற்றிலும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருக்கும் நம் மக்களைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீராய் பாலைவனமாய் இருந்த இந்த நாடு கடந்த 40 வருடங்களில் மாட மாளிகையும் அழகு கோபுரங்களுமாய் தகதகக்கிறது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்தைக்காக்க, எல்லாவற்றையும் துறந்து ஆண்கள் இங்கே வேலை தேடி வருவது மட்டும் நின்றபாடில்லை. இப்போதெல்லாம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களின் படிப்பிற்கேற்றாற்போல வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இங்கே வேலைக்கு கூலித்தொழிலாளர்கள் காலை ஐந்து மணியிலிருந்து தங்களது தொழிற்கூடங்களுக்கு அழைத்துச்செல்ல வரும் பேருந்துகளுக்காக அங்கங்கே காத்து நிற்பார்கள். அப்போதெல்லாம் எங்களின் உணவகம் அவர்களுக்காகவே காலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு சுடச்சுட இட்லியும் சாம்பார், வடையுமாய் காத்திருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வடை அல்லது இட்லியைப்போட்டு அதன் மீது சாம்பாரை ஊற்றி வாங்கிச்செல்வார்கள். வெளியே வாங்கும் சாப்பாடு கட்டுபடியாகாதவர்கள் ஒருத்தருக்கொத்தர் முறை போட்டுக்கொண்டு ஒருத்தர் சமைப்பது, இன்னொருத்த‌ர் பாத்திரங்கள் கழுவுவது, இன்னொருத்தர் காய்கறிகள் அரிந்து தருவது என்று நாட்களை கடத்துவார்கள். வெள்ளிக்கிழமையானால் தாய் நாட்டுக்கு உறவுகளை அழைத்துப்பேசுவதும் அழுவதும் கலங்குவதும் எப்போதுமே நடக்கும். அப்போதெல்லாம் மொபைல் கிடையாது என்பதால் உறவுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துப்பேசுவதற்கும் அத்தனை சீக்கிரம் தொட ர்பு கிடைக்காமல் தாவு தீர்ந்து விடும்.
இதில் எத்தனையோ சோகங்கள்! எத்தனையோ கண்ணீர்த்திவலைகள்!! எத்தனையோ பிரச்சினைகள்!!முதலில் குறிப்பிட்டிருந்த படி, சில நாட்களுக்கு முன் எங்கள் நண்பர் வீட்டில் ஒரு சோகம். கணவர் வெளி நாட்டில் வேலை செய்து குடும்ப‌த்தைக் காப்பாற்றிக்கொண்டு, பொருளாதார நிலையால் ஊருக்குக்கூட சில வருடங்களாகவே போகாமலிருந்தார். மனைவி எப்போதும்போல அவர் அனுப்பும் பணத்தில் சிக்க‌னமாக செல்வு செய்து கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, பாதுகாத்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொன்டிருந்த மூத்த பெண் திடீரென்று ஒரு நாள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. பதறி, அழுது, பல நண்பர்களை வைத்து தேடியதில் அந்தப்பெண் தன் மனதுக்குப்பிடித்தவனுடன் சென்று விட்டது தெரிந்தது. இவர்கள் வீடு வசதியான, கெளரவமான வீடு என்பதால், கீழ் நிலையில் இருந்த அவனுடைய குடும்பம் யோசனை செய்து பெண்ணுக்குத்தாலி கட்டி, காவல் நிலையத்துக்கும் சென்று பாதுகாப்பும் செய்து கொண்டது. ஒரே ஊர் வேறு! இவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று அழுது, முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுகிறோம் என்று வீட்டுக்கு அழைத்துப்பார்த்தும் அந்தப்பெண் வர மறுத்து விட்டது. ' என்னைப்பொறுத்த வரை என் பெண் செத்து விட்டது' என்று பெண்ணின் தாயார் அழுத அழுகை நினைவை விட்டு மறைய‌ மறுக்கிறது. வெளி நாட்டில் வாழும் தந்தையோ அவளை நான் தலை முழுகி விட்டேன் என்று சொல்லி அழுகையோடு ஃபோனை வைத்து விட்டார். மூன்று நான்கு முறை அந்தப்பெண்ணின் தாயாரிடம் இங்கிருந்து கூப்பிட்டு பேசிய போதும் அவரின் குமுறலுக்கும் அழுகைக்கும் வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. பெற்றோர் தன் மீது வைத்த பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அருமையாக வளர்த்த பெண் கொடுத்த விலை இது!

முன்பெல்லாம், அதாவது 50 வருடங்களுக்கு முன்னால் மொபைல், தொலைபேசிகளின் அதிகப்படியான புழக்கங்கள் இல்லாத காலத்தில், ஊரில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியாக வெளிநாட்டிலிருந்து வீடு திரும்ப முடியாது. என் கணவரின் மூத்த சகோதரர் அரேபியாவிலும் [ அப்போதெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் சேர்ந்து அரேபியா என்றழைக்கப்பட்டது ] அடுத்த சகோத‌ரர் அஸ்ஸாமிலும் வேலை செய்து கொண்டிருந்த போது அவர்களின் தந்தை [ என் மாமனார் ] இறந்து போனதற்கு, அவர்களின் முகத்தினை க‌டைசியாகப் பார்க்க‌க்கூட வர முடியவில்லை. வீட்டுக்குக் கடமையாற்ற செல்ப‌வர்கள் அடிக்கடி கொடுக்கும் விலை இது!

முன்பு எங்கள் உண‌வகத்தில் மூன்று வேளையும் சாப்பிட ஒரு த‌மிழ் நண்பர் வருவார். இங்கே துறைமுகத்தில் நல்ல‌தொரு வேலையில் பல வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லிச் சென்றார். சில மாதங்கள் சென்ற பின் என் கணவ‌ரின் இளைய சகோதரரிடம்  'உங்கள் சகோதரரின் உண‌வகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு சொல்லுங்கள் ' என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணத்தையும் என் கணவரின் சகோதரரே சொன்னார். இங்கே பாலைவனத்தில் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் மனைவி பெயரில் நிலமாகவும் ஆபரண‌ங்களுமாக வாங்கி சேமித்து விட்டுத்தான் அவர் ஊருக்குச் சென்றிருக்கிறார். சென்றதுமே அவரின் மனைவி ' நான் வேறு ஒருத்தரை இனி வாழ்நாள் முழுவத‌ற்குமாக சார்ந்து விட்டேன். என் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இனி எனக்கே சொந்தம் ' என்று சொல்லி விட, அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட அவர் மறுபடியும் சாதாரண நிலைக்குத் திரும்பவே அதிக நாட்கள் பிடித்ததாம். நாங்களும் அதிர்ச்சியில் உறைந்து போனோம்! இது மனைவி மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு கணவன் கொடுத்த விலை! அதே போல ஒற்றையாய் தனிமையில் குடும்பத்தை கவனித்துக்கொண்டு கணவனுக்காக ஒரு தவம் செய்வது போல மனைவி காத்துக்கொண்டிருக்க, வெளி நாட்டில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஆண்களின் கதைகளும் தொடர்ந்து கொன்டு தானிருக்கிறது!

மனைவியின் அன்பு, கணவனின் அக்கறை, குழ‌ந்தையின் மழலை, பெற்றவர்களின் பாசத்தவிப்பு, குடும்பம் என்ற குதூகலம், ஆசுவாசம்  என்று இவை அத்தனையையும் புறந்தள்ளினால் தான் பொருளாதார நிலை மேம்படும் என்றால் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போக வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனம்! அதுவரை இந்த அத்தனை சந்தோஷங்களும் கானல் நீர் தான்!!



21 comments:

Geetha Sambasivam said...

ஒவ்வொரு நிகழ்வும் மனதை வேதனையில் ஆழ்த்தியது. இப்படியும் மனிதர்கள் இருப்பதை நினைத்தால் வெட்கமாயும் இருக்கு.

கோமதி அரசு said...

மனைவியின் அன்பு, கணவனின் அக்கறை, குழ‌ந்தையின் மழலை, பெற்றவர்களின் பாசத்தவிப்பு, குடும்பம் என்ற குதூகலம், ஆசுவாசம் என்று இவை அத்தனையையும் புறந்தள்ளினால் தான் பொருளாதார நிலை மேம்படும் என்றால் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போக வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனம்! அதுவரை இந்த அத்தனை சந்தோஷங்களும் கானல் நீர் தான்!!//

உண்மை உண்மை.
அனுபமுத்துக்கள் மிக அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனையான வாழ்வுதான்
குடும்பத்தைக் காப்பதற்காக, குடும்பத்தைவிட்டு விலகி உழைப்பவர்கள்
கொடுக்கும் விலை அதிகம்

துரை செல்வராஜூ said...

இங்கு நிலவும் நிலைமையினை அப்படியே காட்டுகின்றது தங்கள் பதிவு...

ஆனாலும் மனம் கனப்பதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்!...

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

இப்படியும் மனிதர்களா என்று நினைக்க வைத்தது. கணவன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிக்க மனைவி இப்ப்டி விட்டுப் போவது....குழந்தைகள்? அப்புறம் ஆண்கள் வேறு குடும்பம் நடத்துவது...இதற்கு கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்கலாமே.

கானல்நீர் நல்ல தலைப்பு. ஆனால் மனது வேதனையானது.

துளசிதரன், கீதா

வெங்கட் நாகராஜ் said...

படிக்கும் நமக்கே வேதனை தான் என்றால் அவர்களுக்கு - யோசிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது.

பல வெளியூர் பணியாளர்களின் நிலை இப்படி மோசமாகவே இருக்கிறது.....

மனோ சாமிநாதன் said...

இங்கு 42 வருடங்களாக வாழ்வதில் இப்படிப்பட்ட வேதனைகளை அவ்வப்போது சந்தித்து வருகிறேன். அது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது. கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

உண்மை! இங்கு வாழ்பவர்கள் கை நிறைய சம்பாதிகிறார்களோ, இல்லையோ, நிறைய விஷயங்களை அதற்கு விலையாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோத்ரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் இனிய நன்றி துளசிதரன்/கீதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

Anuprem said...

மிக வருத்தமான நிகழ்வுகள் ...

அந்த பெண் தன் தாய் , தந்தையரை நினைத்து இருந்தால் இது நடக்காமலே இருந்துக்கலாம் ..

இரண்டாம் நிகல்விலும் ..

என்ன சொல்வது மனம் கனக்கிறது

ஸ்ரீராம். said...

தான் ஓரிடம், குடும்பம் ஓரிடம் என்று இருக்கும் நிலையில் என்னென்ன சோதனைகள்...

Jaleela Kamal said...

இரண்டாம் நிகழ்வு ரொம்ப கொடுமை

மனோ அக்கா எப்படி இருக்கீங்க இப்ப எங்க இருக்கீறீர்கள்

Jaleela Kamal said...

மனோ அக்கா எப்படி இருக்கீங்க

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

ஜலீலா, எப்படி இருக்கிறீர்கள்? கம்ப்யூட்டர் கோளாறால் உடன் பதில் தர முடியவில்லை. நான் இப்போது துபாயில் தான் இருக்கிறேன் செவ்வாய் வரை. அன்றிரவு ஊருக்கு செல்கிறேன். என் வாட்ஸ் அப் நம்பர் 8220807006ல் தொடர்பு கொள்ளுங்கள்