Tuesday 13 November 2018

ரசித்த திரைப்படம்!!!

சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன்!
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்ப‌டி சில படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒரு சிலராவது  தங்கள் கடந்த கால இளம் வயது வாழ்க்கையைத் திரும்பி பார்க்க வைக்கும்… அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் நடித்திருக்கிற 96!


ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவுக்கும், ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கும் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதல், பிரிவு, என்று நகரும் படம், திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான திரிஷாவும் திருமணம் செய்துகொள்ளாமல் தனது காதல் நினைவுகளோடு வாழும் விஜய் சேதுபதியும் சந்திக்கும் போது, தனது காதல் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல், அதே சமயம் அதை மறைக்கவும் முடியாமல் ஜானு தவிக்க, அதே நிலையில் விஜய் சேதுபதியும் இருந்தாலும், திரிஷா வேறு ஒருவடைய மனைவி என்ற எல்லைக் கோடு இருப்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு அவர்களின் காதல் வலியை படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்பத்துவது தான் ‘96’ படத்தின் கதை.

94 முதல் 96 வரை, பத்தாம் வகுப்பு பயின்ற ராமச்சந்திரனும் ஜானகி பெயர் இருப்பதால் எஸ்.ஜானகி பாடலை பாடும் பள்ளி வயது த்ரிஷாவான ஜானுவும் அந்த வயதிற்கே உரிய பசுமையான காதலில் மிதக்கிறார்கள். அது காதலென்பது அவர்களுக்கே புரியாத உணர்வாக இருக்கிறது. ஒரு முறை ஜானு நிறைய நாட்கள் விடுமுறையில் இருக்கும்போது தான் ராமச்சந்திரன் அதை உணர்கிறான். அவனுடைய காதல் பக்தியாக இருக்கிறது. ஆழமாக அழுத்தமாக இருக்கிறது. பேசாமலும் சரியாக நிமிர்ந்து கூட பார்க்காமலிருந்தாலும் தயக்கமாக தடுமாறி அவன் பேசும்போது, துள்ளலும் சிரிப்பும் மலர்ந்த முகமுமாக இருக்கும் ஜானு அவனிடம் மனதால் நெருங்குகிறாள்.



விடுமுறையில் அனைவரும் இருக்கும் போது ராமச்சந்திரன் குடும்பச்சூழ்ல் காரணமாக வேறு ஊருக்குப்போக நேருகிறது. அடுத்த வருடம் புது வகுப்பில் அவனைக்காணாது தவிக்கும் ஜானுவுக்கு, நண்பர்கள் மூலம் அவன் ஊரை விட்டுச் சென்று விட்டது தெரிந்து துடிக்கிறாள். தன்னை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டவாறே, பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியிலும் கால் பதித்து, தந்தையின் வற்புறுத்தலில் இன்னொருவனின் மனைவியாகி சிங்கப்பூருக்குச் செல்கிறாள்.

பயண ஓளிப்படக் கலைஞராக இருக்கும் விஜய் சேதுபதி (இராமச்சந்திரன்), ஒரு கல்லூரியிலும் ஒளிப்படம் தொடர்பான வகுப்பு எடுக்கிறார். தன்னுடைய மாணவர்களை ஒளிப்படம் தொடர்பான பயணச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, கொள்ளிடத்தில் வெள்ளம் என்பதால் தஞ்சை வழியே பயணப்பட நேரிடுகிறது. விடியற்காலை வெளிச்சத்தில் தஞ்சை அவரின் சிறு வயது நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறது. தான் படித்த பள்ளியை ஒவ்வொரு அங்குலமாக பார்த்து ரசிக்கிறார்.




தன் கூட பழகிய நண்பர்களை வாட்ஸ் அப் மூலம் ஒன்று சேர்த்து மூன்று மாதம் கழித்து ஒரு தேதியில் சந்திப்பதாக முடிவு செய்கிறார். எல்லோரும் அந்த நாளன்று சென்னையில் சந்திக்கிறார்கள்.

எல்லோருக்கும் பிரியமான ஜானுவும் சிங்கப்பூரிலிருந்து தனியே வருகிறாள். அனைவருட‌னும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாலும் ராமச்சந்திரனைத்தேடி ஜானுவின் கண்கள் அலைகின்றன. ஜானு வந்து விட்டாள் என்பது தெரிந்ததும் தனியே போய் தயக்கமாக நின்று கொண்டிருக்கும் ராமச்சந்திரன் அவளே வந்து பேசும்போது தயக்கமாகப்பேசுவதும் காதலை வெளிகாட்டாமல் அடக்கி வைப்பதும் பம்முவதுமாய் அதே பத்தாம் வகுப்பு மாணவனைத் திரும்பவும் கொன்டு வருவது ரசனையான காட்சி!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு சற்று நம்மை வியக்க வைக்கிறது.

தான் விரும்பியவன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து அவனுக்கு பெண் பார்க்க துடிப்பதும்  வீட்டுக்கு கூப்பிடும் விஜய் சேதுபதியை பார்த்து  ‘இந்திர லோக மேனகை,ஊர்வசி,ரம்பைகளை அதே டிரஸ்சில் அனுப்பினாலும் அவங்களை பத்திரமா பாத்துப்படா நீ’ என தன் காதலன் மீதான நம்பிக்கையை சொல்வதும் கடைசியில் பிரிவை தாங்க முடியாமல் உடைந்து அழுதுவதும் அத்தனை அழகு. திரிஷா என்கிற கதாபாத்திரத்தை மறந்து, ஜானுவாகவே தெரிகிறார்.

40-ஐ தொடும் ஆண் மகன் தன் காதலியைப் பார்த்து படும் வெட்கம், ‘தனக்கானவனை தவறவிட்டுவிட்டோமே’ என்கிற ஒரு கட்டத்தில் கதறி அழும் திரிஷாவின் தவிப்பு,  பள்ளிப் பருவத்தில் இயல்பாக மலரும் தோழமை, உள்ளுக்குள்ள் குமுறும் காதலை மனதின் ஆழத்தில் ஆழ்த்தி இன்னொருவன் மனைவி என்ற மரியாதையுடன் நடத்தும் ராமச்சந்திரனின் கண்ணியம், தன் வீட்டில் அவளின் சிறு சிறு பொருள்களை பொக்கிஷமாக பாதுகாத்து வ்ருவதை வெகுளித்தனத்துடன் அவளிடம் காண்பிக்கும்போது ஏற்படும் நெகிழ்வு, என பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குநர்.




விஜய்சேதுபதி - த்ரிஷா ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவு தான் படத்தின் பலம். பள்ளியில் பலமுறை விஜய்சேதுபதி கேட் டும் ஒருமுறைகூட பாடாத ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை விஜய் சேதுபதியின் வீட்டில் அந்த இரவில் த்ரிஷா பாடும் தருணமும், அப்போது விஜய்சேதுபதியின் பரவசமும் ரசனையானவை.

இவர்களின் பின்னணி பள்ளி பருவக் காட்சிகளில் வரும் ஆதித்யா (எம்.எஸ். பாஸ்கரின் மகன்) மற்றும் கௌரி கிஷன் இவர்களின் நடிப்பும் அருமை. 96 காதல் கதை என்பதால் அடிக்கடி வரும் இளையராஜாவின் பாடல்கள் 35 வயதைக் கடக்கும் அனைவரையும் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது.

பழைய காதலியுடன் அந்த ஒருநாள் இரவுப் பொழுது. கரணம் தப்பினாலும் விரசமாகிவிடும். ஆனால் எந்த நெருடலும் இல்லாமல், எல்லை தாண்டாமல், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் மன உணர்வுகளை வைத்தே காட்சிப்படுத்தியதில் நம்மையும் நெகிழ்த்தி, அழகாய் நிமிர்ந்து நிற்கிறது மொத்த படமும்.

ராம், ஜானு, அவர்களின் கதை, இசை என எல்லாமுமாக சேர்ந்து நினைவுகளை கிளறிவிடுவதால் நமக்கும் கடந்தகாலத்திற்கு ஒரு நடை போய்விட்டு வந்த அனுபவம் நேர்கிறது.

13 comments:

துரை செல்வராஜூ said...

புதிய திரைப்படங்களைப் பார்த்தே வெகு நாட்களாகி விட்டன...

தங்களது விமர்சனம் மனதை நெகிழ்த்துகின்றது...

ஸ்ரீராம். said...

நிறைய பேர்களுக்குப் பிடித்திருக்கிறது. ரொம்பவே புகழ்ந்து விட்டார்கள் என்பதாலோ என்னவோ, என்னால் ரசிக்க முடியவில்லை!​

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா நல்ல விமர்சனம்...நீங்கள் பாசிட்டிவாக எழுதியிருக்கீங்க...சிலர் நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்தாங்க...போர் என்று...

படம் பார்க்கவில்லை...

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் ரசித்துப் பார்த்தப் படம்
விமர்சனம் அருமை
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான விமர்சனம்...

Geetha Sambasivam said...

தீபாவளி அன்று படம் போட்டப்போப் பார்க்க முடியலை! முடிஞ்சால் பார்க்கணும். உங்க விமரிசனம் ஆவலைத் தூண்டுகிறது.

மனோ சாமிநாதன் said...

நானும் எப்போதாவது தான் தமிழ் சினிமா பார்ப்பேன் துரை.செல்வராஜ் சார்! இது ரெவ்யூ படித்து அதன் பிறகு இங்கே துபாய் தியேட்டரில் பார்த்த படம்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உங்களுடைய விமர்சனம் மிகவும் வித்தியாசமாக இருந்தது சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

நீங்களும் ரசித்துப்பார்த்திருப்பது மிகவும் மகிழ்வைத்தருகிறது சகோதரர் ஜெயக்குமார்! பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

Bhanumathy Venkateswaran said...

தீபாவளி மாலை இந்தப்படத்தை சன் டி.வியில் போட்டார்கள். அதனால் முழுமையாக பார்க்க முடியவில்லை. எனக்கு இதே தீமில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார் நடித்த புஷ்பா தங்கதுரையின் கதையாகிய 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படம் நினைவுக்கு வந்தது.