Wednesday 27 September 2017

அச்சுறுத்தும் பிளாஸ்டிக்!!

சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் உபகரணங்கள் நம் வாழ்க்கையில் எந்தெந்த விதங்களில் விளையாடுகின்றன என்பதை ஒரு புத்தகத்தில் விரிவாகப்படித்த போது மனம் அதிர்ந்து போயிற்று. ஓரளவு இந்த பிளாஸ்டிக் உபகரணங்கள் எந்த அளவு ஆபத்தை விளைவிக்கின்றன என்பது தெரியுமென்றாலும் அதை விரிவாகப்படித்தபோது அவற்றை எல்லோரும் அறிய இங்கே விரிவாகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இந்த பதிவு!! 

நாம் காலை எழுந்து பல் துவக்குவதிலிருந்து இரவு பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக் தான். நாம் உபயோகிக்கும் அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் மயமாகி விட்டது. நம் வாழ்க்கையில் அது நிரந்தரமாகக் கலந்து பின்னிப்பிணைந்து இருக்கும்போது அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தால் மட்டுமே நம் உடலிலும் வாழ்க்கையிலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள‌முடியும்!

பிளாஸ்டிக் பொருள்களில் சூடான உணவை வைக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள‌ ரசாயனம் நம் உடலில் கலந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ ரசாயங்கள் நம் உடல் உறுப்புகளை தாக்கி பலவித நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றன.

தாலேட்ஸ் என்னும் பொருளைப்பயன்படுத்தி பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இது தான் பிளாஸ்டிக் பொருள்களை வளைக்கவும் மென்மையாக்கவும் செய்கிறது. இதில் ஏழு வகை தாலேட்ஸ் அபாயகரமானவை. தாலேட்ஸ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப்பயன்படுத்துவதால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருள்களிலும் அதன் கீழ்ப்புறம் முக்கோண வடிவத்துள் ஒரு எண்ணைப்பொறித்திருப்பார்கள். அந்த எண்னை அடிப்படையாகக்கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருள் எந்த மூலக்கூற்றை அடிப்படையாகக் கொன்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதை எத்தனை நாட்களுக்குப்பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டில் டப்பாவின் கீழ்ப்புறம் எண் 1 என்று அச்சிடப்பட்டிருந்தால் அது ' பெட்' என்று சொல்லப்படும் ' பாலிஎத்தின் டெரிபதலேட்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. பொதுவாய் தண்ணீர், ஜூஸ் போன்றவை இந்த பாட்டிலில்தான் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த பாட்டில்களை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். நாள்பட பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இந்த வகை பிளாஸ்டிக் தானாகவே சிதையும் தன்மை கொண்டது. அதனால் இந்த வகை பாட்டில்களில் ‘ crush the bottle after use ‘ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.



முக்கோண வடிவின் உட்புறம் 2 என்ற எண் இருந்தால் இந்த வகை பிளாஸ்டிக் ' ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை என்று அர்த்தம். ஷாம்பூ பாட்டில்கள், பெளடர் டப்பாக்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

முக்கோணத்தினுள் 3 என்ற எண் 'பாலிவினை குளோரைடால்' உருவாக்கப்பட்டவை. மேஜை விரிப்புகள், விளையாட்டுப்பொருள்கள் இதனால் உருவாக்கப்பட்டவை.

முக்கோணத்தினுள் 4 என்ற எண் இருந்தால் அவை லோ டென்சிட்டி பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டவை. இதை எப்போது வேண்டுமானாலும் அழித்து மீண்டும் உருவாக்கலாம். பிளாஸ்டிக் கப், நியூஸ் பேப்பர், கடைகளில் கொடுக்கப்படும் கவர்கள் போன்றவை இவற்றால் உருவாக்கப்பட்டவை.

எண் 5 குறிக்கப்பட்ட பொருள்கள் பாலி புரோபைலீனால் உருவாக்கப்பட்டவை. இது எல்லாவற்றையும் விட சிறந்தது. ஐஸ்க்ரீம் கப், ஸ்ட்ரா போன்ற பொருள்கள் இந்த வகை மூலக்கூறால் உருவாக்கப்பட்டவை.

எண் 6 கொண்டு குறிக்கப்பட்ட பொருள்கள் பாலிஸ்ட்ரீன் என்ற மூலக்கூறால் ஆனவை. இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மிகவும் ஆபத்தானவை. பிளாஸ்டிக் ஸ்பூன், கப், போர்க் முதலியவை இந்த வகையைச் சார்ந்தவை.

என் 7 குறிக்கப்பவை பாலிகார்போனைட் பைஸ்பினால் என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. இந்த பிளாஸ்டிக் பொருள்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் கான்ஸர், இதய நோய் வரலாம். இப்போது பிரபலமாக இருக்கும் டிபன் பாக்ஸ்கள் இந்த மூலக்கூறால் ஆனவையே. அதனால் அதை அடிக்கடி மாற்றுவது நல்லது.



பிளாஸ்டிக் டப்பாக்களின் அடியில் 1, 2, 5 என்று குறியீடுள்ளவை உணவுப்பொருள்கள் வைப்பதற்காக தரமாகத் தயாரிக்கப்பட்டவைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது. வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தை உண்டாக்கும். இதில் உணவுப்பொருள்கள் வைத்தால் அவற்றில் விஷம் ஏறி ஆபத்தை விளைவிக்கும். எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை வாங்கவே வாங்காதீர்கள்.

நல்ல பிளாஸ்டிக் என்கிற ஒன்று கிடையவே கிடையாது. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தெடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளார்கள். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என்பதை இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

பொருளாதாரத்தில் வமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்தபோது, அதில் 275 வகையான ரசாயங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

எந்த  பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது.  எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.


குழந்தைகளுக்கான பொருள்களை வாங்கும்போது  [BPA FREE], [ PHTHALATES FREE], [ P.V.C FREE] என்று குறிப்பிட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவெனில் சமைக்க எவ்வளவு  பெரிய பிராண்டாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப்பயன்படுத்தக்கூடாது. கண்ணாடி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கு வாங்கும் தண்ணீர் பாட்டிலின்  எண் 2, 4 , 5 என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.  

21 comments:

ஸ்ரீராம். said...

மிக அவசியமான பதிவு. இப்போது நம்மை பிளாஸ்டிக் ஆக்கிரமித்திருக்கும் வகையில் இவற்றைக் கண்டறிந்து தவிர்ப்பது சிரமம் என்றாலும் முடியாதது இல்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முடிந்தவரை பிளாஸ்டிக்கைத் தவிர்க்கிறோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்திகள்
அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய
பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு சகோதரியாரே
நன்றி

middleclassmadhavi said...

அறிய வேண்டிய தகவல்கள், பகிர்வுக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...

பிளாஸ்டிக் பற்றி அறியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். விவரமாக சொன்னமைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

எத்தனை ஆபத்துகள் இருக்கிறது. பொதுவாக பெட் பாட்டிலில் தான் நான் தண்ணீர் கொண்டு செல்கிறென்......அடிக்கடி மாற்ற வேண்டும்....என்ன ஆபத்து என்று சொன்னாலும் ப்ளாஸ்டிக் பயன்பாடு குறைவதில்லை..பெருகி வருவதாகத்தான் தெரிகிறது..

கீதா: மனோக்கா முன்பெல்லாம் ப்ளாஸ்டிக் அத்தனை நுழையாக காலத்தில் அதாவது ஒரு 30, 35, 40 வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் பித்தளைப் பானை, எவர்சில்வர் வாளி, இரும்பு அலுமினியம் வாளி, பித்தளை அண்டா இவைஎல்லாம் தான் குளியலறையில் இருந்தன. எங்கள் வீட்டில் இவைதான் இருந்தன. அப்புறம் ப்ளாஸ்டிக் நுழைய ஆரம்பித்ததும் எல்லாம் ப்ளாஸ்டிக் மயமாக ஆகிவிட்டது. என் கல்யாணத்திற்குப் ப்ளாஸ்டிக் பொருட்களே சீரில் வைக்கவில்லை. எல்லாமே எவர்சில்வர், இரும்பு, பித்தளை, மட்டுமே....டப்பாக்கள் எல்லாமே அலுமினிய டப்பா அல்லது எவர்சில்வர் டப்பாக்கள். வெண்கல உருளி, கல்சட்டி என்று.. இப்போதும் நான் அவற்றைத்தான் பயன்படுத்துகிறேன். டிஃபன் பாக்ஸ் கூட எவர்சில்வர் தான் எப்போதுமே...பாட்டில்கள் கண்ணாடி பாட்டில்கள், பீங்கான் என்றுதான் வீட்டில் பயன்படுத்தல். நான்ஸ்டிக் கூடப் பயன்படுத்துவதில்லை. அது போன்று ப்ளாஸ்டிக் என்பவை இந்தக் கேக் செய்யும் சாமான்கள் அளப்பதற்கானவை என்று வெகு சில. மற்றபடி ஃப்ரிட்ஜில் தண்ணீர் வைப்பதற்குக் கூட எவர்சில்வர் பாட்டில்கள்தான். என்று...எதற்கும் ப்ளாஸ்டிக் இல்லை. மெதுவாக பாலித்தீன்/ப்ளாஸ்டிக் பைகளையும் குறைத்து வருகிறேன். க்லயாணங்களில் தரப்படும் ஜூட் பேக் அல்லது துணிப்பைகளைச் சேர்த்து வைத்து அவற்றைத்தான் பயன்படுத்தி வருகிறோம்....என்னதான் பயன்படுத்தலாம் என்று சில ப்ளாஸ்டிக் வகைகளைச் சொன்னாலும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதுதானே இல்லையா? ஆனால் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே...ஸ்வீட் கடைகளில் இருந்து ஆவின் வரை எல்லாமே ப்ளாஸ்டிக் பாட்டில், கவர் டப்பா என்றுதான் வருகின்றன....நாம் கூடியவரை பயன்பாட்டைத் தவிர்க்கலாம் தான்

உங்கள் பதிவு நல்ல விளக்கமானத் தகவல் பதிவு அக்கா...அருமை...

ராஜி said...

பாட்டிலின் பின் இந்த குறியீடுகள் இருக்கும். நான் பார்த்திருக்கேன். ஆனா என்னன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். பகிர்வுக்கு நன்றிம்மா

துரை செல்வராஜூ said...

முடிந்தவரைக்கும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நமது தலையாய கடைமை..
இது இந்த மண்ணுக்குச் செய்யும் மாபெரும் கடமையாகும்..

பயனுள்ள விவரங்களைப் பதிவில் தந்தமைக்கு நன்றி..

சீராளன்.வீ said...

வணக்கம் !

இத்தனை வருடம் அறியாதவைகளை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

saamaaniyan said...

வணக்கம் அம்மா, நலமா ?

நீண்ட கால நன்மை தீமைகளை ஆராயாமல் புழக்கத்தில் விடப்பட்ட அன்றாட தேவைகளுக்கான கண்டுபிடிப்பில் முதல் இடத்தில் இருப்பது பிளாஸ்டிக் பொருட்கள் !

இவற்றின் தீமை பற்றி மேலை நாடுகளில் உள்ள விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. முக்கியமாய் அவற்றின் குறியீடுகள் பற்றிய அறிவு ! இதனை எளிமையாய் விளக்கியுள்ளீர்கள். அவசியமான பதிவு.

நன்றியுடன்
சாமானியன்

எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு அம்மா...
பிளாஸ்டிக் தவிர்ப்போம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மாதவி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

நீண்ட கருத்துரைக்கும் பயனுள்ள‌ கருத்துக்களுக்கும் அன்பு நன்றி கீதா! நீங்கள் சொல்கிற மாதிரி ஆவின் மற்றும் எல்லா பால் பாக்கெட்டுகளும் பிளாஸ்டிக்கில்தான் வருகின்றன. ஆனால் ஸ்வீட் கடைகளில் இப்போதெல்லாம் அலுமினிய ஃபாயில் கவர்களில் கொடுக்கிறார்கள். அட்டைப்பெட்டிகளில் ஸ்வீட் கொடுத்தால்கூட ஒரு துண்டு வாழையிலையில் வைத்துக் கொடுக்கிறார்கள். இப்படியே காலம் நல்லவிதமாக மாறும் என்று நம்புவோம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சீராளன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சாமானியன்!