Monday 30 June 2014

வாழைப்பூ வடை!!

ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஒரு சமையல் குறிப்பு.

வடைகளில் பலவிதம் இருக்கின்றன. பருப்பு வகைகள் சேர்த்து வடை, காய்கறிகளில் வடை, கோழி, கறி என்று அசைவ வகைகளில் வடை என்று ருசிகரமாகச் செய்ய பல குறிப்புகள் இருக்கின்றன. ஒரு மாறுதலுக்காக இங்கே வாழைப்பு வடை செய்யும் குறிப்பு வருகின்றது.

அத‌ற்கு முன் வாழைப்பூ பற்றி சில வரிகள்.




வாழைப்பூவில் மருத்துவ குணங்கள் அதிகம். வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், நீரிழிவு இவைகளை நீக்கும். இதைப் பொரியலாகவோ அல்லது பயத்தம்பருப்புடன் அல்லது துவரம்பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவோ செய்து சாப்பிட்டால் உஷ்ணபேதி,இரத்தமூலம், சீதபேதி இவை சரியாகும். சமையலில் இதை கூட்டாக, பொரியலாக, உசிலியாக செய்து சாப்பிடுவது மட்டுமல்லாது அடை, வடை இப்படி பலகாரங்களாகச் செய்தும் சாப்பிடலாம்.

இப்போது வாழைப்பூ வடை பற்றிய குறிப்பு:

வாழைப்பூ வடை:


தேவையானவை:

ஆய்ந்த வாழைப்பூ இதழ்கள்‍‍ 2 கப்
கடலைப்பருப்பு‍ அரை கப்
துவரம் பருப்பு அரை கப்
வற்றல் மிளகாய் 4
சோம்பு 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டிதழ்கள் 8
கொத்தமல்லி இலை அரை கப்
கறிவேப்பிலை சில இலைகள்
தேவையான உப்பு, வடை பொறிக்க எண்ணெய்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
 
செய்முறை:

வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, வாழைப்பூவை இவைகளை பொடியாக அரியவும்.

பருப்பு வகைகளை வற்றல் மிளகாயுடன் போதிய நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நீரை அறவே வடித்து, சோம்பு, தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து மஞ்சள் தூளும் சிட்டிகை உப்பும் சேர்த்து குழைய வதக்கி ஆற வைக்கவும்.
பிறகு அரைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும்.

உருண்டைகள் செய்து, அவற்றை வடைகளாகத்தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

சுவையான வாழைப்பூ வடை தயார்!!


10 comments:

priyasaki said...

வாழைப்பூ வடை ரெம்ப பிடிக்கும்.என் மாமியார் நன்றாக செய்வார். நான் இதுவரை செய்ததில்லை.வாழைப்பூ கிடைத்தால் கண்டிப்பா செய்யனும். பகிர்வுக்கு நன்றி அக்கா.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழைப்பூ வடை செய்முறைகளும், படங்களும் மிகவும் அருமை. ;)

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நாட்டுக் காய்களை வைத்து செய்யும் சமையல் முறை தற்போது அரிதாகிவிட்டது. இத்தருணத்தில் நம் உடலுக்கு உகந்த நன்மை
பயக்கும் வாழைப்பூவில் அருமையானதொரு சமையல் குறிப்பு
தந்துள்ளீர்கள். மிக்க நன்றி மனோம்மா. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நானும் இதே போலதான் செய்வேன்மா...சுவையான பிடித்த வடை!!

unmaiyanavan said...

எனக்கு ரொம்ப பிடிச்சதில் இந்த வாழைப்பூ வடையும் ஒன்று.
செய்முறையை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. பார்க்கவே ஜோரா இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான வடை.... ஓரிரு முறை சாப்பிட்டதுண்டு.... இன்னும் செய்யும் ஆசை வரவில்லை! :)

சிகரம் பாரதி said...

இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

kowsy said...

செய்து பார்க்க ஆசைதான் . இங்கு வாழைப்பூ கிடைப்பது அருமை . கிடைக்கும் போது செய்து பார்க்கின்றேன் . மிக்கநன்றி