Monday 8 July 2013

வலி!! -பகுதி-3!!

பகுதி-3!!
நல்ல, நிம்மதியான வாழ்க்கை முறைகள் மட்டுமே ஒரு மனிதனுக்கு உடலால் ஏற்படும் துன்பங்களை சமாளிக்கும் வல்லமையைத் தருகின்றது. அவற்றில் உடற்பயிற்சிகள், உணவுப்பழக்கங்கள், தினசரி பழக்க வழக்கங்கள், நல்ல உணர்வுகள் மட்டுமே முக்கிய அங்கம் வகிக்கின்றன.

தவறான உணவுப்பழக்கங்களே நோய்களுக்கு முழு முதல் காரணமாகி விடுகிறது.

நம் உணவுப்பழக்கத்தில் அனைத்து உணவும் சரிவிகிதமாக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள் மற்றும் அதிக இனிப்பில்லாத பழங்கள் சேர்க்கப் பழக வேண்டும். உணவு குறைத்து உண்டு 40 நிமிடங்களுக்குப்பிறகு பழங்கள் உண்பது உடலுக்கு வேண்டிய் சத்துக்களைத் தரும். சாப்பிட்ட உடனேயே பழங்கள் அல்லது இனிப்புகளை உண்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் உண்ணும் உணவிலுள்ள அமிலங்கள் ஜீரணமாவதற்கு முன்பேயே பழங்களை உடனே உண்ணும்போது அதிலுள்ள சத்துக்கள் எல்லமே நீர்த்துப்போய் விஷமாக மாறி விடுகிறது.  
முதிர்ந்த வயதில் இருப்பவர்கள் குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெட்சப் இவைகளை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே உணவுப்பொருள்களில் உப்பைக் குறைத்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் வீணாவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று துரித உணவு கடைகளுக்குச் சென்று கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது. இதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக இன்றைய தலலமுறைகள் துரித உணவுகளைத் தவிர்க்கவேண்டும். Palm oil, தேங்காய் எண்ணெய், நெய் இவற்றில் கரையாத, முழுமையான கொழுப்பு அதிக சதவிகிதத்தில் உள்ளதால் இவற்றை சமையலில் உபயோகிக்காமல் இருப்பது நல்லது
.
சாப்பிட்ட பின் எக்காரணம் கொண்டும் உடனேயே படுக்கக்கூடாது. உள்ளே சென்ற உணவு ஜீரணிக்காமலேயே பல தொந்தரவுகளைக் கொடுக்கும். உடல் உப்புவதும் தொந்தி விழுவதும் இந்தக் காரணங்களால் தான். இரண்டு மணி நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதையோ, எழுதுவதையோ செய்யலாம். இந்த சிறிய எளிதான பயிற்சி உணவை ஜீரணிக்க வழி செய்கிறது.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதேயில்லை [ விக்கல் ஏற்பட்டாலொழிய!] நாம் உண்ணும் உணவு நீர்த்துப்போய் அதன் சக்திகள் விரயமாகின்றன. அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி என்னும்போழுது, யோகாசனங்கள் செய்வது மிகவும் நல்லது. நல்ல ஒரு ஆசிரியரிடம் கற்ற பின்னர் தான் செயல்படுத்த வேண்டும். முடியாதவர்கள் நடைப்பயிற்சியை தினமும் செய்யலாம்.

அப்புறம் பழக்க வழக்கங்கள்.  நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளல், அவசரமின்றி நிதானமாக எந்த செயலையும் செய்வது, மற்றவர்களுக்கு கூடிய வரை உதவுவது, இன்முகத்துடன் பழகுவது-இதெல்லாம் நம்மை நாமே நிதானப்படுத்திக்கொள்ள உதவும். எதையுமே திட்டமிட்டுக்கொண்டு நேரம் முறையாக வகுத்துக்கொண்டு செயல்படுத்தும்போது, மேற்கூறிய பழக்க வழக்கங்களெல்லாமே சாத்தியமாகின்றன. புதிய நோயாக மருத்துவர்கள் சொல்லும் STRESS நம்மைப் பாதிக்காமல் இருக்கும்.

நோயென்று வரும்போது அலட்சியப்படுத்த வேண்டாம். சின்ன சின்ன வலிகளையும் பிணிகளையும் நாம் கை மருத்துவத்தாலேயே சரி செய்து கொள்ள முடியுமென்றாலும் வித்தியாசமான வலி எதையும் நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் நேரம் காலம் பார்க்காமல் சென்று விடுங்கள். முன்பே ஒரு புகழ் பெற்ற தொடரில் ஒரு மருத்துவர் எழுதியிருந்தார், ‘உங்களுக்கென்று ஒரு FAMILY DOCTOR-ஐ  வைத்துக்கொள்ளுங்கள். சிறு சிறு உடல நலக்குறைவுகளை அவரே சரி செய்து விடுவார். பிரச்சினை சற்று பெரியதாக இருந்தால் அவரே அதற்கான மருத்துவரிடம் செல்ல வழி நடத்துவார்.’ என்று!! இது ஒரு சிறந்த புத்திமதி! நானும் இதை கடைப்பிடித்து வருகிறேன்.

உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகள், துணைவருக்கு அறுவை சிகிச்சை அல்லது மோசமான உடல் நலக்குறைவு ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அது சம்பந்தமான குறிப்புகள், முக்கியமான ஸ்கான் போன்றவைகளின் நகல்கள் இவை அடங்கிய ஃபைல் அவசரத்திற்கு உடனேயே எடுக்கும் இடத்தில் வைப்பது மிக நல்லது. முக்கியமான விபரங்களை கணினியில் அவ்வப்போது புதுப்பித்து பல நகல்களை எடுத்து என் மகனின் கார், எங்கள் கார், என் கைப்பைகள், ஊரிலும் என் கைப்பை இவற்றில் வைத்திருக்கிறேன். பிரச்சினை வரும்போது உடனேயே மருத்துவரிடம் காண்பிக்கவும் அவர் உடனடியாக முடிவெடுத்து வைத்தியம் ஆரம்பிக்கவும் இது வெகுவாக உதவும். பிரச்சினைகள் தீவிரமாக இருந்தால் நம் பதட்டத்தில் விபரங்களை முழுமையாகச் சொல்ல மறந்து விடுவோம். அப்போது இது கண் கண்ட மருந்தென உதவும். இந்தக்குறிப்பில் விபரங்களுடன் உங்கள் இரத்த க்ரூப் விபரம், விலாசம், தொலைபேசி எண்கள் பதிவது நல்லது. மருந்துகள் ஒவ்வாமை இருந்தால் அவற்றின் பெயர்களளயும் குறிப்பது மருத்துவர்களுக்கு மிக உதவும். இந்தியாவிலும் இங்கும் பல மருத்துவர்கள் இதற்காக என்னை பாராட்டியிருக்கிறார்கள்.

கடைசியாக நல்ல வார்த்தைகள். இதற்கு முன் எத்தனையோ அனுபவங்கள் இருந்தாலும் கடந்த அனுபவம் என்னை நிலை குலைய வைத்த நேரத்தில் முகமறியாத, முன் பின் பழகாத எத்தனையோ பேர் அந்த மருத்துவ மனையில் தானாக வந்து என் கைகளைப்பிடித்துக்கொண்டு ‘ குணமாக ஆரம்பித்து விட்டாரா உங்கள் கணவர்? கடவுள் தான் காப்பாற்றினார் ! ’ என்று சொல்லி மகிழ்ந்தார்கள்! பல அரேபியப் பெண்ண்மணிகள், பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள், தாதியர் என்று இப்படிச் சொன்னவர்களின் வார்த்தைகள், அவை தந்த இதம் உடம்பாலும் பணத்தாலும் செய்யும் உதவிகளை விடவும் மேலானது. மனதுக்கு நம்பிக்கையையும் நெகிழ்வையும் தரக்கூடிய வல்லமை படைத்தவை அவை. சில இந்தியப் பெண்கள் அடிக்கடி குணமடைந்து கொண்டிருக்கும் நோயாளிகள் நிரம்பிய வார்டிற்கு வந்து ஒவ்வொரு படுக்கையாக சென்று அவர்களின் நோய் பற்றி விசாரித்து, ‘ கவலைப்படாதீர்கள், குணமடைந்து விடுவார்கள்’ என்று சொல்லி, தட்டிக்கொடுத்துச் செல்கிறார்கள். அவர்களின் ஆறுதல் மொழிகள் மருந்துகளை விடவும் பலம் வய்ந்தவை. முன் பின் தெரியாத யார் யாரோ அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறி,
‘ என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள், செய்து தருகிறோம் அம்மா’ என்று கூறிய வார்த்தைகள் வலியால் துவண்டு போன மனதை மயிற்பீலி கொண்டு தடவிய இதத்தை அளித்தன!

இதற்கு கொஞ்சம் அக்கறையும் கொஞ்சம் கருணையும் மட்டும் தான் வேண்டும். யாராயிருந்தாலென்ன? வார்த்தைகளுக்கா பஞ்சம்? ஒத்தடம் கொடுப்பது போன்ற இனிய வார்த்தைகளைக்கூறவும், இதம் தரும் கருணையைக் காட்டவும் நம் எல்லோராலும் முடியும்தானே?  
 

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும் அதிகாலை நடராஜா சர்வீஸ் மிகச் சிறந்தது...

எல்லாவற்றையும் விட முடிவில் சொன்னது சத்தியமான உண்மை... உண்மையான சிறிய ஆறுதல் வார்த்தை மனதிற்கு அசுர பலம் + புத்துணர்ச்சி கொடுக்கும்...

தொடர வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.

கடைசி இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளவை பாதிப்புக்கு உளானவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கக்கூடியவை.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள பதிவும்மா...நோயாளிகளுக்கு மருந்தைவிட ஆறுதலான வார்த்தைகளே மிக முக்கியம்.

RajalakshmiParamasivam said...

நீங்கள் சொல்வது போல் மனதிற்கு ஆறுதல் தருவது மனதிற்கு ஒத்தடம் அளிக்கும் வார்த்தைகளே. நானும் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
அருமையான பதிவு.

கீதமஞ்சரி said...

மிக மிக பயனுள்ள பதிவு இது. முதலில் நோய்வராமல் காக்கும் வழிமுறைகளும், மருத்துவரிடம் போகவேண்டி வந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், ஏற்பாடுகளும், நோயுற்றவருக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் அளிக்கப்படும் ஆறுதல் வார்த்தைகளும் என வாழ்க்கையின் பல முக்கியக் கட்டங்களை எளிதாக கடந்துவர ஏற்ற ஆலோசனைகள். பலருக்கும் பயன்படும் அருமையானதொரு பகிர்வுக்கு மிகவும் நன்றி மேடம்.

Jaleela Kamal said...

மிக அருமையான பதிவுடன் உங்களின் சிறந்த அறிவுரைகளும் கண்டிப்பாக இங்கு வாசிப்பவர்கள் அனைவருக்கும் உதவும்.

Jaleela Kamal said...

உங்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை
புது வீடு மாறிட்டு கூப்பிடுகிறேன் என்றீர்களே மனோ அக்கா..

ADHI VENKAT said...

பயனுள்ள பகிர்வு. கடைசியில் கூறியது உணமை.. ஆறுதலான வார்த்தைகளே ஒருவரை கவலையிலிருந்து மீட்டெடுக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் பயன் தரும் பகிர்வு. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

நோயாளிகளுக்கு மருத்துவத்தை விட அதிகம் தேவை ஆறுதலான வார்த்தைகள்தர்ன் - மிகச் சரியாகச் சொன்னீர்கள்.அருமையான பதிவு நன்றி.

நிலாமகள் said...

அருமையாகச் சொன்னீர்கள்!! அனைவரும் பின்பற்ற வேண்டிய குறிப்புகள். தங்கள் அனுபவமெனும் மாபெரும் ஆசான் நாங்களும் அநேகம் கற்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

சிதறிய சிந்தனை முத்துகள் சிறப்பானவை ..பாராட்டுக்கள்..

Vijiskitchencreations said...

நல்ல பயனுள்ள பதிவு + நல்ல ஆறுதல் அளிக்ககூடியது.

மாதேவி said...

நன்றாக தந்துள்ள்ளீர்கள்.

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை தந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அளித்தமைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

மிக அழகிய பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஜலீலா! உங்கள் வலைத்தளம் வந்து என் ஈமெயில் விலாசம் தருகிறேன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி சகோதர்ர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி விஜி!!