Monday 28 May 2012

ஆதங்கம்!


அனுபவங்களும் மரணமும் நம் கூடவே வரும் நிழல் மாதிரி! பிரிக்க முடியாதவை! இந்த வேதாந்த உண்மை ஒரு பச்சிளங்குழந்தையின் விஷயத்தில் மனதில் உரைக்க மறுக்கிறது.
சென்ற வாரம் மனதை வருத்திய இரண்டு சம்பவங்கள்.
முதலாவது ஒரு குழந்தையைப்பற்றியது. இந்தக் குழந்தையின் வீட்டில் கோழிக்கறி சமைத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்ட தந்தை, மகன் இருவருக்குமே சாப்பிட்டதெல்லாம் உடனேயே வெளியில் வர மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த 2 வயது குழந்தை இறந்து விட்டது. காரணம் சாப்பிட்ட கோழிக்கறியாக இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒரு வேளை பக்கத்து வீட்டில் கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்து, அது காற்றில் பரவி இந்தக் குழந்தையைப் பாதித்திருக்குமோ என்றும் சந்தேகம். பொதுவாக, ஒரு வீட்டில் கரப்பான் பூச்சிகளுக்கான மருந்தை ஸ்பிரே செய்யும்போது, குளியலறை, டாய்லட், சமையலறைக்கதவுகளை இறுக்க மூடி விடவேண்டும். எங்கள் வீட்டில் மருந்து அடிக்கும்போது, எந்தெந்த அறைகளில் மருந்து அடிக்கிறோமோ, அந்த அறைகளைப் பூட்டுவதுடன் கீழே கதவு இடைவெளியிலும் டர்கி டவல் கொண்டு இறுக்கமாய் நூல் இடைவெளி கூட இல்லாது மூடி விடுவோம். இந்த மாதிரி சமயங்களில் சமையலறைக் கதவுகளையும் இது போல மூடுவோம். பூச்சி மருந்தின் தாக்கம் அந்த அறைகளை விட்டு வெளியே சிறிதும் வராது. இந்த மாதிரி செய்ய மறந்தால், அந்த விஷக்காற்று, பாத்ரூம் ஜன்னல் வழியே அடுத்த ஃப்ளாட்டிற்குப் போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரியும் இங்கு குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன முன்பு.
குளிர்சாதனப்பெட்டியை எதற்குத்தான் உபயோகிப்பது என்பது கணக்கிலேயே இல்லாமல் போய் விட்டது இப்போதெல்லாம். தேவையில்லாத பொருள்களை அங்கு வைப்பது மட்டுமில்லை, சமைத்த உணவுப்பொருள்கள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு சேகரித்து வைக்கப்படுகின்றன. சாதாரணமாக சமைத்த ஒரு பொருளை ஃபிரிட்ஜில் வைத்து, அதை மறுநாள் சூடுபடுத்தும்போதே அது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது என்கிறார்க.ள் ஆராய்ச்சியாளர்கள். பாக்டீரியாக்கள் உருவாவதும் நாட்கணக்கில் சேமித்து வைக்கும் இறைச்சி, உணவுப் பொருள்களால் இரப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதுடன் ஒரு வகையான விஷ வாயுவும் இறைச்சி மற்றும் உணவுப்பொருள்களினின்றும் பரவுகிறது என்கிறார்கள் உனவு சம்பந்தமான வல்லுனர்கள். இந்தக் குழந்தை எதனால் இறந்தது என்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை, ஆனால் மனதை மிகவும் பாதித்தது இந்தத் தளிரின் மரணம்.
இரண்டாவதும் ஒரு மரணம் பற்றியது தான். என் சினேகிதியின் தாயார் படுக்கையில் விழுந்திருப்பது பற்றியும் அவர்கள் மன உணர்வுகள் பற்றியும் முன்பே இங்கு எழுதியிருக்கிறேன். அவர்கள் சென்ற வாரம் காலமாகி விட்டார்கள். அதற்குப்பிறகு தான் பிரச்சினையே ஏற்பட்டிருக்கிறது. மின் தகனம் செய்வதற்காக ஏற்பாடு செய்ய என் சினேகிதியின் மகன் சென்றிருந்த போது, இறப்புச் சான்றிதழ் கொண்டு வந்தால்தான் தகனம் செய்ய முடியும் என்றதுடன் அப்படி கொண்டு வந்தாலும் ஒரு நாளைக்கு 5 பேருக்குத்தான் தகனம் செய்ய வேண்டுமென்ற கணக்கு இருக்கிறது, இதற்கு நீங்கள் முன்கூட்டியே முன் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார்களாம். ‘ எது எதற்குத்தான் முன் பதிவு செய்ய வேண்டுமென்று வரை முறை இல்லையா? இதற்கு எப்படி முன் பதிவு செய்ய முடியும்?’ என்று என் சினேகிதி தொலைபேசியில் அழுத போது, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு. அன்று முழுவதும் அருகிலுள்ள மருத்துவர்களிம் அலைந்தாலும் ‘ இந்த அம்மாவுக்கு சிகிச்சை ஒரு தடவையாவது அளித்திருந்தால்தான் நான் சான்றிதழ் தர முடியும்’ என்று அனைத்து மருத்துவர்களும் மறுத்து விட்டார்களாம். அதுவரை சிகிச்சை தந்த மருத்துவர் வெளியூரில். ஒரு வழியாய் அவர் மறு நாள் நண்பகலில் வந்து இறப்புச் சான்றிதழ் தந்த பிறகு தான் காரியம் முடிந்திருக்கிறது!!

19 comments:

Angel said...

மனம் பதை பதைக்கிறதக்கா .பாவம் அந்த சிறு குழந்தை .
//சமைத்த உணவுப்பொருள்கள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு சேகரித்து வைக்கப்படுகின்றன. //
குறிப்பா வெளிநாட்டில் வேலை செய்யும் இருவரும் இருக்குமிடத்தில் இப்படி செய்கிறார்கள் கிலோ கணக்கில் கத்திரிக்காயை வாங்கி பொரித்து ஃப்ரீசரில் போட்டு வைக்கும் ஒரு பெண்மணி எனக்கு தெரியும் .லிவர் டேமேஜ் ஆனபின் இப்போ வருந்துகிறார் .இப்படி குளிர்பெட்டியில் வைக்கும்போருட்களை மைக்ரோவேவ் மூலம் சூடுபடுத்தும்போது இன்னமும்கேடுஅல்லவா.வேதனையான விஷயம் .தாமே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு .


மனிதாபிமானமே இல்லா மக்கள் எதற்குதான் முன்பதிவு என்பதே கிடையாதா

குறையொன்றுமில்லை. said...

சே, மனிதாபிமானமற்ற செயல்கள் படிக்கும் நமக்கே தாங்கமுடியலியே பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்படி இருக்கும்?

ஹுஸைனம்மா said...

முதல் செய்தி.. தன் கையால் சமைத்து, ஊட்டியும்விட்ட அந்தத் தாயின் நிலை...
செய்தித்தாளில் வாசித்ததில், அவர் சிக்கனை அப்போதுதான் வாங்கி சமைத்தார் என்றும், பழையதல்ல என்றும் கூறப்பட்டிருந்தது. இருந்தாலும், ஃப்ரிட்ஜ் குறித்தவை கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

சம்மர் முழுமையாக ஆரம்பிக்கக்கூட இல்லை, அதற்குள் எத்தனை ஃபுட் பாய்ஸன் செய்திகள்... ஒரு மாதம் முன் 9 வயது சிறுவன் இறந்தான்..

இரண்டாவது.. இதுக்குமா புக் பண்ணி வைக்கணும்!!!???? ஆண்டவா..
மேலும், சிகிச்சையளித்த டாக்டரிடமும் அட்வான்ஸா ஒரு ‘இறப்புச் சான்றிதழும்’ வாங்கி வச்சுக்கணும் போல... கொடுக்க மறுக்கும் டாக்டர்களின் நிலை புரிகிறது.. என்றாலும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டு நிகழ்வுகளும் மனதைக் கலங்கச்செய்கின்றன.

இரண்டாவது நிகழ்வு “இந்தியன்” படத்தை நினைவூட்டுகிறது.

மனோ சாமிநாதன் said...

குளிர்சாதனப்பெட்டியில் ரொம்ப நாட்களுக்கு உணவு சேமித்து வைப்பதன் தீமைகள் குறித்து நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின்! எங்கள் நண்பர், எங்களிடம் வெளி நாட்டு ஃப்ரிட்ஜ் வாங்கியவர், மறுபடியும் சந்திக்கும்போது சொன்னார்," இந்த ஃப்ரிஃட்ஜ் வரும்வரை, இட்லி மாவு, தோசைமாவு தீர்ந்து போனால், மறுபடியும் மாவு அரைக்கும்வரை உப்புமா, பொங்கல், பூரி என்றெல்லாம் கிடைத்தன. இப்போ 8 நாட்களுக்கு மாவு அரைத்து வைத்து விட்டு, தினமும் இட்லியும் தோசையும் தான்!"

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் லக்ஷ்மிம்மா, அந்தக் குழந்தையின் தாயாருக்கு எப்படி இருந்திருக்கும்!

கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நாளிதழில் அப்படித்தான் எழுதியிருந்தார்கள் ஹுஸைனம்மா! பாதிக்கப்பட்டவர்கள் இங்கே, என் வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில்தான் இருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் அப்பா இன்னும் மருத்துவ மனையில் தான் இருப்பதாகச் சொன்னார்கள் எனக்குத் தெரிந்த‌வர்கள். அதனால் ஃபுட் பாய்ஸன் என்று தான் சொன்னார்கள். வெளியில் தான் எந்த பொருளும் expiry தேதியைத்தாண்டி விற்பதில்லையே?

என் சினேகிதி மிகுந்த‌‌ நோயுற்று இறந்த அந்த‌த்தாயின் உட‌லை ம‌று நாள் வ‌ரை வீட்டில் வைத்துக்கொண்டு, ப‌ட்ட‌ துய‌ர‌ம் மிகுந்த‌‌ ப‌ரிதாப‌மாக இருந்த‌து.

MANO நாஞ்சில் மனோ said...

என்ன சொல்லி அழுவது...!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

இராஜராஜேஸ்வரி said...

எது எதற்குத்தான் முன் பதிவு செய்ய வேண்டுமென்று வரை முறை இல்லையா? இதற்கு எப்படி முன் பதிவு செய்ய முடியும்?

இரண்டு விஷயங்களுமே ஆதங்கம் கொள்ள வைத்தன.

pudugaithendral said...

:(((

'பரிவை' சே.குமார் said...

முதலாவது வருத்தம்.
இரண்டாவது கொடுமை... இப்படியும் இருப்பார்களா...

இரண்டுமே மனத வருடுகிறது அம்மா.

Kanchana Radhakrishnan said...

தாங்கமுடியலியே ......

VijiParthiban said...

மிகவும் கொடுமையான நிகழ்வுகள் இரண்டுமே...
நம் நாட்டில் எதற்கு முன்பாதி கேட்பதுதென்றே தெரியாமல் போயிடித்து மனோ அக்கா .

" கொடுமையான நிகழ்வு"

கே. பி. ஜனா... said...

படிக்கும்போதே பதை பதைக்கிறது மனம்.

மோகன்ஜி said...

படித்து மனசு கனமாய்ப் போனது சகோதரி!

கீதமஞ்சரி said...

உணவுக்கோளாறால் ஒன்றுமறியாக் குழந்தையின் மரணம் ஒரு பக்கம் வேதனை என்றால் மரணித்த அந்த முதியவரின் தகனம் மறுக்கப்படுவது இன்னொரு பக்கம் வேதனை. தகனத்துக்குக் கூடவா முன்பதிவு செய்யமுடியும்?

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

ஆமாம், இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் மனம் கனமாவதைத் தவிர வேறெதுவும் சொல்ல இயலுவதில்லை சகோதரர் மனோ!