Wednesday 17 May 2023

சர்க்கரை நோயும் சிறுநீரகமும்!!!!

 சர்க்கரை நோயின் தாக்கம் உடலின் பல உறுப்புகளை நாளடைவில் பாதிக்க ஆரம்பித்தாலும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் சிறுநீரகத்தை பல விதங்களிலும் கடுமையாக தாக்க ஆரம்பிகிறது. சிறுநீரகங்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன. சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரைக்களில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுகின்றன. நமது சிறுநீரகங்களில் மில்லியன் கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. இந்த நெஃப்ரான்கள் தான் நம் உடம்பில் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்கிறது. எனவே சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நெப்ரான்கள் கழிவுகளை வடிகட்டும் செயல்திறனை இழக்கின்றன. நாளடைவில் சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும். 


இந்த புரதம் கழிதல் சிறுநீரக பாதிப்பால் தான் வந்ததா அல்லது சர்க்கரை நோயை தவிர்த்து பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளுதல், தொண்டை வலி போன்றவற்றாலும் புரதம் கழிதல் வரும். கண்டு கொள்ளாமலோ, கண்டு பிடிக்காமலோ இருந்தால் 4-வது நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும், 5-வது நிலையை அடையும்போது யூரியா கிரியேட்டின் மிகவும் அதிகரித்து விடும். உடலில் தங்கி இருக்கும் அசுத்தங்கள் வெளியேற முடியாமல் தங்கி விட நேரும் போதுதான் கிரியேட்டின் உடலில் அதிக அளவில் இருக்கும். இது கடுமையான சிக்கல்களை உருவாக்கி விடும். சிலருக்கு சர்க்கரை நோய் உடலில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும்போதே இந்த புரதமும் சிறுநீரில் வெளியேறிக்கொண்டிருக்கும். நிறைய மருத்துவ மனைகளில் இந்த குறைப்பாட்டை கண்டு கொள்வதில்லை. சர்க்கரை நோய்க்கு மட்டுமே மருந்துகள் தருகிறார்கள். அதனால் நோயாளிக்கு தன் மிகப்பெரிய பிரச்சினை தெரிவதில்லை. வருடக்கணக்கில் இது தெரியாமலேயே இருந்து தாமதமாக யாராவது ஒரு மருத்துவரால் தெரிய வரும்போது புரதம் அதிகமாக வெளியேறும் நிலை வந்திருக்கும். 

நானும் ஒரு சிறுநீரக மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், “ மருத்துவ பரிசோதனைகளில் புரதம் அதிகமாக வெளியேறுகிறது என்று இருக்கும்போது அதை ஏன் நீங்கள் நோயாளிகளிடம் சொல்லுவதில்லை? “என்று! அதற்கு அந்த மருத்துவர் சொன்னார் “ நீங்கள் படித்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் அதைப்பற்றி சொல்கிறோம். ஆனால் பொதுவாக நோயாளிகளிடம் இதையெல்லாம் நாங்கள் சொல்லுவதில்லை. “ என்றார். எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு மருத்துவர் கிரியாட்டினினும் யூரியாவும் சரியான நிலையில் இருக்கும் வரை நாங்கள் புரதம் வெளியேறுவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எப்போது கிரியாட்டினின் இரண்டு பாயிண்டுக்கு மேல் போகிறதோ அப்போது தான் நாங்கள் மருத்துவம் செய்ய ஆரம்பிப்போம் “ என்றார். அதையே துபாயின் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவரும் ஆமோதித்தார். துபாயிலுள்ள என் குடும்ப மருத்துவரும் “ இந்தப்பிரச்சினைக்கு மருத்துவ உலகில் ஆரம்ப நிலையிலேயே இதை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ சிகிச்சை கிடையாது என்பது தான் உண்மை! “ என்றார்.

ஒரு சர்க்கரை நோயாளிக்கு மருத்துவ பரிசோதனையில் புரதம் வெளியேறுவது தெரிய வரும்போது, மருத்துவர் நோயாளிக்கு புரதம் வெளியேறும் அளவைப்பொறுத்து எந்த அளவு அவர் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் அவர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுதல் மிகவும் அவசியம். அதிர்ஷ்ட வசமாக, எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும் புரதம் வெளியேறுவதில்லை. சிலருக்கு மட்டுமே புரதம் வெளியேறுகிறது. ஜீன்ஸ் காரணம் என்கிறார்கள். வலிக்கான மாத்திரைகளில் பாரசிட்டமால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அலோபதியில் புரதம் கழிதல் நோயுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட அளவு புரதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். அசைவ உணவுகளில் அதிக சதவிகிதம் புரதம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு அவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். ஆனால் சித்த வைத்தியத்தில் அசைவ உணவுகளை அறவே அனுமதிப்பதில்லை. காளான் உணவுகளைக்கூட அவர்கள் மறுக்கிறார்கள். புரதம் வெளியேறும் அளவினை கணிக்க 24 hours urine test செய்வதுண்டு. 24 மணி நேரங்களில் வெளியேறும் சிறுநீரை சேமித்து கொடுக்கச் சொல்வார்கள். பரிசோதனை சாலையில் அந்த சிறுநீரில் எவ்வளவு புரதம் வெளியேறி இருக்கிறது, குறித்த அளவிற்குட்பட்டு இருக்கிறதா, அல்லது எந்த அளவு அதிகமாயிருக்கிறது என்று கணக்கிடுவார்கள். ஆனாலும் அளவுக்கு அதிகமாக வெளியேறும் புரதத்தை குறைக்க எந்த மருத்துவமும் கிடையாது. அதனால் 

சர்க்கரை நோயாளிகள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது மேற்சொன்ன பரிசோதனையும் கூடவே சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட பொட்டாஷியம், சோடியம், கிரியாட்டினின், யூரியா இவற்றுக்கான அளவுகளை பரிசோதனை செய்து சரி பார்த்துக்கொள்வதும் நல்லது. 


14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... சிரமம் தான்...

ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு. அலார்ம் ரைஸர். எத்தனை பேர்கள் இதைப்பற்றி அறிந்திருப்பார்கள்..

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் மனோ அக்கா நல்ல பயனுள்ள பதிவு. எல்லாமே அளவோடு நாம் உட்கொண்டாலே பல இன்னல்களைத் தவிர்க்கலாம். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புரதம் நிறைய எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் என் மகன் சொல்லுவான், எதையும் அதிகமாக உட் கொள்ள வேண்டாம். அளவோடு ஒரு கணக்கு வைத்துக் கொண்டு சாப்பிடலாம் என்று. எதுவுமே நல்லது என்பதற்காக அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல்தான்.

சர்க்கரை வியாதிக்கு அரிசி உணவைக் குறைத்து சிறுதானியம், கோதுமை எல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. சரி அப்ப கேழ்வரகு தோசை கூடக் கொஞ்சம் சாப்பிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். நிச்சயமாகக் கூடாது. அதுவும் அளவுதான். Low glycemic என்றாலும்.

நல்ல விளக்கமாகச் சொல்லியிருக்கீங்க. இதை எல்லோரும் அறிந்திருந்தால் மிகவும் நல்லது. நீங்கள் சொல்லுவது போல் வருடம் ஒரு முறை சோதித்துக் கொண்டு நாமே கொஞ்சம் நம்மை ஆராய்ந்து கொண்டு கவனமாக இருத்தல் நலம்தான்.

சில விஷயங்களுக்கு சித்தா, ஆயுர்வேதா கைகொடுக்கின்றன.

கீதா

Geetha Sambasivam said...

புரதம் வெளியேறுவதை நாமே கண்டுபிடிக்க முடியுமா?

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

நிறைய பேருக்கு இந்த புரதம் வெளியேறுவது பற்றின உண்மைகள், அதன் பாதிப்பு என்று எதுவுமே தெரிவதில்லை ஸ்ரீராம்! ஒரு பொறுப்பான மருத்துவர் நோயாளிடம் அக்கறை கொண்டு அதைப்பற்றி விளக்கி, உணவில், மருந்துகளில் எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று அறிவுரையை தக்க சமயத்தில் சொன்னால் மட்டுமே நோயாளிக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கிடைக்கிறது. ஆனால் அந்த மாதிரி மருத்துவர் ஆயிரத்தில் ஒருத்தராகத்தானிருப்பார்கள்.
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா! உபயோகமான பல கருத்துக்களை சொல்லியிருப்பதற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் கீதா சாம்பசிவம்!
இரத்தப்பரிசோதனைச்சாலைக்கு சென்று ' எனக்கு 24 மணி நேர சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால் ஒரு குடுவையை உங்களிடம் தருவார்கள். மறுநாள் முதன் முதலாக வரும் சிறுநீரை விட்டு விட வேண்டும். இரண்டாவதாக வரும் சிறுநீரிலிருந்து ஒவ்வொரு தடவையும் அந்த குடுவையில் சேமித்து வர வேண்டும். மறுநாள் முதலாக வரும் சிறு நீர் வரை சேமித்து அதைக்கொண்டு போய் உடனேயே பரிசோதனை சாலையில் கொடுத்து வர வேண்டும். அன்று மாலையே உங்கள் சிறுநீரின் மொத்த அளவு, எந்த அளவு புரதம் இந்த மொத்த சிறுநீரில் தேங்கியிருக்கிறது என்பதற்கான ரிஸல்டைக்கொடுத்து விடுவார்கள். இப்படி நாமே selfஆக டெஸ்ட் செய்து தேவைப்பட்டால் Nephrologist இடம் செல்லலாம்!

நெல்லைத் தமிழன் said...

புரதம் வெளியேறுதான்னு எப்படித் தெரியும்? வருடம் ஒரு முறை நாம் செய்துகொள்ளும் சோதனையிலா?

நெல்லைத் தமிழன் said...

கருத்திலேயே அதற்கான பதில் இருக்கிறது. நன்றி

துரை செல்வராஜூ said...

பயனுள்ள பதிவு..
அவ்வப்போது எனக்கும் இப்படியான பதற்றம் வருவதுண்டு..

துரை செல்வராஜூ said...

ஆதரவற்றோர் என்ன செய்வார்கள்?.. பாவம்..

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் நெல்லைத்தமிழன்!

புரதம் வெளியேறுவதை கண்டு பிடிக்கும் முறை பற்றி திருமதி கீதா சாம்பசிவத்திற்கு எழுதியுள்ளேன். துரதிர்ஷ்ட வசமாக, புரதம் சிறுநீரில் வெளியேறுவதை நம் உடல் எந்த விதத்திலும் உணர்த்தாது. பல வருடங்களுக்குப்பிறகு கூட, நம் உடலில் எந்த அடையாளமும் ஏற்படாது. மிக அதிகமாக புரதம் வெளியேறும்போது தான் சிறு நீர் அதிக நுரையுடன் வெளியேறும். இது ஒரு எச்சரிக்கை. அப்புறம் தான் கிரியாட்டினின் மெதுவாக ஏற ஆரம்பிக்கும்.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோதரர் செல்வராஜ்!

நீங்கள் சொல்வது மாதிரி, படிக்காதவர்கள், விபரம் புரியாதவர்கள் அதிகமாக புரதம் வெளியேற ஆரம்பித்ததும் கிரியாட்டினினும் யூரியாவும் அதிகமாக ஆரம்பித்து, கால்கள் வீங்கி அப்புறமாகத்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். டயாலிஸிஸ் சிகிச்சைக்குள் செல்லும்படியாகி விடுகிறார்கள்.