Wednesday 5 May 2021

முத்துக்குவியல்-61!!!

 வணங்க வைக்கும் முத்து:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்குட்டி அம்மா என்ற 74 வயதான காணி என்னும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மூதாட்டியை வன முத்தச்சி என்று அப்பகுதியினர் செல்லமாக அழைக்கின்றனர். கல்வி கற்பதற்காக 1950களிலேயே மலையை விட்டு இறங்கி வந்திருக்கிறார் இவர். அந்தக் காலத்தில் இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க அந்தப்பள்ளியில் வசதியில்லாத காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டாலும் தன்னைப்படிக்க வைத்த பெற்றோரை இந்த 75 வயதிலும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறார். இயற்கையை நன்றியுடன் நினைத்துப்பார்க்க வலியுறுத்தும் இவர், தினமும் அதிகலையில் எழுந்து தானே தன் குடிசைக்கெதிரே கட்டமைத்திருக்கும்  கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு அதிகாலையில் மூலிகைகள் பறித்து வர காட்டினுள் செல்லும் இவர் மூலிகைகளை வணங்கி அதன் பின்னரே பறித்தெடுத்து வருகிறார். " ஒவ்வொரு மூலிகையின் இளந்தண்டுகளின் நரம்புகள் மனிதனின் இரத்த நாளங்களுக்கு இணையானவை. அவைகளிலிருந்து வெளிப்படும் ஆற்றல் தான் நம் உடலுக்குள் பாய்ந்து குணப்படுத்துகிறது. என்னைப்பொறுத்தவரை, ஒவ்வொரு இலையும் மந்திரம். இந்த மூலிகை சிகிச்சை ஒரு தெய்வ வழிபாடு" என்று சொல்லும் இவர் ஒரு இலையைக்கூட அதிகமாகப்பறித்து வீணாக்காமல் தேவைக்கு வேண்டியதை மட்டும் பறிப்பதை ஒரு விரதமாகவே வைத்திருக்கிறார். 


தன் தாயிடம் கற்ற இந்த சிகிச்சை முறைகளை, சின்ன வயதில் பத்து கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்ற போது கூடவே துணையாக வந்து பதினாறு வயதில் விரும்பி திருமணம் செய்து கொண்ட தன் கணவர் தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார் என்று அன்புடன் நினைவு கூர்கிறார். மூன்று ஆண் குழந்தைகள், குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருந்த போது, இளைய மகன் எதிர்பாராத விதமாக பாம்பு தீண்டி இறந்த போது தான் இனி இந்த துன்பம் இன்னொருவருக்கு நிகழக்கூடாது என்று தான் கற்றிருந்த மூலிகை சிகிச்சையை கையில் எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை கடந்த 50 வருடங்களாக நானூறு பேர்களை பாம்புக்கடியால் இறக்கும் தருவாயில் இருந்தவர்களை உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். இன்னொரு மகன் யானை மிதித்து மரணமடைந்தார்.  தற்போது ரயில்வேயில் வேலை செய்து கொண்டிருக்கும் மூத்த மகன் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியபோதும் ‘ இந்தக்காட்டில் தான் என் வாழ்வும் பாரம்பரியமும் இருக்கிறது’ என்று சொல்லி அவருடன் செல்ல மறுத்து விட்டார்.

தொடந்து தளராமல் சேவை செய்து வருகிறார். கடந்த 1995ல் லட்சுமி பாட்டியை கேரள அரசு ‘நாட்டு வைத்திய ரத்னம்’ என்ற விருதை அளித்து கவுரவித்தது.  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இவர் கல்லார் பகுதியிலுள்ள நாட்டுப்புற கலை பண்பாட்டு மையத்திற்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுப்பது உண்டு. மேலும் திருவனந்தபுரம் நெடுமங்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு சென்று உரையாற்றுவதும் இந்த லட்சுமி பாட்டியின் வழக்கம். இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது! இவரது கைவசம் 500க்கும் மேற்பட்ட நாட்டு சிகிச்சை முறைகள் உள்ளன. 

இந்த லட்சுமி பாட்டியிடம் அப்படி என்ன விஷயம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அவரிடமிருந்து வைத்திய முறைகளை அறிந்து கொள்வதற்காகவும் மாணவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். அனைவரிடமும் தனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை இவர். திருவனந்தபுரம் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பொன்முடி செல்லும் வழியில் கல்லார் என்ற இடத்தில் நடுக்காட்டில் தான் இந்த பாட்டியின் குடில். சரியான சாலையே இல்லாத காட்டுக்குள் இருக்கும் தன் குடிசைக்கு வைத்தியத்திற்காக வருபவர்களுக்கு துளசி நீரும் வேக வைத்த காட்டுக்கிழங்குகளும் உணவாகத் தருவது இவர் வழக்கம். தனது மருத்துவத்தை தற்சமயம் முறைப்படுத்தி, ஆவணப்படுத்தும் முயற்சியில் அமிர்த பலா, காட்டு முல்லை என்ற பெயர்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார். தொடர் விருதுகளுக்குப்பின் இவரைத்தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தாலும் இன்னும் தளராமல் இவர் உழைத்து வருகிறார்.இந்த அருமையான பெண்மணியை வணங்கி வாழ்த்துவோம்!  

உயர்ந்த முத்து:

இந்திய கிரிக்கெட் அணியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் டி.நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்தவர். ஏழ்மை நிலையில் வளர்ந்தவர். 


தந்தை நெசவு வேலையில் தினக்கூலி. தாயார் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வந்தார். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்க ளை வீழ்த்தி புகழ் பெற்றார். யார்க்கர் பந்துவீச்சில் அசத்தி வரும் நடராஜன், டி20 போட்டிகளில் இறுதிகட்ட ஓவர்களில் அசத்தலாக பந்து வீசி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார். அதன்படி எல்லோருக்கும் கார் பரிசாக சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

இத்தனை ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்து, புகழ் பெற்றாலும் உடனே வானத்துக்குப் பறக்காமல் தன் மனதில் நன்றியுணர்ச்சியை செயலில் காட்டியிருக்கிறார் நடராஜன்.  தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயப்பிரகாஷுக்கு பரிசளித்து,  நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.

இசை முத்து:

இந்தப்பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டு இசை ஞானி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், திருமதி.கே.எஸ்.சித்ரா இருவராலும் பாடப்பட்டது.. இருவருமே இந்தப்பாடலை போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள். பாடலின் முதல் பகுதி கர்நாடக தேவகாந்தாரி ராகத்தில் தொடங்கி நடுவில் பாகேஸ்ரீ ராகத்தில் தவழ்ந்து கடைசி பகுதி சுமனேஸரஞ்சனி ராகத்தில் மிதந்து முடியும். கேட்டு ரசியுங்கள். இதில் சுபஸ்ரீ தணிகாசலாம் இந்தப்பாடலின் இனிமையில் மயங்கிப்போய் சொல்கிற மாதிரி, நாமும் "கேட்கலாம், கிறங்கலாம் "! ' 

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துக்களும் சிறப்பு...

ஸ்ரீராம். said...

நடராஜனின் குணம் பாராட்ட வைக்கிறது.   நல்ல மனிதர்.  

கெ ஜெ யேசுதாஸ் பாடல் எனக்கும் மிகவும் மிகவும் பிடிக்கும்.  இளையராஜாவின் அற்புதங்களில்  ஒன்று.

Geetha Sambasivam said...

அனைத்தும் நல்முத்துக்கள்.

கோமதி அரசு said...

வணங்க வைக்கும் முத்து வணங்கி கொள்கிறேன் அந்த முதியவரை.
எவ்வளவு மன உறுதியுடன் தன்ன தனியாக இருந்து கொண்டு தொண்டாற்றி மகிழ்கிறார்.
அனைத்தும் நல் முத்துக்கள்தான் தான்.
பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அனைத்தும் சிறப்பு
போற்றுவோம்

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்து முத்துக்களும் அருமை. பாடலும் நன்று.

வணங்குவோம் முத்தச்சியை!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா மூதாட்டியை வணங்குவோம் என்ன ஒரு பணி! வியக்க வைக்கிறார். நடராஜன் அவர்களுக்கும் வாழ்த்துகள்

மிக மிக மிக மிக பிடித்த பாடல். கர்நாடக தேவகாந்தாரி/ஆபேரி/பீம்ப்ளாஸ் ஹிந்துஸ்தானி என்ன அழகான ராகம் இல்லையா? அக்கா? முன்பு கொஞ்சம் வேறு மாதிரி பாடிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது

அக்கா நீங்களே பாடி ஒரு இசை முத்து போடலாமே உங்கள் தளத்தில்...

கீதா