Saturday 21 March 2020

கொரோனா -ஒரு பார்வை!!!

சைனாவின் ஹுபைய் மாகாணத்திலுள்ள உவான் என்னும் நகரத்து மக்களுக்கு சென்ற வருடம் டிசம்பர் மாத மத்தியில் இனம் புரியாத நுரைஇயீரல் தொற்றுக்கள் உண்டாக ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலான தொற்றுக்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிமோனியா தொற்றுக்களாக மாற ஆரம்பித்தன.



அன்றிலிருந்து இன்று வரை உலகம் முழுமையும் 2 இலட்சத்து எழுபத்தைந்து பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். 91000க்கும் மேற்பட்டோர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதில் சீனாவில் மட்டும் 81000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 3240 மரணமெய்திருக்கிறார்கள். 71000க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்திருக்கிறார்கள். சற்று தாமதமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 234 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 23 பேர்கள் குணமடைந்திருக்க, 4 பேர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
சீனாவும் இந்த நோய் உலகம் முழுவதும் பரவாமல் தடுக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. அதற்கு முதல்படியாக ஊஹான் நகரையும் அதில் வாழும் ஒரு கோடி மக்களையும் தனிமைப்படுத்தியிருக்கிறது. உலகத்தில் ஒரு கொள்ளை நோய்க்காக இத்தனை பெரிய தனிமைப்படுத்துதல் நடந்ததில்லை.சீனாவும் உலகத்திடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உலகமும் சீனாவை தனிமைப்படுத்தியிருக்கிறது.

இது முதலில் NOVEL CORONA VAIRUS 2019 என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் SARS coV-2 என்று அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது?

ஆய்வுப்படி, 80 சதவிகிதம் கொரோனா தொற்று, கைகளால் வைரஸ் தொற்றுள்ள பகுதிகளைத்தொடுவதாலேயும் அந்த கிருமி பாதித்த கைகளை வாய், மூக்குபோன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதாலேயும் ஏற்படுகிறது.
20 சதவீதம் கரோனோ தொற்று நேரடியாக மற்றவர்கள்மீது தும்முவதன் மூலமாகவும் இருமுவது மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் உயிருடன் இருக்கும் காலம் 30 முதல் 40 டிகிரி வெப்ப நிலையில் கணிசமான அளவு குறைகிறது. அதனால் தான் இந்தியாவிலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் அதிகமாக பரவாமல் இருக்கிறது.
4 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் இந்த வைரஸ் 28 நாட்கள் வரையிலும் கூட வாழும் தன்மையுடனிருக்கிறது.

கொரோனா தொற்றின் அறிகுறிகள்:

அதிகமான காய்ச்சல், தொண்டை வலி, வரட்டு இருமல், மூச்சி விடுவதில் சிரமம், மூச்சுத்திணற‌ல்.
கொரோனா பரவாமல் தடுக்க:
1. கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும்.
2. மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் நம் கைகளை கண்ட இடங்களில் வைக்கக்கூடாது.
3. சளி இருமல் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.
4. முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜன சந்தடியுள்ள இடங்களில் புழங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. வீட்டின் கழிப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
6. வெளியில் எச்சில் துப்புதல் கூடாது.

யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?
ஆய்வுகள் படி,9 வயது குழந்தைகள் வரை இந்த வைரஸ் ஒரு மரணம் கூட உண்டாக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம். இதற்கு முன் வந்த சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் கூட குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறது. ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க, கொரோனாவின் மரணம் உண்டாக்கும் விகிதமும் அதிகரிக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மரணம் உண்டாக்கும் விகிதம் 14.8 சதவிகிதம் இருக்கிறது. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, புற்று நோய் முதலியவற்றுடன் போராடிக்கொண்டிருப்பவர்களிடம் மரண சதவிகிதம் அதிகரிக்கிறது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிக தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

சில மூட நம்பிக்கைகளும் அதற்கு நேர்மாறான உண்மையும்:

1. நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டால் கொரோனா தாக்காது.

   இது தவறானது.

2. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும்       ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளலாமா?

கொரோனா வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாக்களைக்கொல்பவை. எனவே அவை கொரோனாவை அழிக்காது.

3. வென்னீர் குடித்தால் வைரஸ் தாக்காது. அதில் உப்பு போட்டு வைரஸ் குடித்தால் தாக்காது. மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் தாக்காது. மவுத் வாஷ் உபயோகித்தால் தொற்று ஏற்படாது. பூண்டு, மஞ்சள், கீழாநெல்லி உபயோகித்தால் தொற்று ஏற்படாது.

இதெல்லாம் உண்மையில்லை.

4. குழந்தைகளுக்கு போடப்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசி கொரோனா வைரஸ் உருவாக்கும் நிமோனியாவை தடுக்குமா?

தடுக்காது. இப்போதைக்கு கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கிடையாது.

5. கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

கோழிகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், மீன்கள் மூலம் கொரோனா பரவுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதால் அசைவம் சாப்பிடுவதில் தவறில்லை. 

தகவல்களுக்கு நன்றி: "மல்லிகை மகள்"

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சூழலுக்கேற்ற விழிப்புணர்வுப் பதிவு
நன்றி சகோதரி

Yaathoramani.blogspot.com said...

அவசியமான நிறைவான விரிவான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

நலமே விளையட்டும்.

ஸ்ரீராம். said...

அவசியமான, உபயோகமான பதிவு.

கோமதி அரசு said...

விழிப்புணர்வு பதிவு
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்... நன்றி அம்மா...

ராமலக்ஷ்மி said...

அவசியமான பகிர்வு.

முற்றும் அறிந்த அதிரா said...

இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போ 5000 த்தைத் தாண்டி விட்டது:(

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல தகவல்கள்.

இன்றைய தேதிக்கு இந்தியாவிலும் பரவிவிட்டதே. உலகில் பல உயிரிழப்புகள் விரைவில் எல்லாம் சரியாகி இயல்பு வாழ்க்கை வர வேண்டும்...மனோ அக்கா

கீதா