Wednesday 10 April 2019

கம்போடியா-மூன்றாம் நாள் காலை!!

Banteay Srei


இந்தக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது.அரசன் ராஜேந்திரவர்மனின் அரச சபை அதிகாரிகளான யஜ்னவராஹா என்பவரும் விஷ்ணுகுமாரா என்பவரும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் இது.



யஜ்னவராஹா இதற்கு முன் ஆட்சி செய்த அரசன் ஹர்ஷவர்மனின் பேரனாக இருந்தாலும் புத்த தர்ம நியதிகளை பின்பற்றும் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தார். இந்தக்கோவிலைச்சுற்றி ஈஸ்வரபுரா என்ற நகரமும் இருந்தது.



இந்தக்கோவில் சிவப்புக்கற்களால் கட்டப்பெற்ற மிக அழகிய கோவில். இந்தக்கல் மரத்தைப்போலவே செதுக்கல்களுக்கு வளிந்து கொடுக்கும் தன்மையுடையது. இறைவன் பெயர் திருபுவன மஹேஸ்வ்ரர். இருப்பினும் மஹாவிஷ்ணுவிற்கும் இங்கு தனிக்கோவில் இதனுள்ளேயே இருந்தது. 1303ம் வருடத்திற்குப்பிறகு இக்கோவில் புதையுண்டு போனது மற்ற‌ கோவில்கள் போல்வே. மீண்டும் 1914ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. 



மிகவும் சுவார‌ஸ்யமான ஒரு விஷயம், 1923ம் வருடம்  ANDRE MALRAUX என்பவரால் சில சிலைகள் திருடப்பட்டன. இவர் பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதோடு, கலை நிபுணரும்கூட. அதோடு அரசு அமைச்சராகவும் இருந்தவர். விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டு, சிலைகளும் மீட்கப்பட்டன.


Banteay Srei என்ற இந்த சிவனாலயத்தைக் கண்டபோது உண்மையிலேயே அதன் அழகுபிரமிக்க வைத்தது.  யசோதபுரா/ அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை மன்னன் ராஜேந்திரவர்மன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான்.



ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதனா (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.



இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது.



நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன. இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல்  சிற்பச் செதுக்கு வேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு அருமையான இடம்...!!!!!

ராமலக்ஷ்மி said...

அழகிய கோயில். மிக அழகாகப் படமாக்கியுள்ளீர்கள்.

அங்கும் சிலைத் திருட்டா?

சலவைக் கற்களின் சிறப்பை காண முடிந்ததா? எந்த நேரத்தில் சென்றிருந்தீர்கள்?

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். நாடு கடந்து சென்று சிற்பக் கலை வளர்த்த அரசர்கள்.... பிரமிப்பாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு படமும் வியப்பை ஏற்படுத்துகின்றது சகோதரியாரே

unmaiyanavan said...

பார்க்கத் தூண்டும் இடம்

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

காலை 10 மணி வெயிலில் சென்றிருந்தேன் ராமலக்ஷ்மி! எல்லா கோயில்களிலும் அழகான கோவில் இது தான்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் ரசித்து எழுதியதற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி உண்மையானவன்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம். நம்மூர்க் கோயில்களைப் பார்த்தே வியந்த நமக்கு இதனைப்பார்க்கும்போது இன்னும் வியப்பு மேலிடுகிறது.

Anuprem said...

கல்லிலே கலை வண்ணம் ...அற்புதம் ...


இங்கு கர்நாடகா விலும் helabadu என்னும் இடத்தில் உள்ள கோவில் முழுவதும் உள்ள சிற்பங்கள் கல்லிலே செதுக்கி இருப்பார்கள் ...

Thenammai Lakshmanan said...

குவாலியர் கோவில் போல் பிங்க்/ரெட் ஸ்டோனால் ஆகிய சிற்பங்கள் அசத்துகின்றன. தாங்கள் தரும் தகவல்களும் அருமை .

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி அனுராதா பிரேம்குமார்! ஹெலபேடு கோவில் பற்றி நிறைய படித்திருக்கிறேன். இனி தான் பார்த்து ரசிக்க வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தேனம்மை!

ராமலக்ஷ்மி said...

காலை பத்து மணியும் மாலை ஐந்து மணியும் கட்டிடங்களைப் படமாக்க உகந்த நேரம். அளவான ஒளியில் கட்டிட நுணுக்கங்கள் சிறப்பாகப் பதிவாகும் என்பதோடு வானமும் நீல வண்ணத்தில் கிடைக்கும். அதை உங்கள் படங்களே சொல்கின்றன. பதிலுக்கு நன்றி.