Tuesday 8 March 2016

வலிகளும் வாழ்க்கையும்!!

கடந்த 20 நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. வெளி நாட்டில் இருக்கையில் மரணங்கள், விபத்துக்கள், திருமணங்கள் என்று விசாரித்தல்களுக்கும் பிரயாணங்களுக்கும் செல்வது தவிர்க்கப்பட்டு விடும். நம் சார்பாக யாராவது ஒரு உறவினர் இவை அனைத்திற்கும் சென்று மொய் எழுதுவதையும் சாங்கியங்கள் செய்வதையும் செய்து வந்து விடுவார்கள். எப்போது ஊருக்கு வருகிறோமோ அப்போது சென்று விசாரித்தால் போதும். ஒரு வகையில் இது தப்பித்தல் என்றாலும் சில சமயங்களில் அதுவே நிம்மதியாக இருக்கும். ஆனால் ஊரில் இங்கே இருக்கும்போது இவை எதிலிருந்துமே தப்பித்து விட முடியாது. மனது துக்கத்தில் அலை மோதுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

சென்ற‌ மாத இறுதியில் ஒரே சமயத்தில் இரு பெரும் நிகழ்வுகள். முதலாவது என் கணவரின் நண்பர். கல்லூரி பருவத்திலிருந்து நட்பைத் தொடர்ந்து வ‌ருபவர். சில வருடங்களுக்கு முன் இதயத்திலிருந்த அடைப்பிற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர். அதன் பின் தொடர்ந்த சில வருடங்களில் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு இடது கை, கால் மற்றும் பேச்சுத்திறனை இழந்து தீவிர சிகிச்சைக்குப்பின்னர் பல மாதங்கள் கழித்து அவருக்கு ஓரளவு பேசவும் கை, காலை இயக்கவும் முடிந்தது. 4 மாதங்களுக்கு முன்னால் தான் மனைவியுடன் எங்கள் இல்லம் வந்து தங்கியிருந்தார். இரவு சாப்பிட்டதும் ' மாத்திரைகள் எடுத்துக்கொண்டீர்களா?' என்று கேட்டேன். ' நான் எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ள்வதில்லையே?' என்று அவர் சொன்னதும் அப்படியே திகைத்து நின்று விட்டேன் ஒரு நிமிடம்!

' நீங்கள் இதுவரை செய்து கொண்ட சிகிச்சைகளுக்காக வாழ்நாள் முழுவதும் நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்?' என்று கேட்டதும் ' எதுவுமே எடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லவில்லையே ' என்று சமாளித்துப்பேசினார். டாக்டர் சொன்ன மருந்துகளை அது வரை எடுக்காமல் அலட்சியம் செய்திருக்கிறார் என்று புரிந்தது. அவரின் மனைவிக்கும் எதுவும் புரியவில்லை. இருவருமே நிறைய படித்தவர்கள். அதுவும் இவர் இந்திய விமானியாக பணியாற்றியவர். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இத்தனை அனுபவித்தும் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் அவரிடம் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்புறம் எச்சரிக்கை செய்தும் உடனடியாக சென்னை சென்றதும் மருத்துவரைப்பார்க்க வேண்டும் என்ற வற்புறுத்தல்களுமாக என் பேச்சை முடித்தேன்.

ஆனால் அவைகளுக்கு எந்த வித பலன்களும் இல்லை. என் எச்சரிக்கைகளை ஊருக்குத்திரும்பியதும் கிடப்பில் தூக்கிப்போட்டு விட்டார்கள். இதய மருத்துவர் யாரையும் சந்திக்கவேயில்லை. இப்போது சென்ற மாத இறுதியில் கன்னியாகுமரி அருகே, கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது மயங்கி விழுந்தவர் வலது பக்கம் பாதிக்கப்பட்டு நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறார். 15 நாட்களாக நினைவு திரும்பவில்லை. இதன் முடிவென்ன என்பதும் தெரியவில்ல்லை. மகன்களும் மனைவியும் ஏதும் புரியாமல் நிற்கிறார்கள்!

அடுத்த நிகழ்வு என் சினேகிதியின் கணவரின் மறைவு! கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டு அது நுரையீரலுக்கும் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாத நிலை. 6 மாதங்களுக்கு முன்பே அவர் இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதால் அவருக்கு இது புற்று நோயின் தாக்கம் என்று சொல்லாமல் ஒரு சாதாரண கட்டி என்பது போல சொல்லி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வாழ்ந்திருக்கிறார் என் சினேகிதி! ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துக்கத்தை மனதில் புதைத்து, உள்ளுக்குள்ளே அழுது கொண்டு,  சிரித்தவாறே 'உங்களுக்கு ஒன்றுமில்லை' என்று கணவரிடம் சொல்லிக்கொண்டு வாழ்ந்திருந்த என் சினேகிதிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வராமல் இன்னும் அவற்றைத்ச்தேடிக்கொண்டேயிருக்கிறேன்!

இந்த சோகங்களிலிருந்து கொஞ்சம் மீள்வதற்காக வலைப்பக்கம் வந்தால் அங்கே திருமதி.ராஜராஜேஸ்வரியின் மறைவுச் செய்தி!
 
முன்பெல்லாம் வாழ்க்கையில் அவ்வப்போது வலிகள் வரும். ஆனால் இப்போதோ வலிகளே வாழ்க்கையாக இருக்கிறது! அதுவும் முதியவர்களை விதம் விதமாக இந்த வலிகள் தாக்குகின்றன!
தியானம், நல்ல சிந்தனைகள், சிறிது உடற்பயிற்சி, நாவடக்கம் [ உணவு விஷயத்திலும் வார்த்தைகளின் கட்டுப்பாட்டிலும்], மன உறுதி இவற்றைக்கொண்டு இந்த வலிகளை சமாளிக்க முயற்சி செய்வோம்!!!

 

23 comments:

Ranjani Narayanan said...

நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை. சிலர் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்திவிடுகிரார்கள்.
குறிப்பாக ஆண்கள் - எனக்கு ஒண்ணுமில்லை, நீ பெரிதுபடுத்தாதே என்று சொல்லி மனைவி மக்களின் வாயை மூடி விடுகிறார்கள். என்ன செய்வது?

உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் சொல்லலாம் என்று வந்தேன். பதிவைப்படுத்தவுடன் மனது கனத்துப் போனது.

Yaathoramani.blogspot.com said...

ஆம் வயதொத்தவர்களை
நண்பர்களை இழக்கையில் வருகிற வலி
கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது

இப்போது பதிவுலக நண்பர்களின் இழப்பு
இன்னும் கூடுதலாகவே இருக்கிறது

காரணம் அவர்கள் எழுத்தின் முலம்
அவர்களை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும்
முகம் கூடத் தெரியாவிட்டாலும்
அவர்கள் எழுத்தின் மூலம்
மனத்தளவில் மிக நெருக்கமான
உறவுகளாகிய எண்ணம் வந்துவிடுவதாலேயே
அது என நினைக்கிறேன்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
தாங்கள் சொல்வது உண்மைதான் கட்டுப்பாடு தேவை உணவுகளில்...
இனிய மகளீர்தின நல்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

வேதனையான நிகழ்வுகள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நீங்கள் சொல்வது புரிகிறது அம்மா. இப்படிப்பட்ட விசயங்கள் மனதை உலுக்கி முடக்குகின்றன. நீங்கள் எழுதியது மிகவும் நல்லது.. பகிர்ந்தால் பாரம் குறையும் அல்லவா?
உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்

வெங்கட் நாகராஜ் said...

வேதனை தான்.....

KILLERGEE Devakottai said...

நடந்தவை விதியின் வழி இனி நடப்பவையாயினும் நலமாகட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

இழப்பின் வலி ஈடு செய்ய இயலாததுதான் சகோதரியாரே

V Mawley said...

தியானம், நல்ல சிந்தனைகள், சிறிது உடற்பயிற்சி, நாவடக்கம் [ உணவு விஷயத்திலும் வார்த்தைகளின் கட்டுப்பாட்டிலும்], மன உறுதி இவற்றைக்கொண்டு இந்த வலிகளை சமாளிக்க முயற்சி செய்வோம்!!!

இதைவிட சிறந்த அறிவுறை இருக்க முடியாது ..மிக்க மகிழ்ச்சி..

மாலி

மனோ சாமிநாதன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள் ரஞ்சனி! தனக்கு உடல்நலக்குறைவு என்பதையே நிறைய ஆண்கள் ஒத்துக்கொள்ளாததை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் இழப்பும் துயரமும் அவர்களின் மனைவி, பிள்ளைகளுக்குத்தான்!

உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது மிகவும் உண்மை சகோதரர் ரமணி! 'இரத்தத்தால் ஏற்படுகிற உறவுகளைக் காட்டிலும் மனதால் புரிந்து கொள்ளுகிற உறவுகளுக்கு வலிமை அதிகம் ' என்று நா.பார்த்தசாரது எழுதியது உங்களின் வரிகளைப்படித்த போது நினைவுக்கு வந்தது! அதனால் தான் தோழமையுடன் பழகிய திருமதி ராஜராஜேஸ்வரியின் மறைவு மிகவும் பாதிக்கிறது!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

வல்லிசிம்ஹன் said...

ஏன் மருத்துவர்கள் சொல்வதைப் பின் பற்ற மறுக்கிறார்கள். ஆண்கள்.
என் கணவர் இறந்த போது என்னை மிகவும் என்னை உறுத்தியது இந்தக் கேள்வி. திடீர் இதய அடைப்பு எங்கிருந்து வந்தது. இவர் முன்னாலயே வைத்தியரை அணுகி மருந்து எடுத்தாரா. நுரையீரலில் சளி என்பதால் இது போல ஆகும் என்றார்கள்.
இன்னும் இந்த வருத்தம் என்னைவிடவில்லை.

ஆண்களுக்கு மனைவிமார் சொல்லும் வார்த்தைகள் காதில் ஏறுவதில்லை.
உங்கள் சினேகிதையை நினைத்தால் மனம் மிக வருந்துகிறது.
திருமதி இராஜராஜேஸ்வரியின் மறைவு மிக அதிர்ச்சி.

அனைவரும் நலமாகக் கவனமாக இறைவனை வேண்டுகிறேன்,

மோகன்ஜி said...

படிக்க வேதனையாக இருந்தது. மருத்துவத்துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சரியான மருத்துவ ஆலோசனை,பல இடர்பாடுகளை தவிர்க்க உதவும்.
நகைக்கும்,உடைக்கும் செலவழிக்க தயங்காத நாம்,உடல்நலம் என வரும்போது காட்டும் அலட்சியம் விபரீதத்தில் முடியும்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் அக்கறைக்கும் அருமையான ஆறுதலான கருத்துரைக்கும் அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

ஆறுதலான கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இதமான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வெகு நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் அருமையான, இதமான கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் மாலி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் வலி என்னையும் பாதிக்கிறது வல்லி சிம்ஹன்! வருடங்கள் ஆனாலும் இந்த வலி மறையப்போவதில்லை! இருந்தாலும் மனம் திறந்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி சகோதரி!

மனோ சாமிநாதன் said...

ஆலோசனைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மோகன்ஜி !!

அருள்மொழிவர்மன் said...

இழப்பு வலியைத் தரும், அதுவும் பழகிய நண்பர்கள் மற்றும் தெரிந்தவரிகளின் இழப்பு வேதனையை தரும். வலிகளும் மறைந்துபோகும் நினைவுகளின் மடியில்.
உடல்நலம் பேணுவதில் நாமனைவரும் கருமிகளே!
உருக்கமான பதிவு.