Wednesday 23 March 2016

சிறுதானிய இட்லி!!!

உணவே மருந்து என்று ந‌ம் முன்னோர்கள் கூறினார்கள்.

ஆனால் பலவித நோய்களில் பாதிக்கப்படுகின்ற இன்றைய தலைமுறையின் வாழ்வு மருந்துகளே உணவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் ந‌ம் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் பயன்படுத்திய சிறு தானிய உணவுகள் இப்போது மீண்டும் மக்களின் வாழ்க்கையில் நுழைந்திருக்கின்றன! இது பரவலான விழிப்புணர்வின் தாக்கம் என்று கூட சொல்லலாம். மீடியா, பத்திரிகைகள் சிறு தானிய உணவுகளை வரவேற்று எழுதும் ஆய்வுகளும் சமையல் குறிப்புகளும் இந்த முன்னேற்றத்திற்கு பெரியதொரு காரணம் என்றும் சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தில் வசித்த என் சினேகிதி வீட்டிற்குச் சென்றபோது, அவர் இரவு உணவிற்கு கம்பங்களியும் நாட்டுக்கோழிக் குழம்பும் தக்காளி சட்னியும் சமைத்திருந்தார். அதன் ருசி நாக்கிலேயே தங்க, அனைவரும் ஒரு பிடி பிடித்தோம். அப்புறம் இரவு முழுவதும் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்தது போல ஒரு அசெள‌கரியம். அப்புறம் தான் தெரிந்தது இரவு நேரத்தில் கம்பை, அதுவும் அதிகம் சாப்பிடக்கூடாதென்பது. கோழியும் அத்தனை சீக்கிரம் செரிக்ககாது! ஆக, பல நன்மைகள் அடங்கியிருந்தாலும் எப்போது எந்த அளவு சாப்பிட வேண்டுமென்பதில் தான் அவற்றின் பலன் இருக்கிறது!


ராகி பல மடங்கு கால்சியத்தையும்,

கம்பு இரும்புச்சத்து, புரதத்தையும்,

சோளம் வைட்டமின்களையும்.


வரகு நார்ச்சத்துக்களையும் தாது உப்புக்களையும்,



சாமை இரும்புச்சத்தையும்,


திணை பாஸ்பரஸ், வைட்டமின்களையும்


குதிரைவாலி மிக அதிக இரும்புச்சத்து, நார்ச்சத்தையும்

தன்னுள்ளே கொண்டிருக்கின்றன.  இவற்றோடு அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ள அரிசியையும் அதிக அளவில் புரதமும் பாஸ்பரஸும் உள்ள கோதுமையையும்  சுழற்சி முறையில் நாம் உண்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுப்பதுடன்  , சர்க்கரை நோய், கொழுப்பு இவை குறைவதுடன் கான்ஸர் நோய் வராமலும் தடுக்கின்றன. 

அதனால் தினமும் சிறுதானியங்களை ஏதேனுமொரு வடிவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல பலன்களையும் வலிமையையும் கொடுக்கும். சிறு தானியங்களை எண்ணெயில் பொரித்து சாப்பிடும்படியான உண‌வுகளாக சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து உண்ணும் உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு வகைகள் செய்து உண்பது நல்லது. இப்போது சிறுதானிய இட்லி செய்யும் விதத்தைப் பார்க்கலாம்!



சிறுதானிய இட்லி

தேவையானவை:

சாமை‍ ஒரு  கப்
வரகரிசி ஒரு கப்
கம்பு ஒரு கப்
திணை ஒரு கப்
இட்லி அரிசி ஒரு கப்
முழு உளுந்து ஒரு கப்
வெந்தயம் ஒரு ஸ்பூன்
தேவையான உப்பு

செய்முறை:

உளுந்தையும் வெந்தயய‌த்தையும் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும். மற்ற‌ தானியங்களை கழுவி ஒன்றாய் ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊறிய பின்பு முதலில் உளுந்தை நன்கு அரைத்தெடுக்கவும். பிறகு தானியங்களை மிருதுவாக  அரைத்தெடுத்து உளுந்து மாவு, உப்பு கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும். வழக்கமான  இட்லி செய்வது போல சிறுதானிய இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். 

23 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே

Yaathoramani.blogspot.com said...

நாளை செய்துபார்க்க உத்தேசம்
படங்களுடன் பகிர்வு அருமை
பயனுள்ள பகிர்வுக்கும் தொடரவும்
நல் வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

சமீபகாலமாகத்தான் சிறுதானியங்களின் பயன் உணர்ந்து வாங்கி உபயோகிக்க ஆரம்பித்துள்ளேன். இட்லி அரிசியுடன் ஏதாவது ஒரு சிறுதானியம் சேர்த்துதான் இதுவரை செய்துள்ளேன். எல்லாவற்றையும் சேர்த்து செய்ததில்லை. குறிப்புக்கு நன்றி மனோ மேடம். செய்துபார்க்கிறேன்.

Thenammai Lakshmanan said...

அஹா சூப்பர் செய்து பார்க்கிறேன் மனோ மேம் :)

சாரதா சமையல் said...

நல்ல பயனுள்ள குறிப்பு மனோக்கா.

Angel said...

இந்த பொருட்கள் இங்கே இப்போ எல்லா ஆசியர் கடைகளிலும் கிடைக்குதுக்கா ..வெயில் மட்டும்தான் விளையாட்டு காட்டும் ..விரைவில் செய்கிறேன் சிறு தானிய இட்லி

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் சகோதரர் ரமணி! பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் கீதமஞ்சரி! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் தேனம்மை! இதில் வெங்காயம் கலந்து தோசை, ஊத்தப்பம் செய்தாலும் மிகவும் சுவையாக இருக்கும்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஏஞ்சலின்!!

KILLERGEE Devakottai said...

சிறுதானிய இட்லி புதுமையாக இருக்கின்றதே.....

ஸ்ரீராம். said...

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சோதனைகள் எல்லாம் நாங்கள் செய்வதே இல்லை. செய்தால் நான் மட்டும்தான் டேஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்!

:)))

shameeskitchen said...

தகவல்கள் அனைத்தும் அருமை.

நான் ராகி மட்டுமே உபயோகித்து இட்லி தோசை செய்கிறேன்.

அனைத்து சிறுதானியங்களும் கலந்து செய்த இட்லி நன்றாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதுமையாக உள்ளது. முயன்று பார்க்கலாம் போலுள்ளது. நன்றி.

கோமதி அரசு said...

சிறுதானிய இட்லி பார்க்க நன்றாக இருக்கிறது.
செய்முறை அருமை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஷாமி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் சகோதரர் ஜம்புலிங்கம்! சுவையும் நன்றாக இருப்பதுடன் உடலுக்கு மிக நல்ல, சத்தான உணவு இது!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!