Monday 7 April 2014

நுகர்வோரின் உரிமைகள் பற்றி....!!

அனு தினமும் நுகர்வோருக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிறிய பொருள் வாங்குவதிலிருந்து பெரிய அளவில் பொருள்கள் வாங்குவது வரை மோசடிகள் நடக்கின்றன. அவற்றைத் தட்டிக்கேட்க முடியாது, தட்டிக்கேட்டாலும் வரும் பிரச்சினைகளுக்கு பயந்து பல நேரங்களில் அமைதியாக இருந்து விடுகிறோம். மருத்துவ மனைகளில் பல மோசடிகள் நடக்கின்றன. வயிற்றைத்திறந்து அறுவை சிகிச்சை செய்யும்போது இன்னொரு உறுப்பையும் நீக்கும் கொடுமைகள் நடக்கின்றன. மானத்திற்கு பயந்து, கேள்விகளை எதிர்கொள்ளும் துணிவு இன்றி நாம் தயங்குவதில் மன சாட்சியின்றி கொடுமைகள் அரங்கேறுகின்றன. சமீபத்தில்  தாய்மையடைய முடியாது தவித்த ஒரு இளம் பெண்ணை செயற்கைக்கரு உண்டாக்கித்தருவதாக கூறி ஒரு மருத்துவர் பல லட்சங்கள் வரை ஏமாற்றி இருக்கிறார். இன்னொரு மருத்துவரிடம் தான் தாய்மையடையவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த பெண் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததால் அந்த மருத்துவரின் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருவதுடன் அந்த மருத்துவரின் மருத்துவ மனையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாம் செலவு செய்யும் பணத்திற்கான நியாயமான மதிப்பு நமக்கு வழங்கப்பட வேன்டும். அதற்கு பதிலாக அந்த மதிப்பு தரம் குறைந்ததாகவோ, ஏமாற்றம் அளிப்பதாகவோ, மோசடி நடந்திருப்பதாக நமக்கு புரிந்தாலோ நாம் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியும். யாருக்கேனும் எள்ளளவாவது பயன் தராதா என்ற விழைதலில்  ஒரு மாத இதழிலும் வார இதழிலும் நான் படித்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தைப்பற்றிய விபரங்களை இங்கே பகிர்கிறேன்!!
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்:

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. நீதிமன்றங்களில் உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் இருப்பது போல, மாவட்டங்களில் 'மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள், மாநில அளவில் ' மாநில ஆணையம்', தேசீய அளவில் ' தேசீய ஆணையம்' அமைக்கப்பட்டிருக்கின்றன. 20 லட்ச‌ம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நாம் கேட்கும் நஷ்ட ஈட்டுட்தொகை 20 லட்சத்திற்குள் இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திலும் 20 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதி மன்றத்திலும் ஒரு கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கோரப்பட்டால் தேசீய ஆணையத்திலும் நமது புகாரைப்பதிவு செய்ய வேன்டும்.
முதலில் கட்டணம் எதுவுமில்லாமல் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் பல‌ பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் தேவையின்றி பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாலும் 2006ம் ஆண்டு கட்டணம் நிர்னயிக்கப்பட்டது.

1 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 100 ரூபாய் கட்டணம் என்றும் 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 200 ரூபாய் கட்டணம் என்றும் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு கட்டணம் 400 ரூபாய் என்றும் 10 லட்சம் முதல் 20 ல்ட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 500 ரூபாய் கட்டணம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கு தொடர விரும்புவோர் அவரின் எல்லைக்குள் இருக்கும் நுகர்வோர் நீதி மன்ற்த்தில் தான் வழக்கு தொடர முடியும். பிரச்சினை ஏற்பட்டதிலிருந்து 2 வ்ருடங்களுக்குள் வழக்கு தொடரப்பட வேண்டும். பிரச்சினைக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

நமக்கு பொருள்கள் விற்பனை செய்யும் த‌னியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும். இதில் எல்லாவித வியாபார நிறுவனங்களும் அடக்கம்.
நம்மிடமிருந்து பணம் வாங்கிக்கொன்டு  சேவைகள் வழங்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள். மின்வாரியம், குடி நீர் வாரியம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்கள்.
கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது மோசடியான விளம்பரங்கள் மூலம் மக்களை தரமில்லாத பொருள்களை வாங்கச் செய்யும் ஏமாற்றுத்தந்திரங்கள் நுகர்வோர் வழக்கின் கீழ் வராது. ADVERTISING STANDARDS COUNCIL OF INDIA என்ற பெயரில் மும்பையில் இயங்கிக்கொன்டிருக்கும் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

ஒரு முறை ஒருவர் ஒரு சொத்து வாங்க நினைத்து, அதற்குரிய சப் ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வில்லங்க சர்டிபிகேட் விண்னப்பித்தார். எந்த வில்லங்கமும் அந்தச் சொத்தில் இல்லை என்று அவருக்கு வில்லங்க ச்ர்டிபிகேட் தரப்பட்டது. அதை நம்பி சொத்தை வாங்கிய அவருக்கு, அதன் பின்பு தான் அந்தச் சொத்தில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. தனக்கு தவறான வில்லங்கச் சான்றிதழ் கொடுத்ததனால் தனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது என்று கூறி அவர் அந்த அலுவலகம் மீது நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சான்றிதழில் தவறு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட இலாகா பொறுப்பல்ல என்று குறிப்பிட்டே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள‌து என்று அரசு தரப்பில் வாதாடியும் அதை நிராகரித்த நீதி மன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
 
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம். அதில் போடப்பட்டுள்ள‌ விலைப்பட்டியலுக்கு அதிகமாய் பணம் வாங்கினாலோ, அல்லது அதில் போடப்பட்டிருக்கும் எடை சரியாக இல்லாமல் குறைவாக இருந்தாலோ, தரம் குறைவாக இருந்தாலோ, உடனடியாக அதைப்பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். தன் தவறை அவர் ச‌ரி செய்யாவிடில், அவருக்கு நீங்களே குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரி செய்யாவிடில் நுகர்வோர் வழக்கு தொடரப்படும் என்று அத்தாட்சியுடன் கூடிய பதிவுத்தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அந்த நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அதைப்போல் பொருள் வாங்கியதற்கான ரசீது, விலை அச்சடிக்கப்பட்ட பாகிங் கவர் எல்லவற்றையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். எடை சம்பந்தமான பிரச்சினை என்றால் பாக்கிங்கை பிரிக்காமலேயே ஊர்ஜிதம் செய்து கொள்வது நல்லது. பாக்கிங்கை பிரித்து விட்டால் வழ‌க்கு தொடர முடியாது.

நுகர்வோர் பிரச்சினைகள் தனியார்களின் இலவச நிறுவனங்கள் மூலமும் தீர்க்கப்படுகின்றன. CONSUMER ASSOCIATION OF INDIAஎன்கிற தன்னார்வத்தொண்டு நிறுவனமும் நுகர்வோர் பிரச்சினைகளை பெரும் முயற்சி எடுத்து தீர்த்து வைக்கின்றன. கடந்த 11 வருடங்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் வழக்குகளை ச்ந்தித்து அவற்றில் 88 சதவிகித வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். 044 6633 என்ற எண்ணுக்கு ஒரு நுகர்வோராக உங்கள் புகார்களை தமிழிலோ, ஆங்கிலத்திலோ பதிவு செய்யலாம்.அடுத்த நாளே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். விரிவான தகவல்களை கேட்டுத்தெரிந்து கொண்டு ஆலோசனைகள் சொல்வதுடன் வழக்கறிஞர்களுடன் விவாதித்து, அந்த வழக்கில் நமக்கு நியாயம் கிடைக்கும் வரை துனையாக இருக்கிறது இந்த நிறுவனம். இந்த சேவைகள் எல்லாம் இலவசமே. விருப்பம் உள்ள‌வர்கள் ஒரு சின்னத்தொகையைக்கட்டி இந்த அமைப்பில் உறுப்பினராகலாம். உறுப்பினர்களுக்கான பிரத்தியேக சலுகைகள் உள்ள்ன. 

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

கே. பி. ஜனா... said...

அனைத்து நுகர்வோரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய விஷயங்கள்! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்து கொள்ள தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியார
நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

காலத்திற்கேற்ற, கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய
தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் மனோம்மா. மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

கீதமஞ்சரி said...

மிகவும் பயனுள்ள பதிவு மனோ மேடம். வழக்குமன்றத்துக்கு நடையாய் நடக்க பயந்தே பலர் தங்கள் நட்டங்களைப் பொறுத்துக்கொள்கின்றனர் என்று தோன்றுகிறது.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்லும் கருத்து தான் உண்மையானது கீதமஞ்சரி! கருத்துரைக்கு அன்பு நன்றி!