Tuesday 25 March 2014

முத்துக்குவியல்-26!!

ரசித்த முத்து:

" இன்றைக்கு வீடுகளிலும் சமூகத்திலும் பெரிய பிரச்சினைகளாகப்பார்க்கப்படுவது முதியோர்களை கவனிக்காத இளைய தலைமுறை பற்றித்தான். எல்லா பெற்றோர்களுமே தங்கள் பிள்ளைகள் நன்றாக இருப்பதற்காகத்தான் உழைக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கேட்டதையெல்லாம் நிறைவேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தளர்வுகிற நேரத்தில் அந்தப் பிள்ளைகள் ஏன் சுயநலமிகளாக மாறிப்போகிறார்கள்? ' உனக்காகத்தானேடா நான் கஷ்டப்பட்டேன்?' என்று புலம்புகிற தாயிடம் "பெத்தா இதையெல்லாம் செஞ்சுத்தான் ஆகணும். அதைப்போய் சொல்லிக் காட்டுறே?" என்று எரிந்து விழும் குணம் ஏன் வந்தது?
சின்ன வயது முதல் குடும்பத்தில் பெற்றோர்களும் மூத்த உறுப்பினர்களும் எவ்வளவு முக்கியம் என்பதை உண‌ர்த்தாமல் விட்டதன் விளைவு தான் இது. குழந்தைகள் முன்னிலையில் 'உறவுகள் பெரிது' என்ற எண்ணத்தை விளைக்காத எந்தப் பேச்சுகளும் விஷ வித்துக்களைத்தான் முளைவிக்கும். எத்தனை தான் காலம் மாறினாலும், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒரு நேசமான புன்னகையும் வாஞ்சையான வார்த்தையும் சட்டென்று நம்மை ஈர்த்து விடும்.
எப்பேப்பட்ட கல் மனதையும் திறக்கும் மந்திரச்சாவி எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே. அதற்கான கள்ளச்சாவி இன்னும் இந்த உலகில் கண்டு பிடிக்கப்பட‌வேயில்லை."

சிறப்பான முத்து:

சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகத்திலுள்ள சிறப்புப்பள்ளியில் சிறப்புக்குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.  மூளைத்திறன் பாதிப்பு, ஆடிஸம், மூளைத்திறன் குறைவு, கற்றலில் குறைபாடு, multipal disorders, என்று பல பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்கள். இதில் வளர்ந்தும் குழந்தையாக இருப்பவர்களும் அடக்கம். இயல்பான குழந்தைகள் போன்று விளையாடுவதற்கோ, சிறு நீர் கழிப்பதற்கோ, பசியை உண‌ர்த்துவதற்கோ இவர்களுக்கு தெரியாது. இப்படி அன்றாட வேலைகளைச் செய்வதற்கு, அவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியைக் குறைந்த கட்டணத்தில் கடந்த எட்டு வருடங்களாகச் செய்து வருகிறது ஒய்.எம்.சி.ஏ சிறப்புப்பள்ளி. உளவியல் நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி இங்கே பயிற்சி முறைகளை திட்டமிட்டு செய்கிறார்கள். குழந்தைகளின் நுண்ணறிவிற்கேற்ப, Pre-primary, Primary, Secondary என்ற நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் சொல்வதைப்புரிந்து கொண்டு செயல்படும் குழந்தைகளுக்கு சோப் ஆயில், மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற தொழில் பயிற்சிகளையும் தருகிறார்கள். குழந்தைகளின் அன்றாட காரியங்களை அவர்களே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ACTIVITY DAILY LEARNING SKILLஸ்ஐ வளர்ப்பதில் இவர்கள் முழு கவனம் செலுத்துகிறார்கள். இந்தப்பயிற்சிகளில் கவ்னம் ஈர்க்கும் குழந்தைகளை இந்த வளாகத்திலேயே செயல்படும் நடுநிலைப்பள்ளியில் சராசரி மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அளவிற்கு முன்னேற்றுகிறார்கள்.

சேவை முத்து:

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு ஹோலிஸ்டிக் தெரப்பி மூலம் பல்வேறு மருத்துவ முறைகள் மூலம் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்ப்டுகிறது. சென்னை, அண்ணா நகரில் இயங்கும் DOAST என்ற அமைப்பின் இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் சிறந்த முறையில் இதத நிர்வகிக்கிறார்.
இயல்பிலிருந்து விலகிய நிலை தான் ஆட்டிஸம் என்பது. அமெரிக்காவின் கணக்குப்படி 125 குழந்தைகளில் ஒருத்தருக்கு ஆட்டிஸம் உள்ளது. இந்தியாவிலும் இதே நிலை தான் என்று சொல்கிறார் இந்த மருத்துவர். ஆனால் இங்கே விழிப்புனர்வு இல்லாததால் இந்தக் குழந்தைகள் அப்படியே விடப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆன‌ பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். சைகைத் தொடர்ப்பு, விழிகளை நேராய்ப்பார்த்துப்பேசுதல், இவைகள் அற்று தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு விலகியே இருப்பார்கள்.
இவர்களுக்கு இங்கே ஆயுர்வேதம், இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கப்ப்டுகிறது.

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு நேசமான புன்னகையும் வாஞ்சையான வார்த்தையும் சட்டென்று நம்மை ஈர்த்து விடும்.
எப்பேப்பட்ட கல் மனதையும் திறக்கும் மந்திரச்சாவி எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே.//

அன்பான + அருமையான முத்து.

சேவை முத்துவும், சிறப்பான முத்துவும் மிகவும் பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அருமை அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

முதியோர் இளையோர் பிரச்சினைகளுக்குக் காரணம் போதுமன புரிதல் இல்லாமைதான் என்று எண்ணுகின்றேன். சமீப காலங்களில்தான் இப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன், தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது மனம் விட்டுப் பேசிக் கொண்டே வந்தால், இது போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பில்லை.
ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும், பத்து பேரும் தனித் தனித் தீவுகளாக இருப்பதால்தான் இப்பிரச்சினை.
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துக்களும் அருமை அம்மா...

// எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே // 100% உண்மை...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான முத்துகள்........

கோமதி அரசு said...

எத்தனை தான் காலம் மாறினாலும், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒரு நேசமான புன்னகையும் வாஞ்சையான வார்த்தையும் சட்டென்று நம்மை ஈர்த்து விடும்.
எப்பேப்பட்ட கல் மனதையும் திறக்கும் மந்திரச்சாவி எதையும் எதிர்பார்க்காத தூய்மையான அன்பு மட்டுமே//

நன்றாக சொன்னீர்கள். பகிர்ந்த முத்துக்கள் எல்லாம்
அருமையான முத்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான அவசியமான
அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களுடன் கூடிய
முத்துசர பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கே. பி. ஜனா... said...

நல்ல தகவல்களுடன் தங்கள் பதிவு.... அருமை!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் ஜெயக்குமார்! ஒரு வீட்டில் இருக்கும் எல்லா உறவுகளும் இப்போதெல்லாம் தனித்தனி தீவுகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதற்குமே நேரமிருப்பதில்லை, சுயநலமாய் இருப்பதைத்தவிர!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் ஜனா!

unmaiyanavan said...

ஒவ்வொரு முத்தும் அருமை.

தெரியாத விஷயங்களை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.