Friday 4 October 2013

முதற்பதிவின் சந்தோஷம்-தொடர்பதிவு!!

' முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவில் கலந்து கொள்ளுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ என்னை சென்ற மாதம் அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

முதல் பதிவென்பதை என் வாழ்க்கையில் இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.

என் இளம் வயதுப்பருவம் முழுக்க முழுக்க புத்தகங்கள் தான் என் முதற்காதலாக, உற்ற சினேகிதியாக இருந்திருக்கின்றன. கல்கியின் ‘ சிவகாமியின் சபதமும்’ ஆங்கிலத்தில் ‘Denise Robins நாவல்களும் கீட்ஸ், ஷெல்லி, தாமஸ் மூர் இவர்களது கவிதைகளும் தான் அந்த வயதுக்கனவுகளில் வலம் வந்திருக்கின்றன.. அதனாலேயோ என்னவோ, மனதில் கதை எழுதும் தாகம் இருந்து கொண்டே இருந்தது. இளம் வயதில் அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணி செய்த போது, ஒரு நாள் மனதில் அதுவரை தேக்கி வைத்திருந்த ஆர்வத்தையெல்லாம் கொட்டி எழுதி
‘ பிரிந்து விட்ட பாதைகள் இணைவதில்லை’ என்ற சிறுகதையாக அப்போது, எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ‘ தினமணி கதிர்’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். எழுத்துலகில் இது தான் என் முதற்பதிவு.

அப்போதெல்லாம் பிரபல எழுத்தாளர்கள், தங்கள் முதல் சிறுகதை எத்தனை எத்தனை தொடர் முயற்சிகளைக் கண்டிருக்கின்றன என்று எழுதியதையெல்லாம் படித்திருந்ததாலோ என்னவோ கதை பிரசுரமாகுமா என்ற தவிப்போ, கனவோ ஏதுமின்றி, மற்ற என் வேலைகளில் மூழ்கி கிட்டத்தட்ட சிறுகதை அனுப்பியதையும் மறந்தே போனேன். ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் கைகளில் வந்து விழுந்த புதையலாய், வரமாய் அதை நினைத்துக் கொண்டாடியது மட்டும் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். www.mayyam.com என்ற வலைத்தளத்தின் உணவுப்பிரிவில் என் மகன் ஆர்வத்துடன் தொடங்கி வைத்தது தான் Mano’s Tamilnadu delicacies என்ற பகுதி. கணினியைப்பற்றி அதிகம் அறியாத காலம் அது. ஓரளவு இதைப்பற்றிய அறிவுடன் இதற்குள் நுழைந்த பிறகு தான் கணினி முன் உலகம் எத்தனை சிறியது என்று புரிய ஆரம்பித்தது. என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தான் அறுசுவை நிறுவனர் பாபுவின் அழைப்பிற்கிணங்கி சமையல் நிபுணர்கள் திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம், திருமதி. ரேவதி  ஷண்முகத்துடன் இணைந்து ஒரு சமையல் போட்டியின் நடுவராக பங்கேற்க நாகைப்பட்டிணத்திற்குச் சென்றேன். அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் எனக்காக காத்திருந்தது. அறுசுவை நிறுவனர் என் உறவினர் என்ற செய்தி அனைவரும் உரையாடிக்கொண்டிருந்த போது யதேச்சையாகத் தெரிந்து மனதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. உலகம் சிறியது தான் என்ற உண்மை புலப்பட்டபோது பிரமிப்பேற்பட்டது. அதே அறுசுவையில் எல்லோருக்கும் பிரியமானவராக அறியப்பட்ட, வர்மக்கலைகள், மருத்துவம், ஆழ்நிலைத்தியானம் என்று தொடர்கள் எழுதிக்கொன்டிருந்த‌ திரு. ஹைஷ் கடைசியில் இதே மாதிரி என் உறவினர் என்று அறிந்த போது நம்ப முடியாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மனதில் சூழ்ந்தன. இணைய உலகத்தால் கிடைத்த அருமையான உறவுகள் இவை. இது தான் மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து ஒரு சில வருடங்கள் என் சிறுகதைகள், ஓவியங்கள் சில
பிரபல பத்திரிகைகளில் வெளி வந்த பின் சூழ்நிலைகள் காரணமாக என்னுள் இருந்த கதாசிரியையை நான் உள்மனதிலேயே அதிக வருடங்கள் உட்கார வைத்து விட்டேன். காலச் சுழற்சியில் கடமைகள் முடிந்து எனக்கென்று சில மணி நேரங்கள் கிடைத்த போது,  எனக்கு மட்டும் வடிகால் இல்லையா என்று உள்ளே உறங்கிக்கொண்டிருந்த கதாசிரியை எழுந்து நின்று கேட்டதும் எனக்கென்று ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது குறித்து முயற்சிகளில் இறங்கினேன். கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல! எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்! இதை ஒரு நல்ல தளமாக உருவாக்குவதற்கு சினேகிதிகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா உதவினார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 

முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு!! எல்லாவற்றையும் விட, வலைப்பூவில் பதிவுகள் எழுதுவதும் பின்னூட்டங்கள் இடுவதும் நம் உணர்வுகளையும் அறிவையும் விசாலமாக்குகிறது என்பதுடன் அதிக தேடல்களை உண்டாக்குவதால் தனி உற்சாகமும் ஆர்வமும் எப்போதுமே மனதளவில் ததும்பிக்கொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் தொடர்கதையாய் கிடைத்துக்கொண்டேயிருக்கிற்து. பதிவுலகின் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்!!

33 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் சந்தோசத்தை தருகின்றன... எத்தனை எத்தனை நட்புகள் கிடைத்துள்ளன... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

தங்கள் சந்தோஷச் சாரல் சந்தன மணமாய்
எங்கள் மீதும்....
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

உங்கள் சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா...

கீதமஞ்சரி said...

முதல் பதிவுகளின் மகிழ்தருணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி மேடம். முத்துக்களைத் தொடர்ந்து சிதறிக்கொண்டே இருங்கள். நாங்கள் எடுத்துத் தொடுத்துக்கொள்கிறோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சந்தோஷம் தரும் பகிர்வு ... உங்களுக்கு மட்டுமல்ல ... எங்களுக்கும் தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Anonymous said...

வணக்கம்
உங்களின்சந்தோசக்காற்று எங்களுக்கும் வீசியது பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கே. பி. ஜனா... said...

முதல் பதிவைப் பற்றிய பதிவும் முத்தாக...

மாதேவி said...

உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கலந்துகொண்டோம்.

நிலாமகள் said...

இதன் மூலம் அருமையான நட்பும் அன்பும் //

நாமும் இதில் அடங்கியுள்ளோம் என்பதே சிலுசிலுப்பான சந்தோசம்.

நாங்களும் உங்க பரிவிலும் அன்பிலும் மகிழ்ந்திருக்கிறோம் சகோதரி.

இராஜராஜேஸ்வரி said...

கதைகள், கவிதைகள், மருத்துவம், ரசனை, சிந்தனை, கலைகள் என்று பல முத்துக்கள் இணைந்திருப்பதால் என் வலைப்பூ ‘முத்துச்சிதறல்’ ஆயிற்று. இது நாம் பெற்ற குழந்தை போல! எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்யலாம், அழகு பார்க்கலாம்!

அழகாக அலங்காரம் செய்து மனநிறைவை தந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கல்..!

இளமதி said...

அக்கா... உங்கள் முதற் பதிவின் சந்தோஷம் கண்டு உண்மையில் நானும் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கின்றேன்...

எத்தனை சிறப்புகள் உங்களிடம்.. அத்தனையையும் பட்டியலிட்டுக் காட்டியபோது பிரமித்தே போனேன்..
கதாசிரியையாய் ஓவியராய்.. சமையல்கலை வல்லுநராய்.. நல்ல விமர்சிகையாய்.... இன்னும் இன்னும் ... விறைத்துப் போய்ப் பார்க்கின்றேன் உங்களை நான்...

அதில் சிகரம் வைத்தாற்போல் எங்கள் சகோதரர் ஹைஷ் உங்கள் உறவினரா... அகலத்திறந்த கண்களும் மனமும் ஆச்சரியத்தில்... எனக்கு...:)
எங்கே எம் சகோதரர்... நலமாக இருக்கிறாரா.. இந்த இளமதி ரொம்பவும் அவரை விசாரித்தேனெனச் சொல்லிவிடுங்கள் அக்கா...

அருமையான முத்துக்குவியலான எண்ணக் குவியல்கள் உங்கள் பதிவு.
இன்னும் இன்னும் உங்கள் சிறப்பு ஓங்க என் அன்பு வாழ்த்துக்கள் அக்கா!

வெங்கட் நாகராஜ் said...

முதல் பதிவின் சந்தோஷம் - நீங்கள் எழுதியதைப் படித்த போது என்னுள்ளும் சந்தோஷம்.....

பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

தங்கள் வாழ்த்துக்களும் சந்தன மணமாய் என்னைச் சூழ்கின்றது சகோதரர் ரமணி!! அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி கீதமஞ்சரி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் மனங்கனிந்த நன்றி ரூபன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் முத்தான கருத்துக்கும் இனிய நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி மாதேவி!!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

எத்தனை உணர்ச்சி மயமான பின்னூட்டம் இளமதி! உங்கள் சந்தோஷம் என்னையும் பற்றிக்கொள்கிறது!

என்னைப் பாராட்டியிருக்கிறீர்கள்! அன்பு நன்றி! ஆனால் கவிதைகளும் கைவேலையுமாய் நீங்களும் என்னை அசத்திக்கொன்டேயிருக்கிறீர்கள் இளமதி!

உங்கள் சகோதரர், எனது தம்பி ஹைஷ் மிக‌ நலமாக இருக்கிறார். நான் தஞ்சை செல்கிறேன். அவரை சந்திப்பேன். உங்களின் அன்பு விசாரிப்புகளை அவரிடம் சொல்லி விடுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

உங்களின் சந்தோஷம் தான் எனக்கான பாராட்டும் வாழ்த்தும் சகோதரர் வெங்கட்!

இளமதி said...

மிக்க மிக்க நன்றி மனோ அக்கா!

கரந்தை ஜெயக்குமார் said...

முதற் பதிவினைக் கண்ட போது எழும் மகிழ்ச்சிக்குத்தான் எல்லை ஏது. அருமை சகோதரியாரே நன்றி

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் நிலாமகள்! உங்களின் இனிய நட்பு கிடைத்திருப்பதையும் மனதில் நினைத்துக்கொண்டே தான் இந்தப்பதிவை எழுதினேன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

தி.தமிழ் இளங்கோ said...

கடந்த பத்து நாட்களாக வலைப்பக்கம் சரியாக வர இயலாத சூழ்நிலை. அதில் இந்த பதிவு படிக்க இயலாமல் விட்டுப் போனது. எனவே மன்னிக்கவும். நினைவூட்டலுக்கு நன்றி!

// ஒரு நாள் தினமணிக்கதிரைப் புரட்டியபோது, என் சிறுகதை என் பெயரில், ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களோடு வெளிவந்திருப்பதைப்பார்த்ததும், மகிழ்ச்சி, பிரமிப்பு எல்லாமே ஒரே நேரத்தில் மின்னல் போலத் தாக்கின. அதன் பின் வந்து சேர்ந்த ஆசிரியரின் கடிதம், ஊக்குவிப்பு, கதை எழுதியதற்கான அன்பளிப்பு எதுவுமே மனதில் ஊன்றிப்பதியாத அளவு நான் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னால் புகழ் பெற்ற வார இதழில் வெளி வந்த இந்த முதல் பதிவின் சந்தோஷத்தை இன்றைக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்கத்தெரியவில்லை.//

இப்போதும் அந்த மகிழ்ச்சி உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது. அதுவும் பிரபலமான மூத்த எழுத்தாளர் சாவி அவர்களிடமிருந்து பாராட்டுக்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. நானும் சாவியின் எழுத்துக்களை இன்னும் ரசிப்பவன்.

// இணைய உலகில் முதற்பதிவு என்றால் அது ஒரு சமையற்குறிப்பு தான். ... ... ... என் சமையல் பகுதி பல லட்சம் பேர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதில் மன நிறைவும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. //

மகிழ்ச்சியான செய்தி. உங்கள் சமையல் குறிப்புகளில் அண்மையில் வெளியான மீன் குழம்பு பற்றிய பதிவை படித்து இருக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.

// முதல் பதிவை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி எழுதினேன். முதல் பதிவே குழந்தை வளர்ப்பு பற்றி இளம் அன்னையர்களுக்கு என் வேண்டுகோள் என்ற முறையில் அமைந்திருந்தது. முதல் பதிவு கொடுத்தது சந்தோஷமும் மன நிறைவும் கலந்த ஒரு உணர்வு!! //

நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்.



அ.பாண்டியன் said...

தங்கள் பதிவின் மூலம் இளமைக்காலத்து நினைவுகளை மனதில் மகிழ்ச்சியாய் அசைப்போடுவதை உணர முடிகிறது. முதல் பதிவைக் கண்ட மகிழ்ச்சியைக் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள்.உங்கள் பல்துறை அறிவும் வியக்க வைக்கிறது சகோதரி. பகிர்வுக்கு நன்றீங்க.

ஸ்ரீராம். said...

சாவியில் முதல் சிறுகதை என்பது உற்சாகம் தரும். நீங்கள் தொடர்கதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறீர்களா? குறிப்பாக விகடனில்? முதல் பதிவின் சந்தோஷங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Asiya Omar said...

மனோ அக்கா,உங்கள் பக்கம் வந்து நாட்கள் பலவாகிவிட்டது.யார் பக்கமும் சென்று வாசிக்க முடியவில்லை.ஏதோ ஒரு சலிப்பு,இந்த உங்கள் பகிர்வை பார்த்தவுடன் ஒரு இனம் தெரியாத புத்துணர்வு பெற்ற மகிழ்ச்சி உள்ளத்தில்,தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டி கருத்துரை இனிமையாக எழுதியுள்ள‌தற்கும் அன்பார்ந்த நன்றி பாண்டியன்!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஸ்ரீராம்!

என் முதல் சிறுகதை 'சாவி' அவர்களை ஆசிரியராகக் கொன்டு வெளி வந்த ' தினமணி கதிர்' என்னும் வார இதழில் தான் வெளி வந்தது. சாவியில் அல்ல. ஆனால் அதன் பின் சாவி, விகடனில் என் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. விகடனில் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.

தங்களின் இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஆசியா! உங்களை ரொம்ப நாட்களாகவே வலைப்பக்கம் காணவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் கடிதத்திற்குக்கூட முழுமையான பதிலில்லையே என்றும் நினைத்தேன். இப்போது தஞ்சை வந்துள்ளேன்.

உங்களின் பாராட்டிற்கு அன்பு நன்றி!