Tuesday, 4 February 2014

தோரணமலை!!!

பொதுவாய் விசித்திரமான, சரித்திர உண்மைகளை தன்னகத்தே கொண்ட கோவில்களின் வரலாறுகள் என்னை எப்போதுமே ஈர்க்கும். அதைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஆவல் எழும். அப்படிப்பட்டதொரு ஆச்சரியகரமான கோவில் இது!!

தோரணமலை

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத்தொடரில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது தோரணமலை. குலுக்கை மலை, ஆனைமலை என்றும் அழைக்கப்படுகிறது. வாரணம் என்ற சொல் யானையைக் குறிக்கும். இச்சொல் காலப்போக்கில் தோரணம் என்று மருவி தோரணமலை என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். 64 சுனைகள் இருப்பதால் தோரணமலை இயற்கை ராணியின் சிம்மாசனமாகத் திகழ்கிறது.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் ‘மருத்துவமனை’யாக விளங்கிய இந்தத் தோரணமலை நாளடைவில் அப்படியே தூர்ந்து விட்டது.  இங்கு முருகனுக்கு அமைக்கப் பட்டிருந்த கோயிலும் காணாமல் போய்விட்டது. பல்லாண்டுகளுக்குப்பிறகு, இங்கிருக்கும் சுனையில் முருகன் சிலை கிடைத்திருக்கிறது. அதை எடுத்து தற்போதுள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்திருக்கின்றனர். இங்கு முருகப்பெருமான் கையில் வேலுடன், மயில் வாகனத்தில் அருள்புரிகிறார்.

இவ்வாலயம் அமைக்கப்பட்ட காலம் என்னவென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. என்றாலும் சுமார் 300 ஆண்டுகளாகத்தான் இவ்வாலயம் பெரும்பாலான மக்களால் அறியப்பட்டிருக்கிறது.
சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இம்மலைமீது ஏறிச்சென்று முருகனை வணங்க ஒற்றையடிப் பாதை மட்டுமே நெடுங்காலமாக இருந்து வந்தது. பக்தர்களின் வருகை அதிகரிக்க, பாதையைச் சீரமைக்கும் அவசியம் உண்டானது. இதைக் கருத்தில் கொண்ட ஆலய நிர்வாகியான ஆதிநாராயணன், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.



ஆதிநாராயணன்  இந்தக் கோயிலை மக்களுக்கு அறிமுகப்படுத்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலைடுகளை காட்ட வைத்தார். ஒரு  கோயிலுக்கு விளம்பரமாக இதுபோல் சினிமா தியேட்டரில்  சிலைடு காட்டிய சம்பவம் வேறெங்குமே நடந்ததாக தெரியவில்லை. அதைப் பார்த்துத் தான் பக்தர்கள் தோரணமலைக்கே வரத் தொடங்கினர்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள தொழிலதிபர்களையும் செல்வந்தர்களையும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களையும் ஆதிநாராயணன் நாடிச் சென்று, அவர்களது நிதியுதவி, பொருளுதவி மூலம் மலைமீதுள்ள முருகன் ஆலயத்தைப் புதுப்பித்ததோடு, 1,085 படிக்கட்டுகள் கொண்ட பாதையையும் அமைத்தார்.

படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட பின்னர் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது


தோரண மலையில் அகத்தியர் அமைத்த ‘மருத்துவமனை’ 1000 வருடங்களுக்கு முன்பே இயங்கி வந்தது. தற்போது கூட தீராத நோயென்று வந்து பாறையில்  அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு அந்த நோய் தீருகிறது! மருத்துவ படிப்புக்கு மனு கொடுத்து விட்டு, இங்கு வந்து தியானம் செய்தால், மருத்துவப் படிப்பிற்கான இடம் உறுதியாகிறது என்றும் சொல்கிறார்கள்.
தோரண மலைக்கும் சற்று மேலே ஏறினால் ஒரு அடர்ந்த குகை இருக்கிறது. இதை கோரக்கர் குகை என்கிறார்கள். ஒரு வகையான மருத்துவ குணம் கொண்ட உப்பினாலும் மூலிகையாலும் இந்த குகை உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

தேரையர்

தலையைப் பிளந்து அறுவைச் சிகிச்சை செய்வது என்பது, அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் கூட, கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர் சித்தர். வைத்தியரே குழம்பி நின்ற வேளையில், துணிச்சலையும் சமயோசிதத்தையும் குழைத்து, இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார்.
தேரையர் சித்தர்சமாதியானது தோரணமலை என தெரிய வருகிறது.. தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் இருக்கிறது.

தேரையரின் நிஜப்பெயர் தெரியவில்லை. ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.
அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார்.,
காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது.  அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்த‌ மன்னனிடம் அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். 
அகத்தியர் அவனைத் தைரியப்படுத்தினார். மன்னன் உறங்கியபோது அவனின் மூக்கு துவாரம் வழியே தேரை எனப்ப்டும் தவளைக்குஞ்சு உள்புகுந்து மூளைப்பகுதியில் தங்கியிருப்பதால் இந்த வலியென்ற காரணம் சொல்லி கபால அறுவை சிகிச்சை தான் இதற்கான தீர்வு என்று தீர்மானித்தார். ஒரு வித மூலிகையால் மன்னனை மயக்கமுற்ச்செய்து கபாலத்தைத் திறந்தார்.


அவர் தீர்மானித்தபடியே மூளையில் ஒரு தேரை மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தது.  கையால் எடுக்க முற்பட்டு தேரை ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதை அகத்தியரே கலங்கி நின்ற போது, அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது.


சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டி, சந்தன காரணீயம் என்ற மூலிகையால் உடைந்த தலையை ஒட்ட வைத்தார் என்று வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  

இன்னொரு சமயத்திலும்  தேரையர். . பாண்டிய மன்னன் ஒருவனின் கூன் முதுகை தன் மருத்துவத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் சரி செய்தார். மருத்துவத்தில் தேர்ந்த இவர் அகத்தியரின் கட்டளையின் படி 21 வைத்திய நூல்களை எழுதி தமிழனுக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றிருக்கிறார். பிற்காலத்தில் தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் என்ற பெருமையைப்பெற்றவரும் இவரே என்று கூறப்படுகிறது.  பல காலம் வாழ்ந்த அவர்  தோரணமலையில் சமாதியானதாக தெரிய வருகிறது.

ஓங்கி உயர்ந்த மலை, அடிவாரம் தொடங்கி மலை உச்சி வரை ஆங்காங்கே சுனைகள், அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரனமலை நிச்சயம் ஆனந்தத்தைத்தரும்!!


 

40 comments:

  1. எங்க ஊரு..

    என்னால மறக்கவே முடியாத இடம்..

    இங்க ஒன்னாங் கிளாஸ் படிக்கும் போது டூர் போனப்ப ஆனந்த்துக்கும் எனக்கும் சண்ட, அவன் கீழ தள்ளி விட்டுட்டேன், கீழே விழுந்த அவனுக்கு பல்லு உடஞ்சு போச்சு.. :-)))))

    எனக்கு தெரியாத சில விசயங்களை தெரிந்து கொண்டேன்..

    கோவில் நிர்வாகம் மூலமா இங்க மயில் அதிகமா வளக்கிறாங்க



    ReplyDelete
  2. தோரண மலை தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா...

    தேரையர் அவர்களின் சமயோசித செயல் வியக்க வைத்தது...!

    ReplyDelete

  3. "தோரணமலை!!!"பற்றி வியக்கவைக்கும் தகவல்கள்..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. ஆச்சர்யமான தகவல்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகத் தெரிகிறது.

    ReplyDelete
  5. அற்புதமான ஓர் கோவிலைப்
    பற்றி அபூர்வமான தகவல்கள் தந்ததில் மிக மிக மகிழ்வடைந்தோம்!

    ReplyDelete
  6. இவ்வளவு சிறப்பான மலை வளத்தை அவசியம் பார்க்க வேண்டும். அரிய தகவல்களை பகிர்த்தற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  7. ஆச்சர்யமளிக்கும் அருமையான தகவல்கள்.;)

    ReplyDelete
  8. அகஸ்தியரும் தேரையரும் செய்த கபால சிகிச்சை – படிக்க பிரமிப்பாக இருந்தது. ஆனாலும் அவர்கள் தங்களது சித்த வைத்திய முறையை , பொது மக்களுக்கு பயன்படும் வண்ணம் வெளிப்படையாகச் சொல்லாமல், மூடுமந்திரமாகவே செய்து தமிழனுக்கு கிடைக்க வேண்டிய புகழை தடுத்து விட்டார்கள், என்பது வேதனையான விஷயம்.

    ReplyDelete
  9. மனோ இருக்கிறீர்கள். வெகு நாளாயிற்று. தோரணமலை குறித்து அப்போர்வ தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. ஒரு முறை சென்று வர ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  10. மிகவும் ரம்மியமான இடமொன்றை
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல மனோ அம்மா..
    தள விளக்கம் மிகவும் அழகு..

    ReplyDelete
  11. அபூர்வமான தகவல்கள்! சித்தர்களும் அவர்தம் நூல்களும் நமது பொக்கிஷம் அல்லவா! படங்களை அதிகரித்திருக்கலாம்.

    ReplyDelete
  12. தேரையர் சமாதி ஆன இடமா ? கண்டிப்பாக பார்க்கவேண்டுமே !

    ReplyDelete
  13. தேரையர் பெயர்க்காரணம் அருமை..இது போன்ற இயற்கை பொக்கிஷங்களை காப்பது நம் கடமை.

    ReplyDelete
  14. தோரணமலை பற்றிய விளக்கம் மிக அருமை.
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. தோரணமலை..... இதுவரை கேள்விப்படாத இடம்...

    உங்கள் பதிவு அங்கே போகத்தூண்டுகிறது...

    ReplyDelete
  16. உங்களுடையது சுவாரசியமான அனுபவம் தான் சீனு! இன்னும் சில செய்திகள் உங்கள் மூலமாகத்தெரிந்தன! அன்பு நன்றி!!

    ReplyDelete
  17. என்னையும் தேரையரின் சமயோசிதச்செயல் வியக்க வைத்தது! அந்தக்கால அறிவுத்திறன் அற்புதமானது! வருகைக்கும் கருத்திற்கும் இனிய நன்றி தனபாலன்!

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய‌ நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  19. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  20. தங்களின் மகிழ்ச்சி எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது சகோதரர் ஜனா!

    ReplyDelete
  21. நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வைத்தந்தது ராதாராணி!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  23. எனக்கும் அந்த கபால சிகிச்சை பற்றி படித்ததும் மிகுந்த ஆச்சரியமேற்பட்டது. அகத்தியரும் தேரையும் பற்பல மருத்துவ நூல்களை எழுதி தம்ழர்களுக்காக விட்டுப்போயிருப்பதாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எந்த மொழியில் எழுதப்பட்டன, அவை எங்கே கிடைக்கும் என்பதற்கான விபரங்கள் தெரியவில்லை. கருத்துரை அளித்ததற்கு இனிய நன்றி சகோதரர் இளங்கோ!

    ReplyDelete
  24. நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியளித்தது வித்யா சுப்ரமணியம்! அன்பு நன்றி!! விரைவில் தொடர்பு கொள்கிறேன்!

    ReplyDelete
  25. வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மகேந்திரன்!!

    ReplyDelete
  26. இது வித்தியாசமான, அபூர்வ இடமென்பதால் அதிக படங்கள் கிடைக்கவில்லை நிலா! வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  28. வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் அன்பு நன்றி எழில்!

    ReplyDelete
  29. பாராட்டுக்களுடனான கருத்துரைக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியம்!!

    ReplyDelete
  30. தெரிந்தவர்கள் யாரும் போயிருக்காத அபூர்வமான இடமென்பதால் தான் இதைப்பற்றி எழுதினேன்! கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete
  32. வணக்கம் சகோதரி..!
    என் முதல் வருகை தோரணமலை பற்றியும் அகத்தியர், தேரையர் பற்றியும் வியப்புறும் செய்திகள் தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!

    ReplyDelete
  33. தோரண மலை தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  34. இன்றுதான் நேரம் கிடைத்தது, தங்கள் வலையைப் பார்வையிட. தேரையர் இன்று இருந்தால் எனக்கு மிகவும் பயன்படுவார். இணையத்திற்குள் நுழைந்தால், ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் என்று போய்க்கொண்டே இருப்பதால் தலை குழம்பி வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. சுவையான பதிவு.

    ReplyDelete
  35. தேரை சித்தர் பற்றிய தகவலும் மூளையை பிழந்த அறுவை சிகிச்சையும் தேரைமூக்கினுள் நுழைந்தமையும் ஆச்சரியமாக இருந்தது. சித்தர்களின் பெருமை இப்போது மீண்டும் உலகப்பரப்பில் வெளி வருகின்றது. ஆனால் ஏன் எப்படி எம் பெருமை மறைந்தது அல்லது மறைக்கப்பட்டது என்பதுதான் விளங்கவில்லை

    ReplyDelete
  36. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி இனியா!

    ReplyDelete
  37. பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  38. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா யாக்யஸ்வாமி! தேரையருக்கு இப்படியொரு தேடுதல் இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  39. கருத்துரைக்கு இனிய நன்றி சந்திரகெளரி! சித்தர்கள் பற்றிய நிறைய ஆராய்ச்சிக்கட்டுரைகள் இங்கே தஞ்சை சரஸ்வதி மஹாலிலும் கரந்தையிலும் கூட இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  40. அகத்தியர் தேரையர் வழிபட்ட
    தோரணமலை ஸ்ரீ கோயிலின்
    தொடர்பு எண்கள் 99657 62002; 76959 62002,
    நன்றி .

    ReplyDelete