Tuesday, 23 November 2010

நினைவில் என்றும் சங்கமித்திருக்கும் 10 பழைய திரைப்படப்பாடல்கள்

1960-ஆம் வருடங்கள் தமிழ்த்திரையிசையின் பொற்காலமென்று சொல்லலாம். ஜி.ராமநாதன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் இசையுலகில் அரசாட்சி செய்த காலம். பின்னால் வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் மற்றெல்லா இசையமைப்பாளர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி புகழேணியின் உச்சத்தில் ஏறி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைத் தந்தார்கள். கவிஞர் கண்ணதாசன் படைத்த எத்தனையோ கவிதைகள், இவர்கள் இசையமைப்பால் இனிய பாடல்களாக உயிர் பெற்று பி.சுசீலா, டி.எம்.செளந்தரராஜன், பி.பி.சீனிவாஸ், ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, ஜிக்கி, இவர்களின் குரல்களில் ரசிகர்களை என்றென்றும் மயங்க வைத்தன. சிவாஜி கணேசனும் எம்.ஜி.ராமச்சந்திரனும் உணர்ச்சி மிக்க காட்சிகளை இந்தப் பாடல்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கினார்கள். அதனால்தான் அது பொற்காலமாக அமைந்தது. இசையுலகில். அருமையான பாடல்கள் ஆயிரமிருக்க, என் மனதுக்கு மிக மிக நெருங்கிய பாடல்கள் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன். இக்கால தலைமுறையினர் எத்தனை பேர் இவற்றைக் கேட்டு ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவசியம் கேட்டு ரசிக்க வேண்டும். அப்போதுதான் பழைய பாடல்களின் இனிமை, கருத்தாழம், ராக கம்பீரங்கள் புரியும். இனி என் மனதிற்கு மிக நெருங்கிய பாடல்கள்.. .. .. ..

1. "கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
      கண்டபோதே சென்றன அங்கே"

சுசீலாவின் தீஞ்சுவைக்குரலில் ' கர்ணன்' திரைப்படத்தில் அமைந்த அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் சுத்த தன்யாசி ராகத்தில் தன் காதலன் கர்ணனை நினைத்து சுபாங்கி பாடும் பாடல். அப்படியே உருகிப் பாடியிருப்பார் சுசீலா. கவிஞர் கண்ணதாசனின்

"இனமென்ன குணமென்ன குலமென்ன அறியேன்,
 ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்.
கொடை கொண்ட மதயானை உயிர்கொன்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்"

வரிகளுக்கு சுசீலா தன் தேன் குரலில் உயிர் கொடுத்திருப்பார். எத்தனை முறை கேட்டாலும் அப்போதுதான் புதிதாய்க் கேட்பதுபோல மயங்க வைக்கும் பாடல் இது! எத்தனையோ பாடல்கள் வந்தாலும் சென்றாலும் என்றுமே என் மனதில் முதலிடம் பிடித்த பாடல் இது.

2. " பொன்னெழில் பூத்தது புது வானில்!
      வெண்பனித்தூவும் நிலவே நில்!
      என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை
      சென்றது எங்கே சொல்! சொல்!!"

இதுவும் அதே விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதையில் திருமதி. சுசீலாவும் திரு.டி.எம்.செளந்தரராஜனும் இணைந்து பாடிய பாடல்! பட்டி தொட்டிகளில் எல்லாம் அன்று இசைத்த, பிரபலமான பாடல்! கீழ்க்கண்ட

“ தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
  எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்!
  உன்னிரு கண் பட்டு புண்பட்ட நெஞ்சினில்
  உன் பட்டுக்கை பட பாடுகிறேன்!!”

வரிகளில் தமிழில் கண்ணதாசன் புகுந்து விளையாடியிருப்பார்! டி.எம்.எஸ். குரலில் வழியும் மென்மையான ஏக்கம் எப்போது கேட்டாலும் மனதை அப்படியே வருடிச் செல்லும்!

3. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
   கனவு கண்டேன் தோழி!
   மனதில்     இருந்தும் வார்த்தைகள் இல்லை,
   காரணம் ஏன் தோழி!

இது எனக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு மனதுக்கு நெருங்கிய பாடல்! மறுபடியும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கண்ணதாசன் கூட்டமைப்பில் சுசீலாவின் தேன் குரலில் வெளிவந்த இனிய பாடல்! பாடலின் கருத்தாழமும் சோகமும் மயங்க வைக்கும் இசையமைப்பும் அப்படியே சுசீலாலிவின் குரலிலிருந்து வழியும்!!

இந்தப் பாடலில் வரும்

இன்பம் சில நாள், துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில், துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?

என்ற வரிகள்-எந்தக்காலத்திற்கும் பொருந்தும்படியாக அத்தனை அழகான வரிகள்!!

4. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
    வளரும் விழி வண்னமே!
   வந்து  விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
   விளைந்த கலை அன்னமே!

சிவாஜி கணேசன் தன் மகனிடம் பாடும் தாலாட்டுப் பாடல் இது! கண்ணதாசன் சுந்தரத் தமிழில் அருமையான வரிகளை எழுதி, அவற்றிற்கு வழக்கம்போல விஸ்வநாதன் ராமமூர்த்து உயிர் கொடுத்து ‘பாச மலர்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடலிது! அண்ணனுக்கும் தங்கைக்குமிடையேயுள்ள பாசத்தை இதை விட வலிமையாக, நெகிழ்வாக எந்த திரைப்படமும் இதுவரை பிரதிபலித்ததில்லை. இனியும் இது போன்ற அருமையான படம் வருமா என்பதும் சந்தேகமே! மகனுக்குப் பாடும் தாலாட்டுப் பாடலாக முதலில் உருவெடுத்தாலும் அண்ணனும் தங்கையும் பிரிந்திருக்கிற சோகத்தைத்தான் இந்தப் பாடல் அதிகமாகப் பிரதிபலிக்கும். அந்தக் காலத்தில் யார் இந்தப் படத்தைப் பார்த்தாலும் கர்சீப் முழுவதுமாக நனைந்து விடும் என்பார்கள்! அதுவும் பாடலின் இறுதியில்

கண்ணின் மணி போல, மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா!- இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா!
உறவைப் பிரிக்க முடியாதடா!

இந்த வரிகளைக் கேட்கையில் விழியோரங்களில் கண்ணீர் கசிவதை எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை!

5. தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்வேன்!
    சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்!

சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த அருமையான டூயட் பாடல் இது. எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி நடித்த ‘படகோட்டி’ என்ற படத்தில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி-கண்ணதாசன் கூட்டணியில் டி.எம்.எஸ்-சுசீலா இருவரும் தங்களின் தேன்மதுரக்குரல்களில் இழைத்த இனிமையான பாடல்! வண்ண மலர்களும் காற்றில் அசையும் மரங்களும் இந்தப்பாடலின் காட்சிக்கு இனிமை சேர்க்கும்.

6. கண்ணுக்குக் குலமேது? கர்ணா!
    கருணைக்கு இனமேது?

கர்ணன் திரைப்படத்தில், கர்ணனை அவனுடைய குலத்தைச் சொல்லி இழிவுபடுத்தியதால் ஏற்பட்ட வேதனையில் அவன் குமைந்து, தளர்ந்து நிற்கையில் அவன் மனைவி சுபாங்கி அவனுக்கு ஆறுதல் சொல்லிப் பாடுவதாய் அமைந்த பாடல். சுசீலாவின் கணீரென்ற குரலின் இனிமையும் ஆழ்ந்த கருத்து அமைந்த வரிகளும் ஒன்றுக்கொன்று இந்தப் பாட்டில் போட்டி போடும்.

பாடலின் நடுவே வரும்

கொடுப்பவர் எல்லாம் மேலாவார்!
 கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்!
 தருபவன் இல்லையா கர்ணா நீ?”

வரிகள் மிகவும் உன்னதமானவை. யாசகம் கேட்பதை இல்லையென்று சொல்லாமல் உடனே வழங்க மிகுந்த கருணையும் சுயநலம் சிறிதும் இல்லாத தன்மையும் வேண்டும். அப்படிப்பட்ட மனதுடைய நீயல்லவா எல்லோரையும் விட மேலானவன் என்று அவன் மனைவி ஆறுதல் படுத்தும் இந்த வரிகளில் கண்ணதாசன் வாழுகிறார்!

7. “ மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
      வாழ்க்கையில் நடுக்கமா?

சுமைதாங்கி என்னும் திரைப்படத்தில் தன் மென்மையான குரலினிமையில் பி.பி.சீனிவாஸ் இந்தப்பாடலை மனமுருகிப் பாடியிருப்பார். துன்பங்களும் சோகங்களும் மனதை ரணமாக்கி ரத்தம் கசிந்திருக்கும் தருணங்களில் இந்தப்பாடலைக் கேட்க நேரும்போது மனம் அமைதியடையும். அந்த மாதிரி அமைதிப்படுத்தக்கூடிய சாந்தமும் ஆழமான வார்த்தைகளும் மயிலிறகு மாதிரி மனதை வருடிக்கொடுக்கும் இனிமையும் இந்தப்பாட்டில் என்றுமே இருக்கும்!

இதில் வரும்

வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதியிருக்கும்!!

என்ற வரிகள் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை!!

8. விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே!
    கண்ணோடு கொஞ்சும்
    கலையழகே! இசையமுதே!

புதையல் என்ற திரைப்படத்தில் இதே கூட்டணியில் அமைந்த கவிஞர் மாயவநாதனின் பாடல் இது!

டி.எம்.எஸ்.செளந்தரராஜன் புகழேணியில் ஏறுவதற்கு முன் இப்பாடலைப்பாடிய சி.எஸ்.ஜெயராமனின் குரல்தான் திக்கெங்கிலும் ஒலிக்கும். இவரது கம்பீரமான குரலில் தமிழ் இனிமை பெற்று சிறந்திருக்கும்! அலைகளினூடே வெகுளித்தனத்துடன் கூடிய காதலும் இளமையுமாய் பாடி நடித்த சிவாஜி-பத்மினிக்கு இந்த இனிமையான பாடல் என்றுமே ஒரு அழியாத சமர்ப்பணம்!

9. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
   தேன்மொழி பேசும் சிங்கார செல்வம்!

ஜி. ராமநாதனின் இசையில் கா.மு.ஷெரீப் எழுதி ‘நான் பெற்ற செல்வம்’. என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது! திரையில் சிவாஜி கணேசன் தன் குழந்தையிடம் பாடுவதாக அமைந்திருக்கும். டி.எம்.எஸ் தன் கம்பீரமான குரலில் அருமையாகப் பாடியிருப்பார். ஜோன்பூரி ராகத்தில் இழைத்த பாடல். தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை குழந்தைகளை முன்னிலைப்படுத்தி எத்தனயோ பாடல்கள் வந்திருக்கின்றன! ஆனால் கருத்தாழத்தில் இதை மிஞ்சிய பாடல் எதுவுமில்லை என்றுதான் சொல்வேன். அதுவும் இப்பாடலின் இடையே சில அருமையான வரிகள் வரும்.

“ தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
  சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு!
  எட்ட இருந்தே நினைத்தாலும்
  இனிக்கும் மணக்கும் உன் உருவம்!”

எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் குழந்தையின் பெருமையை! தொட்டால் மணக்கும் ஜவ்வாது.. சுவைத்தால் மட்டுமே தேன்பாகின் இனிப்பு தெரியும். ஆனால் அந்தக் குழந்தை தொலைவில் இருந்தால்கூட, அதை நினைக்கும்போதே ஜவ்வாதின் மணத்தையும் தேனின் சுவையையும் மனதால் உணர முடியும்! எத்தனை அழகான கற்பனை!

10. நிலவே என்னிடம் நெருங்காதே!
      நீ நினைக்கும் இடத்தில் நானில்லை.

‘ராமு’ திரைப்படத்தில் பிபி.சீனிவாஸ் சோகத்துடன் பாடும் பாடல். படத்தில் ஜெமினி கணேசனும் கே.ஆர்.விஜயாவும் சோக பாவனைகளை முகங்களில் பிரமாதமாகக் காட்டியிருப்பார்கள். தன்னைக் காதலிக்கும் பெண்ணைப் பார்த்து தன் மனவேதனையையும் இயலாமையையும் சொல்லும் பாடல்! அதுவும் பாடலின் நடுவே வரும்

“ கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
  என் கோலத்தில் இனி மேல் எழில் வருமோ?
  பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்.
  என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?

வரிகள் அந்தக் கதாபாத்திரத்தின் சோக உணர்வுகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காண்பிக்கும் வலிமை கொண்டவை! கண்ணதாசனின் சோக மயமான பாடல்கள் சாகாவரம் பெற்றவை!

58 comments:

  1. பத்தும் முத்தான பாடல்கள். பாடம் இடம் பெறும் சூழல், பாடியவர், எழுதியவர், இசையமைத்தவர் பற்றிய விவரங்கள் இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. 'முல்லை மலர் மேலே...' இந்தப் பட்டியலில் இல்லையே?! பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்று தவிர்த்து விட்டீர்களா? அதுவும் சரிதான்!

    கண்ணுக்குக் குலமேது பாடலில், ஒரு இடத்தில், 'உத்தமர் கோபம் வளராதே...' என்று வரும் இடம் எனக்குப் பிடிக்கும்.

    'போய் வா மகளே போய் வா', 'மஞ்சள் முகம் நிறம் மாறி...', 'மழை கொடுக்கும் கொடை...', 'ஆயிரம் கைகள் நீட்டி...', 'இரவும் நிலவும்...' என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் கர்ணன் படத்தில்.

    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. மனோ அக்கா அருமையான பாடல்கள்,திரும்ப நினைக்கவும் பாடவும் வைத்து வீட்டீர்கள்.

    ReplyDelete
  4. 2,3,5,8 என் அப்பாக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

    அதுவும் பொன்னெழில் பூத்தது பாடலை அவர் ரசிக்கறதப் பார்க்கனுமே:)

    ReplyDelete
  5. Fantastic songs. I like 3 & 7 very much. Thanks for choosing wonderful songs & writing in detail about them

    ReplyDelete
  6. அருமையான பாடல் தேர்வுகள்

    ReplyDelete
  7. இனிப்பை எந்த பக்கத்திலிருந்து எடுத்தாலும் அதன் சுவை ஒன்று தான். பழைய பாடல்களும் அப்படித்தான். எந்த பாடல்களை எடுத்தாலும் சிறப்பு தான்.

    ReplyDelete
  8. ஆஹா.. அத்தனையும் முத்துக்கள். அதிலும் பத்தாவது பாடல் தேன்.

    ReplyDelete
  9. அம்மா 1,6 தவிர மற்றபாடல்களை ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. Nostalgia of contemporary days?? :)))
    Good collections.

    ReplyDelete
  11. எனக்குப் பிடித்தவையெல்லாம் உங்களுக்கும் பிடித்திருக்கிறதே என்று வியந்தேன். பின் தோன்றியது, இவற்றை ரசிக்காதவர் உண்டோ என்று.

    ‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..’ இதுவும் இவற்றோடு சேர்க்கலாம்.

    ReplyDelete
  12. அம்மா அருமையான தேர்வுகள்

    நானும் ஒரு பாடல் தொகுப்பு இட்டுள்ளேன் வந்து பாருங்க அம்மா
    http://marumlogam.blogspot.com/2010/11/top-ten.html

    ReplyDelete
  13. அக்கா!
    தங்கள் தேர்வு...இனிது. காலத்தால் அழியாதது. இவற்றைப் பிடிக்காதவர் இருக்கமுடியாது.
    தேர்ந்த முத்துக்களில் இவை சில முத்துக்களே!

    ReplyDelete
  14. உறக்கம் வராத இரவுகளில் தாலாட்டும் அருமையான பாட்டுக்கள் அத்தனையும் ..!!
    தேவையில்லாத ஒரு சத்தம் கூட அதில் இருக்காது..அவர்கள் இசையில் :-))

    ReplyDelete
  15. 4,5,6,9 enakkum romba pidikum.

    ponnonru kandeen, poo vendru kandeen. naan paartha pennai. ennaku avvlava lines theiryathu. aanaal enaku romba pidikum.nalla paaddu.
    ellamee nalla paadu. Ippa irukkira paadal ellaam dappan kuthhu.
    all songs are gem.

    ReplyDelete
  16. ஆஹா சூப்பர் செலக்‌ஷன்.

    ReplyDelete
  17. சிறப்பான தொகுப்பு. இந்தமாதிரி பழைய பாடல்களைக் கேட்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி தனிதான்.
    நன்றி.

    ReplyDelete
  18. “மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?"

    இந்தப் பாடல் வரியைதான் முன்பு யாரோ ஒரு பிரபல எழுத்தாளர் "சேலம் சித்த வைத்தியர் களுக்கு" அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க வைத்துக் கொள்ளலாம் என்று கமெண்ட் அடித்திருந்தார். அவர் பாடலின் உள் வரிகளை கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. என்றாலும் அருமையான வாழ்க்கைப் பாடம் அந்த பாடல்.

    இவைகளோடு "பொன் என்பேன் சிறு பூவென்பேன் ; காணும் கண்ணென்பேன் ; வேறு என்னென்பேன்" சேர்த்திருக்கலாமோ? அடுத்த கலக்க்ஷனில் சேர்த்துக்கலாம் சரியாக்கா!!

    ஆஹா எல்லாப் பாடல்களையும் ரொம்ப சிரமப்பட்டு அருமையாத் தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  20. விரிவான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  21. நீங்கள் எழுதியது சரிதான் சகோதரர் கோபி ராமமூர்த்தி! ' முல்லை மலர் மேலே' பாடலும் முதல் பத்தில் எப்போதும் வருவதுதான். கானடா ராகத்தில் அப்படியே இழைந்து பாடியிருப்பார்கள் சுசீலாவும் செளந்தரராஜனும்! கருத்தாழம் மிக்க வரிகளின் பட்டியலில் அது பின்னுக்குப் போய் விட்டது!

    ReplyDelete
  22. அன்புப் பாராட்டிற்கு இனிய நன்றி ஆசியா!

    ReplyDelete
  23. அன்புச் சகோதரர் கோபி ராமமூர்த்தி!

    கர்ணன் படத்தில் ' மரணத்தை எண்ணிக் கலங்கிடும்', 'உள்ள‌த்தில் நல்ல உள்ளம்', 'என்னுயிர் தோழி' போன்ற அருமையான பாடல்களை விட்டு விட்டீர்களே!

    ReplyDelete
  24. உங்கள் அப்பாவிற்குப் பிடித்த பாடல்கள் என் தொகுப்பில் இருப்பது மகிழ்வைத்தருகிறது வித்யா!

    ReplyDelete
  25. பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் தமிழ் அமுதன்!

    ReplyDelete
  26. Thank you very much for the lovely compliment Mokankumar!

    ReplyDelete
  27. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் மஹாராஜன்!

    ReplyDelete
  28. ரொம்பவும் அருமையான விம‌ர்சனம் சகோதரர் தமிழ் உதயம்!
    தமிழ் என்றாலே இனிமை மாதிரி, பழைய தமிழ்ப்பாடல்கள் எல்லாமே இனிமைதான்! இருந்தாலும் விஸவநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ண‌தாசன் கவிதை என்று வரும்போது இனிமை பலமடங்குகளாய் அதிகரித்து விட்டிருக்கிறது பழைய பாடல்களில்!!

    ReplyDelete
  29. அன்பு நன்றி சகோதரர் குமார்! அவசியம் 'கர்ணன்'படப்பாடல்களைக் கேட்பதுடன் திரைப்படத்தையும் பாருங்கள்!

    ReplyDelete
  30. Thanks a lot for the nice comment Mr.Sukku Manikkam!

    ReplyDelete
  31. நீங்கள் குறித்துள்ள பாடலும் அருமையான ஒன்றுதான் ஹுஸைனம்மா! மிக ஆழமான கருத்துக்கள், பாடலின் அதிகமான இனிமை, புகழ் பெற்ற‌ பாடல்கள், என்று தரம் பிரிக்கையில் இந்தப்பாட்டு மாதிரி பல பாடல்கள் விட்டுப்போய் விட்டன!

    ReplyDelete
  32. மனோ மேடம்....

    அசத்தி விட்டீர்கள் அசத்தி.... எல்லா பாடல்களிலும் எந்த படத்தில் இடம் பெறுகிறது என்ற தகவலை தந்திருக்கலாம்...

    “அம்பிகாபதி” படத்தில் வரும் மிக இனிமையான பாடல்கள் உங்கள் லிஸ்டில் இல்லையே...

    1) முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

    2) மாசிலா உண்மை காதலே

    3) மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

    போன்ற இனிமையான பாடல்களை சேர்த்துக்கொண்டே போனால், பதிவு பல பாகங்களாக வர வேண்டியிருக்கும்...

    ஆனாலும், நீங்கள் தந்துள்ள கர்ணன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று....

    ReplyDelete
  33. அன்பு நன்றி தினேஷ்குமார்!
    உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்!

    ReplyDelete
  34. தங்களின் இனிய கருத்துக்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் யோகன்!

    ReplyDelete
  35. கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!
    நீங்கள் சொன்னது மாதிரி, சாதாரணமாய்க் கேட்கும்போதைவிட, இரவு நேரத்தில் அதன் நிசப்தத்தில் இந்தப்பாடல்களைக் கேட்பது இன்னும் இனிமை!

    ReplyDelete
  36. ராமலக்ஷ்மி said...

    பத்தும் முத்தான பாடல்கள். பாடம் இடம் பெறும் சூழல், பாடியவர், எழுதியவர், இசையமைத்தவர் பற்றிய விவரங்கள் இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. நல்ல பகிர்வு. நன்றி.


    ...Exactly!

    ReplyDelete
  37. அக்கா,அருமையான கலெக்ஷன்.இன்னும் கொஞ்சம் லிஸ்ட் போடுங்கள்.

    ReplyDelete
  38. 10 பாடல்களில் எனக்கு ஒரு பாட்டு ( முதல் பாட்டு) மட்டும் தான் தெரியாது.. ஹய்யோ ரொம்ப கொசுவத்தி ஏத்திவிட்டுட்டீங்க :)

    ReplyDelete
  39. அருமை...அற்புதம்..அந்த பாடல் “கண்கள் எங்கே..’
    கேட்டு விட்டு தூங்கி விட் வேண்டும்..கர்ணனின் மனை வி சுபாங்கி என்பது ஒரு புதிய தகவல்..

    ReplyDelete
  40. அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை. மனம் சஞ்சலப்படும் போதெல்லாம் கேட்டே இனியவை. நன்றி அம்மா.

    ReplyDelete
  41. டியர் மனோ.
    ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் இணையத்தில் இவ்வளவு எழுதி இருப்பதே இப்போதுதான் தெரியும். எப்படி இருக்கிறீர்கள். நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். மாத நாவல் சற்று குறைத்துக் கொண்டேன். மற்றபடி நல்ல புத்தகங்கள் நேரடியாக வந்து கொண்டிருக்கிறன. நீங்கள் கூடத்தான் உங்கள் favourite books இல் உன்னிடம் மயங்குகிறேனைக் குறிப்பிடவில்லை. சமீபத்தில் உப்புக் கணக்கு என்ற புதினம் எழுதி உள்ளேன், கிடைத்தால் வங்கிப் படிக்கவும். நன்றி.

    ReplyDelete
  42. http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  43. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். பிளாக் மூலம் ந நட்பு புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  44. ”மடி மீது தலை சாய்த்து, விடியும் வரை உறங்குவோம்..மறு நாளும்..” இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடல் முடியும் போது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது அதனினும் சுகம்!

    ReplyDelete
  45. பாராட்டிற்கு அன்பு நன்றி சித்ரா!

    ReplyDelete
  46. அன்பு நன்றி ஸாதிகா! நல்ல பாடல்கள் நிறைய விட்டுப்போய் விட்டன. அவசியம் அடுத்த தொகுப்பில் போடவேண்டும்!!

    ReplyDelete
  47. இலா! அவசியம் அந்த முதல் பாடலைக் கேளுங்கள். நிச்சயம் அது உங்களை மயங்க வைக்கும்!!

    ReplyDelete
  48. உங்களின் நிறைவான பாராட்டு மிகவும் மகிழ்வைத்தந்தது சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!
    ‘ கண்கள் எங்கே’ பாடலை அதன் இனிமையான இசைக்காகவும் சுசீலாவின் மயங்க வைக்கும் குரலுக்காகவும் என்றுமே மறக்க இயலாது!
    நீங்கள் எழுதிய ‘மடி மீது தலை வைத்து’ பாடல் அதன் காட்சியமைப்புக்கு பெயர் போனது! அருமையான பாடல்!

    ReplyDelete
  49. முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி சிவகுமாரன்!
    நீங்கள் சொன்னது மாதிரி இந்தப் பாடல்களெல்லாம் காலத்தால் அழியாதவை!

    ReplyDelete
  50. அன்பு வித்யா!

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி! நம் நட்பு புதுப்பிக்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!!

    ReplyDelete
  51. very nice selection, beautiful songs madam

    ReplyDelete
  52. இப்பதிவை இண்ட்லியுடன் இணைத்து, கூடவே ஓட்டும் அளித்து பிரபலமாக்கிய‌ அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி!!கூடவே இணைந்து ஓட்டளித்த Asiya, Sriramandhaguruji, Kousalya, karthiVk, avbi, RameshKm, Romesh, maragatham, Shruvish, kakkoo, Ezhuththukkai, Vedha, Ganpath, Tamilz, rajesh, Boopathy, Tharun, Kiruban, Sudhir, makiz, idukaiman, Jailani, Malgudi, Abdhulkadhar, Dev, Razak, rgopi3000, Varothayann, Chithrax, Maharajan, Sara அனைவருக்கும் என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  53. அமுதைப் பொழியும் நிலவே ...இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்

    ReplyDelete