Monday, 27 May 2013

முத்துக்குவியல்-20!!

அஞ்சலியாய் சில முத்துக்கள்!!



நேற்று மறைந்த பின்னணிப்பாடகர் திரு.டி.எம்.எஸ் செளந்திரராஜன் கணக்கிலடங்காத நினைவலைகளையும் அதிர்வலைகளையும் பல்லாயிரக்கணக்கான இதயங்களில் தனது மறைவிற்குப்பின்னால் ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேன்டும். நவரசங்களில் எத்தனைப் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்! அவரது குரலினால் நடிகர்களின் நடிப்பு சிறப்படைந்ததா அல்லது நடிகர்களின் நடிப்பினால் அவரின் இசைக்கு மெருகேறியதா என்று அந்தக்காலத்திலேயே பட்டிமன்ற ஸ்டைலில் விவாதங்கள் நடந்ததுண்டு.

துன்பமான நேரங்களிலும் மன அமைதி இழந்து தவிக்கும் காலங்களிலும் அருமருந்தாய் இதமளிக்கும் சக்திகளில் இசைக்கே முதலிடம் இருக்கிறது. மகிழ்வான வேளைகளிலும் மனதை மெய்மறக்க வைக்கும் சக்தியும் அதே இசைக்கே இருக்கிறது.

ஒரு முறை நாங்கள் இங்கே லக்ஷ்மண் ஸ்ருதி தலைமையில் பின்னணிப்பாடகர்கள் ஹரிணி, மனோ, சுஜாதா, ஸ்ரீனிவாஸ் கலந்து கொள்ளுமாறு ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த சமயம், நான் திருமதி. ஹரிணியிடம் பேசிக்கொண்டிருந்த போது
 ‘ துன்பங்களினால் துவளுபவர்களுக்கு உதவி செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால் மனதை அமைதிப்படுத்தி துன்பங்களை மறக்கச் செய்யும் சக்தி இசைக்கு மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இதயத்திற்கு அமைதியையோ மகிழ்ச்சியையோ தருகிறீர்கள்!’ என்றேன். அதற்கு அவர் ‘ உங்களை மாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்களினால் தான் இந்த மாதிரி பாக்கியம் கிடைத்திருக்கிறது’ என்று தன்மையாக பதிலளித்தார்!

அது போல அமரர் டி.எம்.செளந்திரராஜனின் பல்லாயிரம் பாடல்கள் இன்றைக்கும் சாகாவரம் பெற்று ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன!

அவர் பாட ஆரம்பித்த சமயத்தில் நல்லதங்காள் என்ற படத்தில் ‘பொன்னே புது மலரே’ என்ற பாடலைப் பாடியிருந்தார். ரொம்ப நாட்களாய் தேடிக்கொண்டிருந்த அந்தப்பாடல் சமீபத்தில் கிடைத்து பதிவு செய்ததும் அப்படியொரு மகிழ்ச்சியேற்பட்டது!

அண்னன் தங்கை பாசப்பிணைப்பில் பாடிய
‘ மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் எத்தனைக் கண்களைக் குளமாக்கியது அன்று! மயக்கும் இசையமைப்பிற்காக, தெளிவான, தேனிசைக்குரல்க‌ளுக்காக, தமிழின் இனிமைக்காக நான் எப்போதும் ரசிக்கும்
ஒரு பாடல் இது!!


 


அவரின் ஒரு பாடல் சொன்னது போல ‘ இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா!’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன! அவரின் தேனிசைக்குரல் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும்!

ரசித்த ஒரு ஆங்கில வாசகம்!

It is greater to give a handful of rice
with love and honesty
than to give a thousand dollars
with the desire for name and fame!!

வெற்றி முத்து!



ஒரு வழியாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிவிற்கு வந்தது. நேற்று இரவு இந்த நேரம் இரவு 11.30 வரை [ இந்திய நேரம் ஒரு மணி] அமர்ந்து என் மகனுடன் பார்த்து ரசித்ததில் பதிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது! மும்பை இந்தியன்ஸ் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த 10 நாட்களில் மாட்ச் ஃபிக்ஸிங் காரணமாக இந்திய கிரிக்கெட் ஆடிப்போயிருப்பதும் சென்னை அணியைப்பற்றி சரமாரியாக தவறான தகவல்கள் வந்து கொண்டிருப்பதும்கூட சென்னையின் தோல்விக்குக் காரனங்களாக இருக்கலாம் என்பது  பலருடைய கருத்து!! எங்களுடைய உணவகத்தில் இரவு சாப்பிட வந்தவர்கள் முகங்களில் அத்தனை சோகம், சென்னை தோற்று விட்டதில்!!

 படங்கள்: கூகிளுக்கு நன்றி!!

18 comments:

  1. //அவரின் தேனிசைக்குரல் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும்!//

    ஆம். அவரின் புகழும், தேனிசைக்குரலும் எப்போதும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.

    அழகான முத்துக்குவியலுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  2. TMS அவர்களின் குரல் இவ்வுலகம் இருக்கும் வரை ஒலித்துக் கொண்டிருக்கும்...

    எனக்கென்னமோ MI தான் வெற்றி பெறும் என்று தோன்றியது... மும்பை இந்தியன்ஸ்க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அவரின் தேனிசைக்குரல் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும்!

    ReplyDelete
  4. இரண்டு நாட்களாக அவரின் பாடல்கள் புற்றீசல் போல பல்வேறு நினைவுகளைக் கிளறியபடியே இருக்கிறது.

    அவரின் இசைதான் இதற்கும் மருந்து.
    மனதின் ஆழத்திலிருந்து அந்தக் கலைஞனுக்கு நெகிழ்ச்சியான அஞ்சலி மனோ அக்கா.

    ReplyDelete
  5. டி.எம்.எஸ். அவர்களது பாடல்கள் என்றென்றும் அழியாதவை. பாடல்கள் இருக்கும் வரை அவரது புகழும் இருப்பது நிச்சயம்.

    சிறப்பான முத்துக் குவியல்.

    ReplyDelete
  6. டி .எம் .எஸ் அவர்களின் குரல் காலாத்தால் அழியாதது ...உலகம் உள்ளவரை அவர் குரல்நம் இதயத்தில் ஒலிக்கும்.முத்துக்குவியல் அருமை

    ReplyDelete
  7. உணர்ச்சிக் குவியலாக ,மகா பாடகராக விளங்கிய ஒருவரை எவ்வளவு போற்றினாலும் தகும். நம் யாவரின் அஞ்ஜலிகள் அவருக்கு. முத்துக் குவியல் தற்செயலாகக் கிடைத்தது.
    அருமையான தளம்.

    ReplyDelete
  8. முத்துக் குவியலைப் பார்த்தேன். நன்றாக யிருக்கும் இது நம் கண்ணில் படவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். டி,எம் எஸ் என்றும் நிலைத்து நிற்பவர். இறந்தும் வாழ்பவர்.

    ReplyDelete
  9. டிஎம்எஸ் அவர்களின் இனிய குரலால் துயில் களைந்து நாளெல்லாம் அக்குரலுடனேயே பயணித்து அக்குரலின் தாலாட்டிலேயே உறக்கம் பிடிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருத்தியாய் இருப்பதில் உங்களோடு நானும் பெருமை கொள்கிறேன்.

    பகிர்ந்துகொண்ட முத்துகள் அனைத்துக்குமாய் பாராட்டும் நன்றியும் மனோ மேடம்.

    ReplyDelete
  10. வருகை தந்து பாராட்டியதற்கும் வாழ்த்தியடத‌ற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  11. ச‌ச்சின் விளையாடத்தொட‌ங்கிய‌திலிருந்து அவரின் விளையாட்டை நாங்கள் என்றுமே ரசிக்காமல் விட்டதில்லை. எங்கள் வீட்டில் எல்லோருமே மும்பை இந்தியன்ஸ் தான் ஜெயிக்க விரும்பினோம்! அது போலவே ஜெயித்து விட்டது!

    கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

    ReplyDelete
  12. வ‌ருகைக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நிறைந்த‌‌ ந‌ன்றி ராஜ‌ராஜேஸ்வ‌‌ரி!

    ReplyDelete
  13. ரொம்ப‌ நாட்க‌ள் க‌ழித்து வ‌ருகை தந்ததற்கும் க‌ருத்துரை வ‌ழ‌ங்கிய‌த‌ற்கும் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி சு‌ந்தர்ஜி!
    நீங்க‌ள் சொல்வ‌து உண்மை தான்! அவ‌ர‌து ம‌றைவு அவ‌ரின் பாட‌ல் வ‌ழி வந்த‌‌‌‌‌
    பல்வேறு ப‌ழைய நினைவலைகளைக் கிளறி விட்டு விட்டது!

    ReplyDelete
  14. பாராட்டுக்கும் வருகைக்கும் அன்பு நிறைந்த‌ நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  15. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!!

    ReplyDelete
  16. முதல் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இதயம் நிறைந்த நன்றி சகோதரி காமாட்சி!

    ReplyDelete
  17. அழகான பாராட்டிற்கும் சிற‌ப்பான கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  18. இவ்வுலகு உள்ளவரை டி.எம்.எஸ் அவர்களின் குரலும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
    சாகா வரம் பெற்ற குரலல்லவா அவரின் குரல்.

    ReplyDelete