Monday, 20 February 2017

பேலியோ டயட்!!!

கோவையைச் சேர்ந்த நியாண்டர் செல்வன் தற்போது அமெரிக்காவின் வின்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.



சில வருடங்களுக்கு முன் இவருக்கு ஆரம்ப நிலை சர்க்கரை இருப்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிய நேர்ந்தது. அது தெரிந்ததும் இவர் அதிர்ந்து போய் விட்டார். காரணம், இவருடைய அப்பா, பெரியப்பா, பாட்டி அனைவருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருந்து வந்தது. இவரின் தந்தை கடைசி வரை தினம் மும்முறை இன்சுலின் போட்டுக்கொண்டிருந்தார். இவரது பாட்டி அதிக சர்க்கரை நோயால் மாரடைப்பால் இறந்துபோனார். இவரின் அம்மா வழி தாத்தாவும் சர்க்கரை நோய், டிமென்ஷியா நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததால் இவருக்கும் சிறு வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுமென்ற நினைப்பு இருந்ததால் உடற்பயிற்சியிலும் குறைந்த அளவு கொழுப்பு இருக்கும் உணவை உண்பதிலும் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த‌தால்  தனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டிருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மருத்துவரிடம் சென்றால் இவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருந்த உணவைத்தான் அவர்களும் எடுக்கச் சொன்னார்கள். நடைப்பயிற்சி, உடைப்பயிற்சியையும் விட்டு வைக்கவில்லை. இனி இவற்றை நம்பிப்பயனில்லை என்று நினைத்து பாடி பில்டிங் துறையில் பயன்படுத்தப்படும் லோ கார்போ டயட் பற்றிய நூல்களை படிக்க ஆரம்பித்தார். பேலியோ டயட், அட்கின்ஸ் டயட், போன்ற உணவு முறைகளைப்பற்றி படித்த போது அவற்றில் அசைவ உணவு வகைகள், அதுவும் கொழுப்பு மிகுந்த உணவுகள், வெண்ணெய் முதலியவற்றை எடுக்கச் சொல்லியுள்ளதை கவனித்தார்.

இவரது நாற்பதாவது வயதில் அது வரை கடைபிடித்து வந்த சைவ உணவை விட்டு அசைவ உண‌விற்கு மாற ஆரம்பித்தார். மூன்றே மாதங்களில் 12 கிலோ எடை இறங்கியது. சர்க்கரை நோயும் இரத்த அழுத்த நோயும் இவரை விட்டு ஓடிப்போயின. இப்படித்தான் இவர் பேலியோ டயட்டை கண்டறிந்தார்.

பாரம்பரிய உணவுகளான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றை வெளிநாடு நிறுவனங்கள் கனோலா, சூரியகாந்தி எண்ணெய்கள் மூலம் அழித்து வருகின்றன என்று இவர் குற்றம் சாட்டுகிறார். மருந்து கம்பெனிகள் ஸ்டாடின் விற்பனையில் பல கோடி ரூபாய்களை ஈட்டுவதாகவும் குப்பை உணவுகளை விற்று அந்நிய கம்பெனிகள் கல்லா கட்டுவதாயும் இவர் கூறுகிறார்.

முக நூலில் 30 பேருடன் ஆரோக்கியம் நல்வாழ்வு என்ற குழுவை இவர் ஆரம்பித்த போது அனைவரும் இவரை கிண்டல் செய்திருக்கிறார்கள். அதன் பின் இவரது பேலியோ டயட் முறையால் அதைப் பின்பற்றியவர்கள் ஒவ்வொருத்தரும் இரத்த அழுத்தத்திலிருந்தும் சர்க்கரை நோயிலிருந்தும் வெளியேற, இவரது குழுமம் வளரத்தொடங்கியது. இப்போது இவரது குழுமத்தில் 70000 பேர்கள் இருக்கிறார்கள். அதில் பல மருத்துவர்களும் அடக்கம். இவரது குழுமத்தில் மாதந்தோறும் 1500 மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் வெளியிடப்படுகின்றன. அவற்றைப்பார்த்து டயட் அறிவுரை இவரது குழுமம் கூறி வருகிறது.
பேலியோ டயட் பற்றிய இவரின் கருத்துக்கள் 25 வாரங்கள் தினமணியில் தொடர்ந்து வெளி வந்தது. மேலும் இவரது கட்டுரைகள் மல்லிகை மகள், தினகரன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வெளி வந்தன.

பேலியோ டயட்  சர்க்கரை வியாதியை எப்படி குணப்படுத்துகிறது?

No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை.




நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம். இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும்.

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.

சர்க்கரை வியாதியை வரவழைப்பது மாவுச் சத்து நிரம்பிய அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானிய உணவுகள். இவர் பேலியோ உணவுக்கு மாறுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட் சாப்பிடும்போது பசி முழுவதுமாக அடங்கி விடுகிறது. முட்டையில் துளியும் மவுச்சத்து இல்லையென்பதால் இரத்தத்தில் துளியும் சர்க்கரை ஏறாது. 2, 3 மணி நேரங்கழித்து அவரது சர்க்கரை அளவு குறையும். மதியமும் இரவும் இது போல பேலியோ டயட்டை பின்பற்றும்போது அவரது சர்க்கரை அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு சில மாதங்களில் உடலில் இயல்பானதாக மாறி விடும்.

கொலஸ்ட்ரால் நமக்கு நண்பன் என்று கூறுகிறார் இவர். இதயமே முழுக்க முழுக்க சிகப்பு இறைச்சியாலும் நிறை கொழுப்பினால் உருவானது என்றும் மனித உடலில் வேறெந்த உறுப்புக்களையும்விட மூளையில் 10 மடங்கு கொழுப்பு உள்ளது என்றும் கூறும் இவர் ஆண்களுக்கு ஆண்மையை அளிக்கும் TESTOSTERONE  என்ற ஹார்மோனும் பெண்களுக்கு பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனும் சுரப்பதற்கான மூலப்பொருளே கொலஸ்ட்ரால் என்று இவர் புள்ளி விபர‌ங்களைத்தெரிவித்து கொழுப்பு எந்த அளவிற்கு உடலுக்கு நன்மையை அளிக்கிறது என்று மேலும் சில விபரங்கள் சொல்கிறார்.

தொடரும்...


38 comments:

  1. எல்லோராலும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாத ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள்.

    ReplyDelete
  2. இதை பற்றிய பல சந்தேகங்கள் இருக்கின்றன...

    Diabetes மருத்துவர்கள் ஏன் பரிந்துரை செய்வதில்லை...?

    ReplyDelete
    Replies
    1. பரிந்துரை செய்யும் மருத்துவர்கள் இருக்கின்றார்கள்! அவர்கள் பேலியோவினால் பயனடைந்து "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!" என்று எண்ணுபவர்கள். மற்றவர்கள் அவர்கள் படித்த புத்தகத்தில் அப்படியெதுவும் இல்லை என்பார்கள். மருத்துவத்துறையில் அதிகம் ரிஸ்க் எடுக்க முடியாது அல்லவா?

      Delete
  3. பயனுள்ள தகவல்கள் சகோதரியாரே
    தொடருங்கள்

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்வு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. arumai vaalthukal. hr.baskar video paarthal inum thelivu kidikum.

    ReplyDelete
  6. என் மருத்துவ நண்பரே இந்த முறையைத் தொடர்கிறார். ஆனாலும் நம்பிக்கைதான் வர மாட்டேன் என்கிறது. மேலும் சைவத்தில் இது கிடையாதா? தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சைவத்திலும் உண்டு! தொடரலாம்! பயன் பெறலாம்!

      Delete
  7. வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  8. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஏற்றுக்கொள்ள முடியாத தகவல்கள் என்றேழுதியிருக்கிறீர்கள். இதன் அடுத்த பகுதியை படித்து பார்த்த பின் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    பொதுவாக மருத்துவர்கள் இந்த பேலியோ டயட்டை ஏற்றுக்கொள்வதோ ஒத்துக்கொள்வதோ இல்லையென்று நியாண்டர் செல்வனே தன் புத்தகத்தில் தெரிவிக்கிறார். அதே சமயம் இவரது முகப்புத்தக குழுவில் பல மருத்துவர்கள் அங்கம் வகிப்பதாகவும் கூறுகிறார்.

    திரு.கேபிள் சங்கர், திரு.பொன்.கிருஷ்ணசாமி, எழுத்தாளர் திரு.முருகன் அனைவரும் இந்த பேலியோ டயட் முறையை பின்பற்றி தங்களின் சர்க்கரை நோயை வென்றிருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  11. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நல்லதொரு தகவலுக்கும் அன்பு நன்றி விஜயகுமார்!

    ReplyDelete
  13. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி நாகேந்திர பாரதி!

    ReplyDelete
  14. நல்லதொரு உபயோகமான பதிவு! எனது துணைவியாரும் இதைக் கடைப்பிடித்து 10 கிலோ வரை எடை குறைத்துள்ளார். இரு வேளை எடுத்துக்கொண்டிருந்த இன்சுலினை நிறுத்தி விட்டார்! B.P-க்கான மாத்திரைகளையும் நிறுத்தி விட்டார். கோவை ஹரிஹரன் போன்ற பல மருத்துவர்கள் பைந்துரைக்கிறார்கள். முதலில் எதிர்ப்புத்தெரிவித்த பல மருத்துவர்கள் தாங்கள் கடைப்பிடித்து வெற்றி பெற்ற பின் மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கின்றனர். பொள்ளாச்சி டாக்டர் சுதா அவர்கள் பிள்ளைப்பேறின்மையை சரி செய்யும் என்று கூறுகிறார்.

    ReplyDelete
  15. முதல் வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் அன்பு நன்றி இமயவரம்பன்! தங்களின் கருத்துக்கள் என் பதிவிற்கும் பேலியோ டயட் முறைக்கும் பலம் சேர்க்கின்றன!

    என் மகனுக்கும் [ வெளிநாட்டில் பணி புரிபவர்] இந்த டயட் முறையைப் பின்பற்றுமாறு சொல்லி அவரும் அதை எடுத்து வருகிறார்.

    ReplyDelete
  16. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ஒரு மருத்துவரே நண்பராக இருக்கும்போது அதை விட வசதி என்ன இருக்கிறது? தைரியமாக இதை பின்பற்றலாம்! அசைவம் சாப்பிடாதவர்கள் சைவ உணவுகளை பின்பற்றி தாராளமாக இந்த டயட் முறையை பின்பற்ற‌லாம். அசைவம் அளவிற்கு சைவ கொழுப்பு வகைகள் 100 சதவிகிதம் பலன் தருவதில்லை என்று நியாண்டர் செல்வன் கூறுகிறார். ஆனாலும் கொஞ்சம் மெதுவாக பலன் தெரிய ஆரம்பித்தாலும் படிப்படியாக அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். அடுத்த பகுதியில் என்னென்ன உணவு சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம் என்பது பற்றி எழுதுவேன்! படித்துப்பாருங்கள் ஸ்ரீராம்!

    ReplyDelete
  17. எனக்கு இன்னமும் இந்த பேலியோ டயட் சரியாக புரியாமலே இருக்கு, உங்கள் பதிவு படிச்சபின் முக்கால்வாசி குழப்பம் தீர்ந்துவிட்டது... மீதியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்ன்..

    மனோ அக்கா நீங்களும் பின்பற்றுறீங்களோ?

    ReplyDelete
  18. அருமையான விளக்கமான பதிவு அக்கா ..நானும் பேலியோ முறைதான் தொடர்கிறேன் ..சைவம் ..உடல்நிலையில் நல்ல மாற்றம் மற்றும் எடை குறைந்தும் உள்ளேன் .

    ReplyDelete
  19. @ஸ்ரீராம் நான் சைவ பேலியோதான் ..

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  21. வணக்கம்
    அம்மா
    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. அன்பு அக்கா
    நல்லபதிவு.படித்தேன் .அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.சைவ உணவுகள் பற்றி மரக்காமல் கூறவும்.நன்ரி.

    மீரா

    ReplyDelete
  23. பேலியோ டயட் பற்றிய பலவிதமான ஒத்த கருத்துகளும் மாற்றுக்கருத்துகளும் பகிரப்படும் வேளையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதுகிறேன். தொடர்கிறேன் மேடம்.

    ReplyDelete
  24. கொஞ்சம் காலமாக இந்தப் பேலியோ டயட் பற்றி படித்தும் கேட்டும் வருகிறேன். கடைபிடிக்க தயக்கமாக இருப்பதற்கு சில காரணங்கள்... அசைவத்துக்கு மாற விருப்பமில்லை. இணையான சைவ உணவுகளை தொடர்ந்து பின்பற்ற முடியுமா தெரியவில்லை. நம் ஒருவருக்கு மட்டும் ஒருவிதம். குடும்பத்தினருக்கு வழக்கமான உணவு என்பது பல நடைமுறை சிக்கல் உடையது.

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரா!

    இதில் எதுவும் குழப்பம் இல்லை அதிரா! மாவுப்பொருளை உண்பதால் உடலில் சர்க்கரை ஏறுகிற‌து. அதனால் நம் உடலில் அதிகமான கொழுப்பும் ஏறி தங்கி விடுகிறது. அதற்கு பதிலாக மாவுப்பொருள் இருக்கும் உணவை முற்றிலும் தவிர்த்து,கொழுப்பு சார்ந்த உணவை மட்டும் உண்பதால் உடலின் எரி சக்திக்குத் தேவையான கொழுப்பு கல்லீரலுக்கு தாராளமாகக் கிடைப்பதுடன் கல்லீரல் நன்றாக இயங்கவும் இன்சுலின் சுரக்கவும் இந்த கொழுப்பு உதவுகிறது. மாவுப்பொருளினால் ஏற்படும் சர்க்கரை உள்பட அத்தனை பாதிப்பும் நீங்குகிறது. அவ்வள‌வு தான்!


    ReplyDelete
  26. இந்த டயட் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பது போன்றவைகளுக்கு மிகவும் சரியானது. பிற கோளாறுகள் இருப்பவர்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்பே இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டுமென்று நியாண்டர் செல்வன் அறிவுறுத்தியிருக்கிறார். 60 வயதை நான் தாண்டியவள் என்பதால் நல்லதொரு பேலியோ டயட் எடுக்கும் மருத்துவரை கலந்தாலோசித்து இந்த டயட் எடுக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன். ஆனால் என் மகன் இந்த டயட் எடுத்து வருகிறார் அதிரா!

    ReplyDelete
  27. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்! நீங்களும் இந்த உனவு முறையைப் பின்பற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எப்படி பின்பற்றுகிறீர்கள் என்பதை எழுதுங்களேன்!

    ReplyDelete
  28. பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா ப்ரேம்குமார்!

    ReplyDelete
  29. நெடுநாட்கள் கழித்து வருகை தந்ததற்கும் கருத்துரையிட்டதற்கும் அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  30. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி மீரா! அடுத்த பகுதியில் சைவ பேலியோ டயட் பற்றி அவசியம் எழுதுவேன். அவசியம் உங்கள் கருத்தையும் எழுதுங்கள்!!

    ReplyDelete
  31. அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  32. அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி இமயவரம்பன்!

    ReplyDelete
  33. கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்! நம்மைப்போன்ற‌ இல்லத்தர‌சிகளுக்கு 'நமக்கென்று தனியாக உணவு' என்று வரும்போது அலுப்பு வந்து விடுகிறது. எல்லோருக்கும் சமைப்பதையே நாமும் சாப்பிடுவோம் என்ற உணர்வும் கடைசியில் வந்து விடுகிறது.

    அந்த நிலையிலிருந்து மீறி நமக்கென்ற கவனம் வரும்போது தான் இந்த மாதிரி உணவு முறைகளை பின்பற்ற‌ முடியும். சர்க்கரை இல்லாதவர்கள்கூட எதிர்காலத்தில் அதன் பாதிப்பு வந்து விடாமல் நலமாக வாழ முடியும் என்பது எத்தைகைய சிறந்த அம்சம்?

    ReplyDelete