Tuesday, 10 January 2012

பொங்கலோ பொங்கல்!!!

வழக்கம்போல பொங்கல் திருநாள் 15-1-2012 அன்று வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே கிராமங்களில் பல விதங்களில் சிறப்பாகக் கொண்டாடும் பழக்கங்களும் கொண்டாட்டங்களும்தான் என்றுமே நினைவில் எழும்.




தமிழ்நாட்டில் பல வித சமுதாயங்கள், சமூகத்தினர் பொங்கலை ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். அனைத்துமே சிறப்பான கொண்டாட்டங்கள்தான்!

போகிப்பொங்கல் அன்று பெரும்பாலும் பழைய துணிமணிகளைக் கொளுத்திப்போடுவதும் வீடுகளை சுத்தம் செய்து, காரை வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்து மெருகேற்றுவதும் தான் நடக்கின்றது. அசுத்தங்களையும் குப்பைகளையும் ‘ போக்கி’ என்பதுவே காலப்போக்கில் ‘ போகி ’ என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. போகி என்றால் இந்திரனுக்குப் பெயர் என்றும் கூறப்படுகிறது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்ற போது பழைய குப்பைகளளக் கழித்து, வீட்டுக்கு வர்ணம் தீட்டி மெருகு ஏற்றினர் என்று சொல்லப்படுகிறது. கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் ‘ காப்பு கட்டும்’ நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, நவதான்யங்கள் இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் ' காப்பு கட்டுதல்' என்று பெயர். இதனால் கெட்டவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.

பொங்கல் அன்று பொங்கல் பொங்குவதும்கூட பல வீடுகளிலும் பல ஊர்களிலும் மாவட்டங்களிலும் வேறுபடுகின்றன. சிலர் விடியற்காலையே, சூரியோதயம் வரும் நேரம் பொங்கலைப் பொங்குகிறார்கள். சிலர் அந்தி சாயும் நேரம் பொங்கல் பொங்குகிறார்கள். சிலர் நல்ல நேரம் பார்த்து, பெரும்பாலும் உச்சியில் கதிரவனின் கிரணங்கள் மின்னும்போது பொங்கல் பொங்குகிறார்கள்.



கிராமங்களில் மண் அடுப்பில் பொங்கல் பொங்குவது தான் தனிச்சிறப்பு. அதற்கான அடுப்பு தயாரிக்கும் பணி முதல் நாளே நடக்கும். செங்கற்களாலும் களி மண்ணாலும் அடுப்பை தயாரித்து, மெழுகி, அதன்மீது கோலம் போட்டு அழகாக்கி விடுவார்கள். சிலர் வீட்டு முகப்பில் இரண்டு பொங்கல் பானைகள் வைத்து சமைக்கும் அளவிற்கு மண்ணைத் தோண்டி, மேடை கட்டி பானைகள் பதிய கொண்டையும் வைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள்.

பொங்கலுக்கு ஏற்றது கிராமங்களில் தயாராகும் புதிய மண் பானைகள் தான். கழுவி, அதற்கு வெளியே கோலமிட்டு, இஞ்சிக் கொத்துக்கள், மஞ்சள் கொத்துக்கள் வைத்துக் கட்டி, பாலும் தண்ணீருமாய் ஊற்றி அது பொங்கி வந்ததும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவி, புத்தரிசி கொட்டி புது வெல்லமும் புத்துருக்கு நெய்யும் சேர்த்து பொங்கல் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரி சேர்த்து தேங்காய்த்துருவலும் உப்பும் சேர்த்து சமைப்பார்கள். ஏழெட்டு வகைகள் காய்கறிகள் சேர்த்து குழம்பு வைப்பார்கள். சிலர் இதைக் குழம்பாக செய்யாமல் பொரியலாக செய்து பக்க துணைக்கு சாம்பாரும் செய்வார்கள். சில சமூகத்தினர், அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்பது மரபு என்பார்கள்.

அடுத்த நாள் கன்னிப்பொங்கல். திருமணமாகாத பெண்கள் பொங்கல் பொங்குவதால் இது கன்னிப்பொங்கல் என்றும் உறவினர்கள் ஒருத்தருக்கொருத்தர் கண்டு களிப்பது என்பதால் காணும் பொங்கல் என்று பெயர் பெற்றதாகவும் சிறு பிள்ளைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி கொண்டாடும் நாள் என்பதால் சிறு வீட்டுப்பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள். இது ‘கணுப்பிடி’ என்றும் கூட அழைக்கப்படுகிறது. கோவை பக்கத்தில் ‘பூப்பறிக்கும் திருவிழா’ என்பது இந்த காணும் பொங்கலன்று தான் நடைபெறுகிறது. மார்கழி மாதம் கோலங்களில் வைக்கும் சாணத்தை [ இதை சாணிப்பிள்ளையார் என்று கூறுவார்களாம்] அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, இது மாதிரி மாதம் முழுவதும் சேர்த்து வைத்திருக்கும் ‘சாணி பிள்ளையார்களை, எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விட்டு, கோவிலில் பொங்கல் படையல் போட்டு கொண்டாடுகிறார்கள். இன்னொரு சமூகத்தில் ‘கணுப்பிடி’ சகோதர, சகோதரிகளுக்காக கொண்டாடப்படுகிறது. முதல் நாளே, சிறிது சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், அவற்றில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு சாதம், வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று ஒவ்வொன்றிலும் உருண்டை பிடித்து வெளியிலிருக்கும் துளசி மாடத்திற்கருகே இஞ்சி இலைகள், மஞ்சள் இலைகள் பரப்பி அவற்றில் வைத்து, கரும்பு, பழங்கள் வைத்து பூஜை செய்து, வீட்டில் பெரியவர்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறி, மஞ்சளும் குங்குமமும் தந்து வீட்டினுள்ளே அனுப்புகிறார்கள். சில ஊர்களில் துளசி மாடத்திற்குப்பதிலாக ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் இந்த ‘ கணுப்பிடி’ நடக்கும்.

நமது தமிழர்களின் சிறப்பு மிக்க இந்த பொங்கல் பண்டிகை இப்படி எத்தனையோ சிறப்புகளுடன் ஆனந்தத்துடன் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சமுதாய மாறுதல்கள், கலாச்சார மாறுதல்கள் எத்தனையோ ஏற்பட்டுக்கொண்டேயிருந்தாலும் இந்த மாதிரியான நம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார பழக்க வழக்கங்களுக்கும் அவற்றின் சிறப்புக்களுக்கும் என்றுமே அழிவில்லை!!



பொங்கும் பால் போல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அனைத்துச் செல்வங்களும் அனைவருக்கும் நிறைந்து பொங்கி வழிய அன்பின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

படங்கள் உதவி: கூகிள்

52 comments:

  1. உங்கபக்கம் பொங்கல் இன்னிக்கே வந்துடுத்தா? படிக்கும்போதே எங்க கிராமத்துக்கு போய் பொங்கல்பண்டிகை கொண்டாடினாமாதிரி இருந்தது. நம்ம பேரக்குழந்தைகளுக்குத்தான் இந்தமாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் எல்லாம் கிடைப்பதே இல்லே.

    ReplyDelete
  2. பாரம்பர்ய கொண்டாட்ட முறைகளை அறிந்து மகிழ்ந்தேன் .
    உங்களுக்கு என் தைத்திருநாள் வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  3. பொங்கல் பற்றி நல்ல பல தகவல்கள் பொங்கல் போலவே ருசியாக உள்ளன.

    தங்களுக்கும் தங்கள் கூடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சிறுவயதில் வாசலில் தான் பொங்கல் வைக்க பாத்திருக்கேன். ஆனால் சென்னையில் பொங்கல் நடப்பதற்கான அடையாளமே தெரியாது :-) வீட்டுக்குள்ளையே பொங்கல் வைத்து விடுவார்களாம். சிலர் பிரஷர் குக்கர் பொங்கல் தான் :-)

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பொங்கல் கொண்டாட்டம் பற்றிய அருமையான தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்
    திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்த வருட பொங்கல் எங்கு கொண்டாடுறீங்க? நம்ம ஊரிலா? ஷார்ஜா போயாச்சா ?

    Advance பொங்கல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மனோ அக்கா.விளக்கமான அருமையான பகிர்வு.

    ReplyDelete
  9. பொங்கல் வாழ்த்துகள் அக்கா. இங்கே எப்படி கொண்டாடுகிறீர்கள் என்றும் சொல்லுங்க. மண்பானை, மண் அடுப்பு (பார்பெக்யூ செய்வதுபோல) இங்கும் சாத்தியம்தானே!!

    ReplyDelete
  10. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பொங்கல் பற்றி அழகான கண்ணோட்டம். நகரங்களில் பலர் வீடுகளில் குக்கர் பொங்கல்தான். என் பிள்ளைகளுக்கு கிராமங்களில் பொங்கல் கொண்டாடும் வழக்கத்தைக் காட்டவேண்டுமென்று வெகுநாளாய் விருப்பம். காலம் கைகூடும் நாள் தெரியவில்லை.


    அந்த மயில் கோலம் ரொம்ப அழகா இருக்கு. தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  12. இனிய பொங்கல் வாழ்த்துகள். கோலம் அழகு. சின்ன வயதில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடிய நினைவுகளை எழுப்பியது பதிவு.

    ReplyDelete
  13. அப்படியே பொங்கல் மூலம் கிரமம் முழுவதும் எங்களை அழைத்து போய் வந்தது போல் இரு்க்கு மனோ அக்கா

    பொங்கல் வாழ்த்துக்க்ள்.

    ReplyDelete
  14. உங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள், மயில் கோலம் அருமை, என் அம்மாவின் கை வண்ணத்தை நினைவு படுத்தியது.

    ReplyDelete
  15. பொங்கல் சாப்பிட்ட திருப்ப்தி..நன்றி

    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல்
    திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தைத்திருநாள் வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  17. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். கோலம் அழகோ அழகு.

    ReplyDelete
  18. பாரம்பரிய கொண்டாட்டங்களை அழகா சொல்லிருக்கீங்க.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. சகோதரி நேரத்தோடேயே பொங்கல் ஆக்கம் இட்டு விட்டீர்கள். மிக விவரமாக அனைத்தும் எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி. இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். நீண்ட நாட்களாகி விட்டது இங்கு வந்து. ஆக்கத்திற்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  20. கோலம் அழகு.... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நெருக்க‌த்தில் நெருக்க‌டிக்கு ஆளாகாம‌ல், முந்திக் கொண்ட‌ ப‌திவு! மாட்டுப் பொங்க‌ல் ப‌ற்றியும் ரெண்டு வ‌ரி சேர்த்து விடுங்க‌ளேன்... இனிய‌ த‌மிழ‌ர் திருநாள் வாழ்த்துக‌ள் ச‌கோத‌ரி.

    ReplyDelete
  22. பொங்கல் பற்றிய அருமையான பகிர்வு. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ஒரு வாரத்திற்கு முன்னரே பொங்கல் உங்கள் பக்கம் மூலம் கிடைத்தது... மகிழ்ச்சி....

    அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  24. பொங்கலுக்குப் பிற‌கு ஊருக்கு மறுபடியும் அவசர அலுவலாய் 10 நாட்களுக்கு செல்ல இருப்பதால் என் பதிவில் இப்போதே பொங்கல் வந்து விட்டது சகோதரி லக்ஷ்மி! நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! நம் பேரக்குழந்தைகளுக்கெல்லாம் மாடுகள் பற்றியும் கிராமங்களில் இப்படியெல்லாம் பொங்கல் கொண்டாடப்படுவதைப் பற்றியும் தெரிய வாய்ப்பே இல்லை. நாம் தான் வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்க வேன்டும்!!

    ReplyDelete
  25. கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் முதல் வருகைக்கும் அன்பார்ந்த நன்றி ஸ்ர‌வாணி!

    ReplyDelete
  26. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!! உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. கிராமங்களில்தான் வீட்டுக்கு வெளியே பொங்கல் வைக்கிறார்கள் ஆமினா! நகரங்களில் அது இயலாத காரியம்! அலுவலகம் போகிறவர்கள் வீட்டில் பெரும்பாலும் குக்கர் பொங்கல்தான்! கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஆமினா!!

    ReplyDelete
  28. பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஆமினா!!

    ReplyDelete
  29. கருத்தூரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராம்வி!!

    ReplyDelete
  30. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  31. இந்த வருடப்பொங்கலும் ஷார்ஜாவில்தான் மோகன்குமார்! மகன், மருமகள், பேரன் எல்லோரும் இங்கிருக்கிறார்களே!! வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  32. கருத்துக்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி ஆசியா!!

    ReplyDelete
  33. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ரமேஷ்!

    ReplyDelete
  34. iniya pongal vazhtukal. nall azahaa cholliruginga.

    ReplyDelete
  35. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. கிராமங்களில் தான் பொங்கலை ரசிக்க முடியும் கீதா! நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள். எங்கள் கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  37. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  38. அன்பான கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஜலீலா!!

    ReplyDelete
  39. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றி சகோதரர் ராஜகோபாலன்!!

    ReplyDelete
  40. இனிய க‌ருத்துரைக்கும் முதல் வ‌ருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி மனசாட்சி!!

    ReplyDelete
  41. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சினேகிதி!!

    ReplyDelete
  42. வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி வானதி!!

    ReplyDelete
  43. வாழ்த்துக்களுக்கும் நீண்ட நாள் கழித்து வந்து தந்த பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி வேதா!!

    ReplyDelete
  44. கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனங்கனிந்த நன்றி மேனகா!

    ReplyDelete
  45. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி ப்ரியா!

    ReplyDelete
  46. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி நிலா!

    ReplyDelete
  47. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  48. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  49. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி விஜி!

    ReplyDelete
  50. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!!

    ReplyDelete
  51. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. அன்பின் மனோ அம்மா,

    பொங்கல்னா வீட்டில் கேஸ் ஸ்டவ்ல காலங்கார்த்தால எழுந்து குளிச்சு பொங்கல் வடை செய்து சாமி கும்பிட்டு ஆபிசுக்கும் நாலைந்து பேக் எடுத்துக்கிட்டு ஓடி வந்து சேர்ந்தோம்.

    ஆனால் இங்கே நீங்க பகிர்ந்த பொங்கல் பற்றிய விவரங்கள் படிக்கும்போது ஆச்சர்யமாகவும் ஆசையாகவும் இருக்கிறது... ஆஹா இப்படி எல்லாம் கொண்டாடுவார்களா என்று....

    பொங்கலுக்கு வைக்கும் குழம்பு காய் பொரியலில் இருந்து அடுத்த நாள் கன்னிப்பொங்கல் அது எத்தனை விதமாக விவரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அறிய முடிந்தது மனோ அம்மா..

    அன்பு பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனோ அம்மா..

    ReplyDelete